வேலைக்குப் போகும் பெற்றோரா? குழந்தைகளை கொஞ்சம் கவனிங்க!

By Mayura Akilan

Child Care
வேலைக்குப் செல்லும் பெற்றோர்களால் குழந்தைகளுடன் சரியாக நேரத்தை செலவிட முடிவதில்லை. அவர்களை சரியாக கவனிக்கவோ, வளர்க்கவோ முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுவதுண்டு. இன்றைய சூழ்நிலையில் இருவரும் வேலைக்கு சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அலுவலக பணி, வீட்டிலும் ஓயாத வேலை என்று இருப்பதால் குழந்தைகளின் எதிர்பார்ப்புகளை சரியாக நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறது. இதனால் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இடையே இடைவெளி அதிகரிக்க காரணமாகிவிடுகிறது. எனவே வேலைக்குப் போகும் பெற்றோர்கள் பணியையும், குழந்தைகளையும் சரியாக கவனித்து சிறந்த முறையில் வழி நடத்தி செல்ல வேண்டும் என்று ஆலோசனை வழங்குகின்றனர் நிபுணர்கள் படியுங்களேன்.

பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் முதலில் எதிர்பார்ப்பது அன்பும், அரவணைப்பும்தான் அதை சரியான அளவில் கொடுக்கவேண்டும். காலையில் அவர்களுடன் செலவிடும் சில மணிநேரங்கள் குழந்தைகளுக்காக என்பதை மனதில் கொண்டு அவர்களுக்குத் தேவையான விசயங்களை அக்கறையுடன் செய்யவேண்டும். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது எதையும் தேடி டென்சன் ஆவதை விட முதல்நாள் இரவே எதையும் திட்டமிட்டு எடுத்துவைத்துவிட்டால் குழந்தைகளுடனான நேரம் மகிழ்ச்சியாக கழியும்.

அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த உடன் குழந்தைகள் நம்முடன் விளையாட வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் நமக்கோ வீட்டு வேலைகள் சரியாக இருக்கும். துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது, சமையல் செய்வது என வேலையில் நுழைந்து விடுவோம். இதனால் குழந்தைகளின் பூப்போன்ற முகம் வாடிப்போகும். எனவே குழந்தைகளையும் நம்முடன் வேலையில் பங்கெடுத்துக்கச் சொல்லாம். இதனால் அவர்கள் நம்முடன் பேசியது போல ஆயிற்று அவர்களும், வேலையை கற்றுக்கொண்டது போலவும் ஆயிற்று. குழந்தைகள் பெற்றோரை மிஸ் செய்யமாட்டார்கள்.

பள்ளியிலும் வீட்டிற்குள்ளேயும் அடைந்து கிடைக்கும் குழந்தைகளை அவ்வப்போது வெளியில் அழைத்துச்செல்லுங்கள். அப்பொழுதுதான் அவர்கள் உற்சாகமாக விளையாடுவார்கள். பெற்றோர்கள் நம்முடன் நேரத்தை செலவிடுகின்றனர் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்படும். வாரம் ஒருமுறை ஷாப்பிங், மாதம் ஒரு முறை சினிமா, பீச், பார்க் என்று வெளியே சென்று வந்தால் அவர்களுக்கு பெற்றோர்களுடனான ஒட்டுதல் அதிகரிக்கும். இது போன்ற சின்ன சின்ன விசயங்கள்தான் வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையேயான உயிரோட்டமான உறவினை தக்கவைக்கும் என்கின்றனர் நிபுணர்கள் பின்பற்றிப் பாருங்களேன்.

Story first published: Tuesday, August 21, 2012, 11:25 [IST]
Desktop Bottom Promotion