சிசேரியன் பிரசவ தாக்கத்துல இருந்து வெளில வரணுமா? இத செய்ங்க

By Jaya Lakshmi

சுகப்பிரசவம் ஒருநாள் வலியோடு முடிந்து விடும். ஆனால் சிசேரியன் பிரசவம் வலி மிகுந்தது. பிரசவ வலி இல்லை என்பதைத்தவிர ஆபரேசன் செய்த வலியும், தையல் பிரிந்து விடக்கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்வும் பெண்களின் வேதனையை அதிகமாக்கும். சிசேரியன் முடிந்து ஒருவாரம் மருத்துவமனையில் ரெஸ்ட் எடுத்து விட்டு வந்த பின்னர் உடல் பராமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

இன்றைய காலகட்டத்தில் சிசேரியன் எளிதாகி வருகிறது. எனவே பிரசவத்திற்கு முன்பே அச்சப்பட்டு மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம். சுகப்பிரசவம் நடக்கவே நடக்காது என்று முடிவு செய்த பின்னர்தான் சிசேரியன் செய்ய டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். அனஸ்தீசியா கொடுப்பார்களே, மயக்கம் வருமே அதன் பின்னர் என்ன செய்யுமோ? ஏதாகுமோ என்ற அச்சத்திலேயே பல பெண்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள்.

Cesarean delivery Recovery Tips

பிரசவத்திற்குப் பின்னர் வலிகளை வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சை மூலமாக பிரசவித்திருக்கும் தாய்மார்கள் மேற்கொள்ளவேண்டிய உடல் நல பராமரிப்புகளை வீட்டில் உள்ள பாட்டிகளே கூறிவிடுவார்கள். வீட்டில் பெரியவர்கள் இல்லாதவர்கள்

உங்கள் மருத்துவரிடம் வெளிப்படையாக பேசினால் அவர் தரும் ஆலோசனைகளின் படி உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலி நீக்கும் சத்தான உணவுகள்

வலி நீக்கும் சத்தான உணவுகள்

பிரசவம் முடிந்து மயக்கத்திற்குப் பின்னர் கண் விரித்த பின்னர் லெமன் ஜூஸ் குடிப்பது நல்லது. இது உடம்பில் எஞ்சியுள்ள அனஸ்தீசியா வெளியேற வழி செய்யும். குழந்தை பிறந்து 2 வாரம் வரை வலி இருக்கத்தான் செய்யும். அந்த வலியைப் போக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையை மட்டும் சாப்பிடுங்கள். உங்களது வலி, காயம் ஆறவேண்டுமெனில் சரியான உணவு அவசியம். குறிப்பாக, சத்தான உணவு வேண்டும். புரோக்கோலி, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற விட்டமின் சி உள்ள உணவுகள், ஓமேகா 3 ஃபேட்டி ஆசிட் கொண்ட நட்ஸ் ஆகியவை சாப்பிடுவது நல்லது.

தாய்பால்

தாய்பால்

தாய்ப்பால் குழந்தைக்கு சிறந்த உணவு என்று, அதே போல் தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு முக்கியமான ஒன்று. இதனாலே பிரசவம் முடிந்த உடன் குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சிசேரியன் முறையில் குழந்தையை பிரசவித்திருந்தால் தாய் வலுவிழந்தும் மிகுந்த வலியுடனும் இருப்பார்கள். இதனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது கடினமாக இருந்தாலும் சீம்பால் எனப்படும் முதல் பாலை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் கொடுக்கப்படும் முதல் பால் வாழ்நாள் முழுக்க குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. தாய் மயக்கத்தில் இருந்தாலும், கூட எப்படியாவது குழந்தையை பால் குடிக்க வைக்க வேண்டியது அவசியம்.

ஆபரேசன் காயங்கள்

ஆபரேசன் காயங்கள்

வீட்டிற்கு வந்த பின்பு அறுவைசிகிச்சை பிரசவத்திற்கு பின் மேற்கொள்ளும் உடல்நல பராமரிப்புகள் மிகவும் முக்கியமானவை. இதனை வீட்டிற்கு வந்த பிறகும் தொடர வேண்டும். வீட்டின் உள்ளேயே சிறிது நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். இதனால் அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயங்கள் வேகமாக குணமடையும். குளிக்கும் போது உங்கள் அறுவை சிகிச்சை தையல்களை கவனமாக கையாள வேண்டும். குளிக்கும் போது பிளாஸ்டிக் கொண்டு அதனை மூட வேண்டும். பாத் டப் மற்றும் நீச்சல் குளத்தில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பப்பை காக்க மருந்து

