செங்கோட்டை குண்டுவெடிப்பு.. தீவிரவாத தாக்குதலா..? உள்துறை அமைச்சர் அமித் ஷா பரபரப்பு விளக்கம்..!!

By Vignesh Rathinasamy

இந்தியாவின் தலைநகரான டெல்லியில், வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டைக்கு அருகில் நேற்று மாலை மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில், ஒரு காரில் திடீரென பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த துயரச் சம்பவத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 24 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடித்தது ஹூண்டாய் கார் : இந்த வெடிப்பு ஒரு ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) காரில்தான் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் அதில் 3 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. பொதுவாக, குண்டு வெடிப்புகளில் காயமடைந்தவர்களின் உடலில் சில்லுகள் (pellets) சிதறியிருக்கும். ஆனால், இந்தச் சம்பவத்தில் அப்படி எந்தவிதமான சில்லுகளும் காணப்படவில்லை என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடப்பதாகவும், பல விசாரணை அமைப்புகள் களத்தில் இருப்பதாகவும் காவல்துறை ஆணையர் சதீஷ் கோல்ச்சா தெரிவித்துள்ளார்.


Red Fort Blast Amit Shah Says All Possibilities Under Probe

தீவிரவாதத் தாக்குதலா..?: இந்த விபத்து ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்குமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "சம்பவத்திற்கு காரணம் என்ன என்று இப்போதே உறுதியாக கூறுவது கடினம். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளைத் தடயவியல் துறையும், தேசியப் பாதுகாப்புப் படையும் (NSG) ஆய்வு செய்த பின்னரே எதையும் சொல்ல முடியும்.

இருப்பினும், நாங்கள் அனைத்து கோணத்திலும் விசாரணையும், ஆய்வுகளையும் செய்து வருகிறோம். தீவிரவாதத் தாக்குதல் உட்பட அனைத்துக் கோணங்களிலும் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினார். மேலும், அமைச்சர் அமித் ஷா வெடிப்பு நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டதுடன், இது குறித்து உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆய்வுக் கூட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

கார் உரிமையாளர் கைது : இந்த வெடி விபத்துக்குக் காரணமான காரின் உரிமையாளரை அடையாளம் காண முயன்ற போலீஸார், ஹரியானாவின் குருகிராமில் வைத்து முகமது சல்மான் என்பவரை பிடித்துள்ளனர். அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஹரியானா பதிவு எண் கொண்ட இந்தக் கார், சல்மானுக்குப் பிறகு ஓக்லாவில் உள்ள தேவேந்திரா என்பவருக்கும், பின்னர் அம்பாலாவில் உள்ள மற்றொரு நபருக்கும் விற்கப்பட்டது தெரியவந்துள்ளது. எனவே, இந்த கார் யார் யாருக்கெல்லாம் கைமாறியது என்பது குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக உள்ளனர்.

வெடிபொருள் பறிமுதல் : இந்த சம்பவம் நிகழ்வதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்புதான், அருகில் உள்ள ஃபரிதாபாத்தில் ஒரு காஷ்மீரி மருத்துவரின் வீட்டில் இருந்து சுமார் 360 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 'ஜெய்ஷ்-இ-முகமது' மற்றும் 'அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த்' போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு தீவிரவாதப் பிணையமும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், இந்த வெடிப்பு சம்பவங்களுக்கும், பறிமுதல் சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்து டெல்லி போலீஸ் தற்போது வரை உறுதியான தகவலை வெளியிடவில்லை.

பிரதமர் மோடி இரங்கல் : இந்த துயரச் சம்பவம் குறித்துப் பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அவர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Credit: Goodreturns

Desktop Bottom Promotion