புதுக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்? அறிக்கையில் அந்தப் பெயரை கவனிச்சீங்களா? மேஜர் மாற்றம்!

By Vignesh Selvaraj

சென்னை: தனது ஆதரவாளர்களுடன் செயல்படும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை கழகமாக மாற்றி இருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்ற பெயரில் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தன்னுடன் இருக்கும் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை உருவாக்க வேண்டிய நெருக்கடியில் ஓபிஎஸ் இருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி முறிந்த நிலையில் பாஜக உடன் தஞ்சம் அடைந்தார் ஓபிஎஸ். ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.


OPS Converts AIADMK Cadre Rights Retrieval Committee into Political Party

தற்போது, பாஜக அதிமுக கூட்டணி சேர்ந்துள்ளதால் அந்த அணியில் ஓபிஎஸ் தரப்பு இருக்கிறதா இல்லையா என்பதே உறுதியாகத் தெரியவில்லை. ஓபிஎஸ் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் திமுக பக்கம் சாய்ந்துவிட்டார். அடுத்ததாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தவெக பக்கம் செல்ல உள்ளதாக தகவல்கள் பரபரத்து வருகின்றன.

இதற்கிடையே, சென்னையை அடுத்த வானகரத்தில் டிசம்பர் 10 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில், தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே, கூட்டணியில் இதர கட்சிகளை சேர்க்கும் முடிவை எடுப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டணி குறித்து பேசப்பட்டுள்ளது. பாஜக மேலிடம் கூறியபடி தொகுதிகளுக்கான பட்டியலை கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி சொன்ன விஷயங்களை கேட்டுக்கொண்டு டெல்லிக்குச் சென்றார் நயினார் நாகேந்திரன்.

தமிழகத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அமித்ஷா முக்கிய முடிவுகளை இன்னும் ஓரிரு நாட்களில் எடுப்பார் என்று கூறப்படுகிறது. அமித்ஷா வரும் 15ம் தேதி சென்னை வருவதாக இருந்தது. ஆனால் கூட்டணி விவகாரங்கள் இன்னும் இறுதி செய்யப்படாததால், அவரது வருகை இறுதியாகவில்லை. அதேநேரத்தில் 15 ஆம் தேதி தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்டியிருந்தார்.

இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் தன்னை இணைக்காவிட்டால் முக்கிய முடிவுகளை அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். தற்போது அமித்ஷாவிடம் இருந்து பதில் வராததால், அவரும் தனது நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை வரும் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். ஓபிஎஸ் தரப்பின் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்தை தள்ளி வைக்கும் அறிவிப்பை இன்று வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வம், அந்த அறிக்கையில் மிக முக்கியமான மாற்றத்தைச் செய்துள்ளார். தனது ஆதரவாளர்களுடன் செயல்படும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்” ஆக மாற்றி உள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்ற பெயரில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ். இதுவரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரிலேயே அறிக்கை வெளியிட்டு வந்த ஓபிஎஸ், அதனை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் எனக் குறிப்பிட்டுள்ளதால், அவரது புதிய கட்சியின் பெயர் இதுதானா என்ற விவாதம் தமிழக அரசியலில் எழுந்துள்ளது.

Credit: Oneindia

Desktop Bottom Promotion