பீகாரில் நிதிஷ் குமார் வாகை சூட இதுதான் காரணம்.. அசைக்க முடியாத சக்தியாக்கிய பெண் வாக்காளர்கள்..!!

By Vignesh Rathinasamy

2025 பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மாநில அரசியலின் மையப்புள்ளியாக நிதிஷ் குமார் இன்றும் நீடிப்பதை அழுத்தமாக நிரூபித்துள்ளன. இந்தத் தேர்தல் முழுக்க முழுக்க அவரை சுற்றியே அமைந்தது. அவர் கடந்த 20 ஆண்டுகளில் செய்த சாதனைகளுக்கும், செய்ய தவறிய விஷயங்களுக்கும் இடையிலான ஒரு போட்டி என்றே அரசியல் வல்லுநர்கள் இதை கூறுகின்றனர்.

சவால்களை வென்ற நிதிஷ் குமாரின் அசாத்திய வெற்றி :நிதிஷ் குமார் இந்தப் பிரமாண்ட வெற்றியைப் பெறுவதற்கு முன் பல சவால்களை சமாளிக்க வேண்டியிருந்தது. 20 ஆண்டுகால ஆட்சிக்கு எதிரான மக்களின் இயல்பான சலிப்பு, மாற்றத்தை விரும்பும் மனநிலை, வேலையின்மை குறித்த பொது அதிருப்தி மற்றும் அடிக்கடி கூட்டணி மாறும் தலைவர் என்ற விமர்சனம் ஆகிய அனைத்தையும் கடந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 243 தொகுதிகளில் 207 தொகுதிகளில் அமோகமான முன்னிலை பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதன் மூலம், நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கிறார்.


நிதிஷ் குமாரின் அரசியல் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது, 2005-க்கு முன்னர் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (RJD) ஆட்சியில் நிலவிய 'ஜங்கிள் ராஜ்' என்ற சட்டவிரோத, ஊழல் நிறைந்த பிம்பத்தை அவர் வெற்றிகரமாக மாற்றியதுதான். அந்த மோசமான காலகட்டத்துக்கும், அவர் ஏற்படுத்திய நல்லாட்சி காலத்துக்கும் இடையிலான வித்தியாசம் மிகவும் ஆழமானது. இதுவே, இரண்டு தசாப்தகால ஆட்சியின் மீதான சலிப்பை கூட மக்கள் மறக்க செய்யும் அளவுக்கு வலிமையானதாக உள்ளது. மேலும், கூட்டணி கட்சியான பாஜகவின் முழுமையான ஆதரவும் நிதிஷுக்கு பெரும் பலம் சேர்த்தது.

பெண் வாக்காளர்களே அதிகம் : இந்தத் தேர்தலில் நிதிஷ் குமார் வென்றதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அது பெண் வாக்காளர்கள்தான். ஆண் வாக்காளர்களை விட 8.8 சதவீதம் அதிக பெண்கள் வாக்களித்துள்ளனர். நிதிஷ் குமார் தனது முதல் முழுப் பதவிக்காலம் முதலே பெண் வாக்காளர்களை தனது மிகப் பெரிய வாக்கு வங்கியாக கவனமாக வளர்த்தெடுத்து வந்தார். பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்குவது, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசுப் பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது, மதுவிலக்குச் சட்டம் கொண்டு வந்தது, அண்மையில் முதலமைச்சர் மஹிளா ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களை தொழில் முனைவோர் ஆக்குவதற்கு 1.3 கோடி பேருக்கு வங்கிக் கணக்கில் ரூ.10,000 நேரடியாக வரவு வைக்கப்பட்டது. இது வழக்கத்தை விட நிதிஷ் குமாருக்கு பெண்களின் ஓட்டுகளை அதிகரிக்க செய்துள்ளது.

தேஜஸ்வி யாதவ் தோல்விக்கு என்ன காரணம்..?: ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவின் தோல்வி, 'இந்தியா கூட்டணி'க்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஆகும். அவரது வீழ்ச்சிக்கு 4 முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது.

லாலுவின் பழைய சுமை: இளைய தலைவராக இருந்தாலும், தேஜஸ்வி தனது பெற்றோரின் (லாலு-ரப்ரி தேவி) ஆட்சிக் காலத்தில் இருந்த சட்டவிரோதம், ஊழல் ஆகியவற்றின் சுமையை சுமக்க நேரிட்டது. மக்களால் அவர், பழைய ஆட்சியின் தொடர்ச்சியாகவே பார்க்கப்பட்டார்.

சாத்தியமில்லாத வாக்குறுதி: வேலையின்மை என்னும் முக்கியமான பிரச்சனையை எழுப்பியபோதும், "ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு வேலை" என்ற அவரது தீர்வு, பெரும்பாலான மக்களால் வெறும் கவர்ச்சி முழக்கமாகவும், நடைமுறைக்கு சாத்தியமற்றதாகவும் பார்க்கப்பட்டது.

காங்கிரஸின் பலவீனம்: மஹா கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, எதிர்பார்த்த ஆதரவை ஆர்.ஜே.டி.க்கு அளிக்க தவறியது. பாஜக தனது கூட்டணிக் கட்சியான ஜே.டி.யூ-க்கு அளித்த அதே பலத்தை காங்கிரஸ், ஆர்.ஜே.டி.க்கு கொடுக்கவில்லை.

தோல்வி: தேஜஸ்வி யாதவ், முஸ்லிம் மற்றும் யாதவர் (M-Y) என்ற பாரம்பரிய வாக்காளர் தளத்தை மட்டுமே பெரும்பாலும் நம்பியிருந்தார். இந்தப் பாரம்பரிய வாக்குகளுக்கு அப்பால், இளைஞர்களை உள்ளடக்கிய ஒரு புதிய தளத்தை அவர் உருவாக்க தவறியது அவரது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Credit: Goodreturns

Story first published: Saturday, November 15, 2025, 8:13 [IST]
Desktop Bottom Promotion