குழந்தைங்க வெடி வைக்கும் போது பத்திரமாக பாத்துக்கோங்க...

By Maha

How to take care of the children while bursting crackers
தீபாவளி வந்துவிட்டது. வீட்டில் புதிய ஆடை, பட்டாசு, இனிப்புகள் என்று அனைத்தும் செய்வோம். அதிலும் குழந்தைகள் மிகவும் ஆவலுடன் இருப்பார்கள். அவர்களது ஆவலுக்கு அளவே இல்லாமல் இருக்கும். அவ்வாறு அவர்கள் சந்தோஷமாக இருக்கும் போது தான் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் சந்தோஷமாக இருக்கும் போது மிகவும் கவனக்குறைவுடன் இருப்பார்கள். அதிலும் பட்டாசு வெடிக்கும் போது என்றால் சொல்லவே வேண்டாம். எனவே அவர்கள் வெடி வைக்கப் போகும் முன், அவர்கள் எப்படி இருக்க வேண்டும், காயம் ஏற்பட்டால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்றெல்லாம் சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

பட்டாசு வெடிக்கும் போது இருக்க வேண்டியவை....

* குழந்தைகள் பட்டாசு வைக்க போகும் போது, அவர்களை மறக்காமல் செருப்புகளை அணிந்து கொள்ளுமாறு சொல்ல வேண்டும். இல்லையெனில் அவர்கள் கால்களில் தீக்காயங்கள் ஏற்படும்.

* வெடி வைக்கும் போது குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளை அணிவிப்பது நல்லது. அதிலும் சங்கு சக்கரம் வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

* கம்பி மத்தாப்பு விட்டதும், அதனை அப்படியே கீழே போட்டு விடாமல், அருகில் ஒரு வாளி நீரை வைத்து, அதில் அந்த கம்பிகளை போட்டால், அங்கும் இங்கும் ஓடி விளையாடும் குழந்தைகளுக்கு தீக்காயங்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

* குழந்தைகள் வெடி வைக்க நினைக்கும் போது, அவர்கள் பக்கத்திலேயே பெற்றோர்கள் இருக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு நீளமான ஊதுபத்திகளை கொடுத்து, வெடிக்க வைக்க வேண்டும்.

* முக்கியமாக பூத்தொட்டி வைக்கும் போது, அவர்களை உட்கார்ந்து வைக்கவிடாதீர்கள். ஏனெனில் அவர்கள் ஏற்கனவே பயந்து கொண்டு வெடி வைக்கும் போது, என்ன தான் பெற்றோர்கள் அருகில் இருந்தாலும், அவர்கள் தவறி கீழே விழந்துவிடுவார்கள்.

* குழந்தைகள் பட்டாசு வைக்கும் போது அவர்களை பயமுறுத்த வேண்டாம். பின் அதுவே அவர்களுக்கு அதிக பயத்தை ஏற்படுத்திவிட்டு, காயத்தையும் ஏற்படுத்தும்.

* மேலும் வெடி வெடிக்கும் போது, அதனை உற்று பார்க்க வைக்காதீர்கள். ஏனெனில் சில வெடிகளிலிருந்து வரும் தீத்துகள்கள், அவர்களின் கண்களில் பட்டு, பின் அது அவர்களது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் பார்வையே போய்விடும்.

* வெடி வெடிக்கும் போது, குழந்தைகளை எந்த ஒரு உணவையும் கைக் கழுவாமல் சாப்பிட விடாதீர்கள்.

தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்...

* கண்களில் தீத்துகள்கள் பட்டால், உடனே தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும். அதிலும் கண்களில் எரிச்சல் போகும் வரை கண்களை கழுவி, பின் மருத்துவரை அணுக வேண்டும். முக்கியமாக கண்களை கழுவும் போது குளிர்ந்த நீரை பயன்படுத்தாமல், சாதாரண நீரையே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் குளிர்ந்த நீர் உடலில் இரத்த ஓட்டத்தை குறைத்துவிட்டு, பாதிப்பை ஏற்படுத்தும்.

* வெடி வெடிக்கும் போது சிறிய தீக்காயம் ஏற்பட்டால், உடனே வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவினால் சரியாகிவிடும். ஆனால் பெரிய காயம் ஏற்பட்டால், உடனே 108-க்கு போன் செய்யுங்கள்.

Story first published: Thursday, November 8, 2012, 16:31 [IST]
Desktop Bottom Promotion