வரலாற்று உச்சத்தில் தங்கம், வெள்ளி..! விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமா அரசு? நிதி அமைச்சகம் பதில்

By Devika Manivannan

இந்தியா முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு குறித்து தான் பேசி வருகின்றனர். ஏனெனில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஒவ்வொரு நாளும் புதிய வரலாற்று உச்சத்தை எட்டி வருகின்றன. சென்னையில் சில்லறை வணிகத்தில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்து விட்டது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து பொதுமக்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது .இது ஒரு புறம் என்றால் வெள்ளியின் விலை இன்னும் வேகமாக அதிகரித்து வருகிறது. வெள்ளியின் விலை எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் ஒரு கிலோ 2 லட்சம் ரூபாயை கடந்துவிட்டது .சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிலோ 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாயை எட்டிவிட்டது.

வெள்ளியும் தங்களால் வாங்க முடியாத ஒரு பொருளாக மாறிவிடுமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை ஏற்றத்தை தடுக்க மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது . இந்த சூழலில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் இது தொடர்பாக விளக்கம் தந்திருக்கிறது .


Gold silver investment

மத்திய நிதி துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் அளித்துள்ள பதிலில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்களின் விலைகள் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தான் நிர்ணயம் செய்யப்படுகின்றன என கூறியிருக்கிறார். அதாவது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிர்ணயம் செய்வதில் அரசின் தலையீடு கிடையாது என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பாரம்பரியமாகவே இந்த விலைமதிப்பற்ற உலோகங்களின் விலைகள் சந்தைகளால் தான் தீர்மானிக்கப்படுகின்றன எனக் கூறியிருக்கும் அவர் தங்கம் , வெள்ளி விலைகளை நிர்ணயிப்பதில் அரசாங்கத்திற்கு எந்த பங்கும் இல்லை என தெளிவுபடுத்தி இருக்கிறார். எனவே இந்த விலை ஏற்றத்தை தடுக்க அல்லது இவ்வளவுதான் விற்க வேண்டும் என அரசு நிர்ணயம் செய்யப்போவதில்லை என்பதை அவர் தெளிவாக கூறிவிட்டார்.

தங்கம் : ரூ.1 லட்சம் கொடுத்து உங்களால ஒரு சவரன் நகை வாங்க முடியுமா? தங்கம் வாங்க வேற வழி இருக்கா?

ஆனால் தங்கத்தின் விலையை குறைக்கும் நோக்கில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைத்தது என்பதை அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். இது தவிர பிசிக்கல் கோல்டு அதாவது தங்க நகை, நாணயம் மற்றும் பொருட்களாக மக்கள் வாங்குவதை குறைக்க அரசு கோல்ட் மானிட்டைசேஷன் ஸ்கீம், தங்க பத்திரம், கோல்டு ஈடிஎஃப் ஆகிய திட்டங்களை செயல் படுத்தி இருக்கிறது என சுட்டிக்காட்டி இருக்கிறார் .

இந்தியா அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்கிறது இதனால் ஏற்படும் வர்த்தக பற்றாக்குறை குறைக்க வேண்டும் என்றும் மக்கள் பிசிக்கல் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்வதை தடுக்க இது போன்ற திட்டங்களை அரசு கொண்டு வந்தது என அவர் கூறியிருக்கிறார். 2026 ஆம் நிதி ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் இந்தியா 2,99,768 கிலோ தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறது . அதன் மொத்த மதிப்பு 26 ,514 மில்லியன் டாலர்கள் .

இந்த நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் 28,20,728 கிலோ வெள்ளியை இறக்குமதி செய்து இருக்கிறது இந்தியா. இதன் மதிப்பு 3,219 மில்லியன் டாலர்கள் ஆகும். கடந்த நிதி ஆண்டில் இந்தியா மொத்தமாக 7,57,093 கிலோ தங்கம் இறக்குமதி செய்துள்ளது. அதன் மொத்த மதிப்பு 58,000 மில்லியன் டாலர்கள் அதே வேளையில் 51, 64,372 கிலோ வெள்ளியை இறக்குமதி செய்திருக்கிறது அதன் மொத்த மதிப்பு 4827.25 மில்லியன் டாலர்கள் ஆகும்.

தங்கத்தை அடுத்து வெள்ளிக்கும் செக் வைத்த சீனா!! இனி வெள்ளி விலை எகிறப் போகுது!!

அண்மைக்காலமாக தங்கம் வெள்ளி , விலை உயர்ந்து வருவதற்கு முக்கிய காரணம் புவிசார் பதட்டங்கள் தீவிரமடைந்து வருவது தான் என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் தந்து இருக்கிறது . உலகளாவிய வளர்ச்சி குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவுவதும் ஒரு காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தில் பலரும் முதலீடு செய்கின்றனர் குறிப்பாக மத்திய வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் கணிசமாக தங்கத்தை வாங்கி வைத்திருப்பதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என மத்திய நிதி அமைச்சகத்தின் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Credit: Goodreturns

Story first published: Tuesday, December 16, 2025, 8:33 [IST]
Desktop Bottom Promotion