சல்லி சல்லியா உடையுதா பாமக பிளான்.. அய்யா ராமதாஸை பதற வைத்த திராவிட கணக்கு! திமுகவுக்கு லட்டு சான்ஸ்

By Hema Vandhana

சென்னை: வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. பல கட்சிகளின் கூட்டணி அரசியல் குறித்த நகர்வுகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த சூழலில் பாமக நிறுவனர் ராமதாஸ் இதுவரை தன்னுடைய கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை.. இது அரசியல் களத்தில் கூடுதல் எதிர்பார்ப்பை தந்து கொண்டிருக்கிறது.

வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாமக எந்தப் பக்கம் நிற்க போகிறது என்ற கேள்வி தமிழக அரசியலில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.


PMK Ramadoss DMK

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது, அந்தக் கட்சிக்குள் மட்டுமல்ல, திராவிட அரசியல் களத்திலேயே அதிர்வலைகளை ஏற்படுத்தியது..

பாமக அன்புமணி ராமதாஸ்

ஆனால் பாமகவுக்கு அதிகாரம் என்னிடமே உள்ளது, கூட்டணி பேச்சு என்றால் என்னைத் தான் அணுக வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்த ராமதாஸை புறக்கணித்து, அவரது மகன் அன்புமணியுடன் நேரடியாக பேசி கூட்டணியை உறுதி செய்ததாக அதிமுக அறிவித்தது, மூத்த தலைவர் ராமதாஸின் அரசியலையே சீண்டி பார்த்தது.

17 சீட் அன்புமணி ராமதாஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவுக்கு 17 முதல் 20 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த முடிவில் ராமதாஸ் நேரடியாக இடம்பெறாதது, கட்சிக்குள் அதிகார மோதல் இருப்பதை வெளிப்படையாக காட்டியது.

ஒருபுறம் அன்புமணி அதிமுக பக்கம் நகர்ந்த நிலையில், மறுபுறம் ராமதாஸ் திமுகவுடன் திரைமறைவு பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்ற தகவலும் பரவியது.

திமுகவுடன் கூட்டணி?

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அவர் வரவேற்றதும், ஸ்டாலின் ஆட்சி நன்றாக உள்ளது என பாராட்டியதும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தின. அதே நேரத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன், ராமதாஸ் திமுகவுடன் பேசுவதை மேடையிலேயே குறிப்பிட்டது அரசியல் சூழலை மேலும் தீவிரப்படுத்தியது.

ஆனால், திமுக கூட்டணியில் பாமக இணைவதில் சில சிக்கல் உள்ளதையும் நினைவுகூர வேண்டி உள்ளது... குறிப்பாக, விசிக மற்றும் பாமக இடையேயான நீண்டகால அரசியல் முரண்பாடு, திமுகவுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. பாஜக, பாமக போன்ற கட்சிகளுடன் எந்த உறவும் இல்லை என திருமாவளவன் வெளிப்படையாக அறிவித்திருக்கும் நிலையில், ராமதாஸுக்காக விசிகவை திமுக விட்டுக்கொடுப்பதா, அல்லது விசிகவுக்காக ராமதாஸை தவிர்ப்பதா என்ற கேள்வி திமுக முன்னால் நிற்கிறது... இவை இரண்டுமே எளிதான முடிவுகள் அல்ல.

இரண்டாவதாக

ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைந்தால், அன்புமணிக்கு அதிமுக கூட்டணியில் வழங்கப்படுவது போல தனக்கும் 18 தொகுதிகளுக்கு குறையாமல் கேட்க வாய்ப்புள்ளது. இத்தனை எண்ணிக்கையை திமுக ராமதாஸுக்கு தருமா? அப்படியே தந்தாலும் மற்ற கூட்டணி கட்சிகள் அதை ஏற்பார்களா? என்று தெரியவில்லை.

ஒருவேளை 18-க்கும் கீழ் தொகுதிகளை திமுக ஒதுக்கினால், அன்புமணி தரப்பு அதை விமர்சிக்குமே என்று ராமதாஸ் தரப்பு நினைக்கிறதாம்..

மூன்றாவதாக,

கடந்த தேர்தலில் பாமக இல்லாமலேயே திமுக வெற்றி பெற்றது. தற்போது பிளவுபட்ட பாமகவை கூட்டணியில் சேர்த்தால், வன்னியர் அல்லாத மற்றும் பட்டியலின வாக்குகள் திமுகவுக்கு எதிராக திரும்பும் அபாயம் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நான்காவதாக,

தேமுதிகவையும் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகளும் நடக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில், ராமதாஸை சேர்த்துக்கொள்வது திமுகவுக்கு பலனைக் காட்டிலும் பிரச்சனைகளையே அதிகரிக்கும்.

மேற்கண்ட சிக்கல்கள் உள்ளதால்தான், பாமகவை நேரடியாக கூட்டணியில் இணைப்பதைவிட, அது தனித்து போட்டியிடும் நிலை உருவானால், வட மாவட்டங்களில் வாக்குப் பிரிவு ஏற்பட்டு, அது சாதகமாக அமையும் என்று திமுக கணக்கு போடுகிறதாம்.. ராமதாஸ் தனித்து போட்டியிட்டால், அன்புமணியுடன் ஓட்டுப் பிளவு ஏற்படும்.. அது நேரடியாக அதிமுகவுக்கு பின்னடைவையும் தரும் என்றும் திமுக யோசிக்கிறது.

ஆனால் ராமதாஸ் என்ன முடிவெடுக்க போகிறார் என்று தெரியவில்லை... இரு திராவிடக் கட்சிகளும் தன்னைப் புறக்கணித்து அன்புமணியையே பாமகவுக்காக முன்னிறுத்தி விடுவார்களோ என்ற கலக்கமும் ராமதாஸிடம் உள்ளதாம்.. தவெக என்ற மாற்று ஆப்ஷனையும் ராமதாஸ் வைத்திருக்கிறார் என்றாலும், அதை கடைசி ஆப்ஷனாகவே வைத்திருக்கிறாராம்..

ஆக மொத்தம் ராமதாஸ் ஒருபுறம், அன்புமணி மறுபுறம் என அதிகார மையங்கள் பிரிந்திருப்பது, எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளுக்கும் சாதகமாக அமைந்துள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

Credit: Oneindia

Desktop Bottom Promotion