சும்மா கிடக்கும் தங்கத்தை வைத்து இப்படி கூட பணம் சம்பாதிக்கலாமா? அதிக லாபம் பார்க்கும் புது யுக்தி.!

By Vignesh Rathinasamy

தங்கத்தின் விலை இந்த ஆண்டு வரலாறு காணாத உச்சத்தில் இருக்கும் நிலையில், பெரும் பணம் படைத்த முதலீட்டாளர்கள் மற்றும் குடும்ப செல்வங்களை நிர்வகிக்கும் அலுவலகங்கள், தங்கள் தங்கத்தை வெறும் பாதுகாப்புப் பெட்டகங்களில் பூட்டி வைப்பதில் திருப்தி அடையவில்லை. பாரம்பரியமாக, தங்கம் என்பது எந்த வருமானத்தையும் தராத ஒரு சொத்தாகவே கருதப்பட்டது. ஆனால், தற்போது இந்த தங்க கட்டிகளை உருக்கு ஆலைகள், நகை வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு வட்டிக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம், நிலையான வருமானம் ஈட்டும் ஒரு புதிய உத்தி உருவாகியுள்ளது.

தங்க குத்தகையின் எளிய சூத்திரம் : தங்க குத்தகை முறை மிகவும் எளிமையானது. இது ஒரு வங்கிக் கடன் போலவே செயல்படுகிறது. ஆனால் டாலர்களுக்கு பதிலாக சொத்து அவுன்ஸ்களில் அளவிடப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்கள் உபரி தங்கத்தை, குத்தகை தளங்கள் அல்லது நிதியாளர்கள் மூலம் கடன் கேட்கும் வணிகங்களுக்கு வழங்குகிறார்கள். இந்த முறையில், தங்கத்தை வைத்திருப்பவர், அதற்காக 2% முதல் 4% வரை வருமானம் ஈட்ட முடியும். SafeGold போன்ற நிறுவனங்களின் மூலம் குத்தகை அளவுகள் பலமடங்கு அதிகரித்துள்ளன.


நகை வியாபாரிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அவர்கள் ரொக்கப் பணத்தை கடனாக வாங்குவதை தவிர்ப்பது மட்டுமல்லாமல், தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை பற்றிய கவலையும் குறைகிறது. அவர்கள், குத்தகை முடிந்தவுடன் கடனாக பெற்ற அதே அளவு தங்கத்தையே திருப்பித் தர வேண்டும். இதனால், தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும், அவர்களின் விற்பனை விலையும், அதை திரும்ப வாங்கும் விலையும் ஒரே சீராக உயர்வதால், அவர்களின் லாபம் பாதுகாக்கப்படுகிறது.

அபாயங்கள் என்ன..?:தங்க குத்தகை மூலம் வருமானம் ஈட்ட முடிந்தாலும், இது வெறும் பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பது போல் அபாயமற்றது அல்ல. உலக தங்கக் கவுன்சில் (World Gold Council) கூறுவது போல, இதில் எதிர் தரப்பு அபாயம் உள்ளது. அதாவது, கடன் வாங்கிய நகை உற்பத்தியாளர் திவால் ஆகிவிட்டால் அல்லது தவறிழைத்தால், முதலீட்டாளருக்கு தங்கத்தை திரும்பப் பெறுவதில் சிக்கல் வரலாம்.

இதை கையாளும் நிறுவனங்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. உதாரணமாக, கடனாக தரப்பட்டு திரும்ப வரும் ஒவ்வொரு தங்க கட்டியின் தூய்மையும் பரிசோதிக்கப்படுகிறது. சில நிறுவனங்கள் காப்பீடு, தீவிர தணிக்கைகள், கேமராக்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றன.

Goldstrom போன்ற நிறுவனங்கள், குத்தகைக்கு விடப்பட்ட தங்கத்தில் செய்யப்பட்ட நகைகளுக்கு ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) குறியீடுகளை பயன்படுத்தி, அதன் நகர்வை கண்காணிக்கின்றன. இதன் மூலம், கடன் வாங்கியவர் தவறிழைத்தால், நகைகளை கைப்பற்றி உருக்கி, உலோகத்தை மீட்க முடியும். எனவே, அதிக வருமானம் ஈட்ட இந்த முறை கவர்ச்சிகரமாக இருந்தாலும், முதலீட்டாளர்கள் கடன் வாங்கும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை கவனமாக சரிபார்ப்பது மிகவும் முக்கியம்.

Credit: Goodreturns

Story first published: Friday, November 21, 2025, 9:28 [IST]
Desktop Bottom Promotion