தங்கம் வெள்ளி விலை: ஒரே நாளில் ரூ.10,000 ரூபாய் உயர்வு!! உலக சந்தையிலும் புதிய உச்சம் தொட்ட விலை

By Devika Manivannan

ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் குறைவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை எனக் கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் இரண்டு முறை விலை ஏறுவதாக இருக்கிறது. தொடர்ந்து நான்கு வர்த்தக நாளாக சென்னையில் தங்கத்தின் விலை உயர்வில் தான் இருக்கிறது.

டிசம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை அன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 12,400க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. திங்கள் அன்று தடாலடியாக ஒரு கிராமுக்கு 170 ரூபாய் விலை உயர்ந்து 12,570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது . அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் செவ்வாய்க்கிழமை என்று கிராமுக்கு அதிரடியாக 200 ரூபாய் உயர்வு கண்டது.


Gold silver investment

இன்றைய தினமும் சென்னையில் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னை பொறுத்தவரை இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 30 ரூபாய் விலை உயர்ந்து 12,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 1,02,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 10 கிராம் தங்கம் 1, 28,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த நான்கு வர்த்தக நாட்களில் மட்டும் ஒரு கிராமுக்கு 440 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது, ஒரு சவரன் என பார்க்கும்போது 3520 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் தங்கத்தின் விலை இப்படி நாளுக்கு நாள் புதிய வரலாற்று உச்சத்தை தொடுவது சாமானிய மக்களுக்கு தங்கத்தை எட்டாக்கனியாக மாற்றி வருகிறது .

தங்க நகை கடன் வாங்க போறீங்களா? ஒரு சவரனுக்கு எவ்வளவு தொகை கடன் கிடைக்கும் தெரியுமா?

24 கேரட் தங்கம் ஒரு கிராம் 13,964 ரூபாய்க்கும் 10 கிராம் 1,39,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது . 18 கேரட் தங்கமும் மக்கள் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துவிட்டது. ஒரு கிராம் 10,675 ரூபாய்க்கும் ஒரு சவரன் 85,400 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரே நாளில் தடாலடியாக 10,000 ரூபாய் உயர்ந்திருக்கிறது . சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 ரூபாய் விலை உயர்ந்து 244 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி பத்தாயிரம் ரூபாய் விலை உயர்ந்து 2 , 44,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. போகிற போக்கில் பார்த்தால் அடுத்த இரண்டு மூன்று தினங்களிலேயே வெள்ளியின் விலை கிராமுக்கு 250 ரூபாயை எட்டிவிடும் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வுக்கு பல்வேறு சர்வதேச காரணிகள் முன்வைக்கப்படுகின்றன . அமெரிக்கா மத்திய வங்கி அடுத்த ஆண்டு வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் என்ற எதிர்பார்ப்பில் தொடர்ச்சியாக முதலீட்டாளர்கள் பணத்தை தங்கம் வெள்ளியின் பக்கம் திருப்பி விடுகிறார்கள். வெள்ளி டிமாண்டிற்கு ஏற்ற அளவு சப்ளை இல்லாததன் காரணமாக அதன் விலையும் உயர்கிறது.

மறைமுகமாக தங்கம், வெள்ளி விலையை உயர்த்தும் அமெரிக்கா , சீனா..!! ஸ்தம்பித்து நிற்கும் உலக சந்தை!!

எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1, 38,423 ரூபாய் என விற்பனையாகிறது . வெள்ளியின் விலை ஒரு கிலோ 2, 23,621 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் வெள்ளி மற்றும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்று உச்சமாக 4,497 டாலர்களை எட்டி இருக்கிறது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 72.4 டாலர்கள் என உயர்ந்து புதிய வரலாற்று உச்சங்களை தொட்டு இருக்கிறது.

Credit: Goodreturns

Story first published: Wednesday, December 24, 2025, 10:13 [IST]
Desktop Bottom Promotion