கர்ப்பப்பை காக்க மருந்து

குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கு மோசமான மனநிலை இருக்கும். இது இயல்புதான். உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாமல் உங்கள் துணையுடன், குடும்பத்துடன் நேரம் செலவழியுங்கள். இந்த நாட்களில் உங்கள் வேலைகளை குறைத்துக்கொள்ள வேண்டும். 6 வாரங்களுக்கு கனமான பொருட்களை தூக்க முயற்சி செய்யக்கூடாது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் உடலின் நீர்சேர்க்கை அதிகமாக இருக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். இளநீர் குடிப்பது நல்லது. செம்பருத்தி டீ குடிக்கலாம். நாட்டு மருந்துகளில் செய்த பிரசவ மருந்துகளை சாப்பிடுவதால் கர்ப்பப்பையை சுத்தமாக்கும்.

தண்ணீர் சிகிச்சை

தண்ணீர் சிகிச்சை

கர்ப்பக்காலம், பிரசவத்துக்கு பின் சில காலம் வரை மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்கும்.வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தினால் கால்களுக்கு சின்ன ஸ்டூல் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் மலம் கழிக்க சுலபமாக இருக்கும். மலச்சிக்கல், நீர் வறட்சி, உடல் சூடு, சிறு சிறு சூடு கட்டிகள் வராமல் தடுக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். தயிர், மோர், யோகர்ட் போன்ற உணவுகளை உண்பதால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

வெள்ளைப்பூண்டு நல்லது

வெள்ளைப்பூண்டு நல்லது

பிரசவம் முடிந்து வந்த உடனேயே நாட்டு மருந்து போட்டு பூண்டு குழம்பு காரமில்லாமல் செய்து கொடுப்பார்கள். நல்லெண்ணெய் அதிகம் சேர்த்து சுக்குக்களி செய்து சாப்பிட கொடுப்பார்கள். எதையும் வேண்டாம் என்று கூறாமல் சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.

புரதம், இரும்புச்சத்து, விட்டமின் சி உள்ள உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் திசுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். காயம் விரைவில் மறையும். ரத்தப்போக்கை ஈடு செய்ய இரும்புச்சத்து உணவுகள் உதவும். பூண்டு குழம்பு, கீரை, காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம். நீங்கள் தும்மல், இருமல் வரும் போது, சத்தம் போட்டு சிரிக்கும்போது ஒரு கையால் உங்கள் வயிற்றை பிடித்துக் கொள்ளுங்கள்.

தழும்புகள் மறைய சிகிச்சை

தழும்புகள் மறைய சிகிச்சை

சிசேரியனுக்கு பிறகு உடல் பருமன், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள், தளர்ந்த சருமம், தழும்புகள் போன்றவை, அவர்களது அழகைக் கெடுப்பது போன்று உணர்வார்கள். இது சிசேரியன் செய்து கொண்ட பெரும்பாலான அம்மாக்கள் சந்திக்க கூடிய சாதாரணமான ஒன்று தான்.

ஆக்வா, ஆலுவேரா, கிளசரின், ஓட் மீல் போன்ற பொருட்கள் கலந்த கிரீம்களைத் தேர்ந்தெடுத்துப் பூசலாம். பிரசவத்துக்குப் பிறகு, நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்தாலே, 50 சதவிகிதத் தழும்புகள் மறையும். பிரசவமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சின்னச்சின்னப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். நடைப்பயிற்சி, ட்ரெட் மில் போன்ற எளிய பயிற்சிகளில் ஈடுபடலாம். சரும மருத்துவரிடம் சென்று தரமான கிரீம்களை பூசிக்கொண்டு பயிற்சியும் செய்துவந்தால் ஸ்ட்ரெச் மார்க் மறையும். உடல் பருமனும் குறையும்.

தாம்பத்ய உறவு

தாம்பத்ய உறவு

பிரசவ முடிந்த பின்னர் வலியின் காரணமாக மற்றும் அவர்களின் உடலின் செய்யப்பட்டிருக்கும் அறுவை சிகிச்சை காயத்தினாலும், பெண்களுக்கு உடலுறவின் மீது ஈடுபாடு ஏற்படுவதில்லை. பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் முழுமையாக குணமடைய 3 முதல் 4 மாதங்கள் ஆகலாம். ஆனால், மருத்துவ ரீதியாக தையல் காயம் சரி ஆவதற்கு 4-6 வாரங்கள் எடுத்துக்கொள்ளும் என்றும், அந்த காலகட்டத்தில் பெண்கள் முழுநேர ஓய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காயங்கள் ஆறிய பின்னர் உறவில் ஈடுபடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, December 7, 2018, 15:50 [IST]
Desktop Bottom Promotion