சிசேரியன் பிரசவமா? இதைக் கொஞ்சம் படிங்களேன்!

By Mayura Akilan

Postnatal Care
பத்துமாதங்கள் கருவை சுமக்கும் போது பார்த்து பார்த்து கவனிக்கும் பெரியவர்கள் குழந்தையை பெற்றெடுத்த உடன் எண்ணற்ற கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். சாப்பாட்டு விசயத்தில் கேட்கவே வேண்டாம் அது கூடாது இது கூடாது என எடுத்ததற்கெல்லாம் தடாதான். சுகப்பிரசவமாவது பரவாயில்லை, சிசேரியன் என்றால் போச்சு.

‘‘சூடா காஃபி சாப்பிடக்கூடாது..! பச்சைத் தண்ணில கை வைக்காதே..! குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது மல்லிகைப்பூ ஆகாது! மாம்பழமா... கூடவே கூடாது!’’ என்று நம் வீட்டுப் பெரியவர்கள் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். உண்மையில் இதெல்லாம் தேவையில்லாத பயங்கள்தான்!

இன்னும் சில வீடுகளில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்ணுக்குத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெறும் பிரெட் மட்டும்தான் சாப்பிடக் கொடுப்பார்கள். இதெல்லாம் ரொம்பத் தவறான விஷயம். பிரசவமான பெண்ணுக்கு சாதாரணமாக, நாம் வீட்டில் சாப்பிடும் உணவு வகைகளைக் கொடுப்பதுதான் சிறந்தது. அப்படிக் கொடுத்தால்தான் பிரசவித்த பெண்ணுக்கு இயல்பாக தாய்ப்பாலும் சுரக்கத் தொடங்கும்.

தண்ணீர் அலர்ஜி

நார்மலான டெலிவரிக்கே சில சமயங்களில், வஜைனாவின் வாய்ப்பகுதியில் தையல் போட வேண்டி வரலாம். சிசேரியனுக்கோ சொல்லவே வேண்டாம். இப்படிக் காயப்பட்ட பெண்களுக்குத் தண்ணீரே கொடுக்கக் கூடாது... அப்படியே கொடுத்தாலும் தொண்டையை நனைக்குமளவுக்குக் கொடுத்தால் போதும் என்று பல வீடுகளில் சொல்வார்கள்.

தண்ணீர் அதிகம் குடித்தால் காயத்தில் சீழ் பிடித்துவிடும் என்பது அவர்களின் விளக்கம். இந்தத் தண்ணீர்க் கட்டுப்பாடு சில நாட்கள்தான் என்றில்லை... சில மாதங்கள் வரைகூட தொடரும்! இதுவும் மிகவும் தவறான விஷயம்.

உண்மையில் இந்தச் சமயத்தில்தான் தாய் நிறைய, தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி நிறைய தண்ணீர் குடித்தால்தான் தாய்க்கு நீர்க்கடுப்பு (யூரினரி இன்ஃபெக்ஷன்) போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

தாய் – சேய் உறவு பாதிக்கும்

சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுத்தால் தாய் – சேய் உறவு பாதிக்கும் என்பது மூட நம்பிக்கையாகும். சுகப்பிரசவத்தைப் போலத்தான் சிசேரியன் செய்து கொண்ட தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுடன் அதீத பாசத்துடன் இருக்கின்றனர்.

தாய்பால் கொடுக்க கூடாது

சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தால் சில நாட்களுக்கு தாய்ப்பால் கொடுக்க விடமாட்டார்கள். இது தவறானது. பிரசவம் முடிந்து சில மணிநேரத்திலேயே தாய்ப்பால் கொடுக்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உடற்பயிற்சி செய்யாதீங்க

சிசேரியன் செய்தவர்கள் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று எச்சரிப்பார்கள். தையல் பிரிந்து விடும். சிக்கலாகிவிடும் என்று எத்தனையோ பயமுறுத்தல்கள் இருக்கும். இதெல்லாம் தவறானது.

முதுகு வலி வரும்

சிசேரியன் செய்வதற்காக தண்டுவடப்பகுதியில் போடப்படும் ஊசியினால் காலம் முழுக்க முதுகுவலியால் அவதிப்பட நேரிடும் என்று பயமுறுத்துவார்கள். இந்த பயம் அவசியமற்றது.

ஓவர் டயட் சொல்லுவாங்க

சிசேரியன் பிரசவம் என்றாலே ரொம்ப சாப்பிடாதே என்று கூறுவார்கள். பால், நெய், அரிசி சாதம் இதெல்லாம் ஒத்துக்காது என்று எக்கச்சக்க கண்டிசன் போடுவார்கள் மாமியார்கள். இதெல்லாம் தேவையில்லாத பயம் என்பது மருத்துவர்கள் அறிவுரையாகும்.

Story first published: Thursday, May 3, 2012, 10:49 [IST]
Desktop Bottom Promotion