வேலுமணி கோட்டையில் ஓட்டை போட தொடங்கிய செங்கோட்டையன் – தவெகவில் கோவை அதிமுக நிர்வாகி

By Pavithra Mani

கோவை: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே இருக்கிறது. அரசியல் கட்சிகள் பரபர வியூகங்களுடன் களத்தில் வேகம் காட்ட தொடங்கிவிட்டனர். கொங்கு மண்டல அரசியல் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு அங்கு அதிமுக திமுக தவெக இடையே பலப்பரீட்சை நிலவுகிறது. இந்நிலையில் எஸ்.பி. வேலுமணி கன்ட்ரோலில் இருந்த கோவை அதிமுக நிர்வாகி செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருப்பது அரசியலில் அனல் பறக்க தொடங்கியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் தவெகவில் இணைந்தார். அங்கு அவருக்கு தலைமை குழு ஒருங்கிணைப்பாளர், கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. செங்கோட்டையன் கொங்கு மண்டலத்தில் தவெகவை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதிமுகவில் உள்ள பல முக்கிய புள்ளிகளை கட்சியில் இழுக்கும் அஸைன்மென்டுடன் அவர் களமிறங்கியுள்ளார்.


Sengottaiyan Velumani

செங்கோட்டையன் அஸைன்மென்ட்

பிரபல நடிகர் ஜீவா ரவி நேற்று செங்கோட்டையனை சந்தித்து பேசினார். அப்போது தவெக வில் இணைய போகிறேன் என்று ஜீவா கூறினார். மேலும் வருகிற 16 ஆம் தேதி நடிகர் விஜய் ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக, செங்கோட்டையன் ஈரோடு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

கொங்கு மண்டலத்தில் தவெக பரபரப்புடன் இயங்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் விஜய்யின் ஈரோடு விசிட்டிற்கு முன்பாக மேலும் பல மாற்றுக் கட்சியினர், முக்கிய புள்ளிகளை தவெகவில் இணைத்து ஸ்கோர் செய்வதற்கு செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் இருந்த அதிமுக நிர்வாகி ஒருவர் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார்.

தவெகவில் கோவை அதிமுக நிர்வாகி

கோவை மாநகர் மாவட்ட அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளராக இருந்தவர் பார்த்திபன். இவர் அதிமுகவில் வடவள்ளி பகுதி கழக செயலாளர், வடவள்ளி நகர இளைஞரணி செயலாளர், டிவிசன் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். பாரம்பர்ய அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த 30 வருடங்களாக அதிமுகவில் ஆக்டிவாக வலம் வந்தார்.

கோவை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுனின் தீவிர ஆதரவாளராக இருந்துள்ளார். வேலுமணியின் வலதுகரமாக இருந்த வடவள்ளி சந்திரசேகருக்கும் நெருக்கமானவராக இருந்தார். கோபிசெட்டிப்பாளையம் செங்கோட்டையன் வீட்டிற்கு நேற்று சென்ற பார்த்திபன் அவர் முன்னிலையில் தன்னை தவெகவில் அதிகாரபூர்வமாக இணைத்துக் கொண்டார்.

சரிகிறதா அதிமுக

இது கோவை அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலுமணியின் கோட்டையாக கருதப்படும் கோவை மாவட்டத்தில் முக்கிய பதவிகளில் இருந்து களப்பணி செய்த அனுபவம் கொண்டவர் தவெகவில் இணைந்திருப்பது, கோவையில் தவெகவுக்கு சற்று பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் அதிமுகவில் இருந்து மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி கடந்த வாரம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தற்போது மற்றொரு நிர்வாகி தவெகவில் இணைந்துள்ளார். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை விட கொங்கு மண்டலத்தை தான் அதிமுக மலைபோல நம்பியுள்ளது. கடந்த காலங்களில் அங்கு அதிமுக பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.

வேலுமணி கோட்டை

கடந்த சில தேர்தல்களாக கொங்கு மண்டலத்திலேயே அதிமுக சரிந்து கொண்டிருக்கிறது. அதிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முக்கிய தளபதியான வேலுமணி கோட்டைக்குள், அந்த சாம்ராஜ்யம் ஆட்டம் காண தொடங்கியிருப்பது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

Credit: Oneindia

Desktop Bottom Promotion