பீகார் தேர்தல் முடிவுகள்: நிதிஷ் குமாரை மீண்டும் அரியணை ஏற்றிய பெண்கள்!! இந்த 2 திட்டங்களே காரணம்!!

By Devika Manivannan

2025 ஆம் ஆண்டில் அதிக கவனம் பெற்ற ஒரு தேர்தலாக மாறி இருக்கிறது பீகார் சட்டமன்றத் தேர்தல். இந்த முறை வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் பீகாரில் வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியின் மகாபந்தன் கூட்டணியும் களம் கண்டன. ஆனால் தேர்தல் முடிவுகள் நிதிஷ்குமார் மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே சாதகமாக அமைந்துள்ளது. நிதிஷ்குமார் தான் மீண்டும் பீகார் முதலமைச்சராக போகிறார் என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.


Bihar election Nitish kumar

இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த சட்டமன்ற தேர்தலில் பீகாரில் 67.13 சதவீத வாக்குகள் பதிவானது. குறிப்பாக பெண்களின் வாக்குப்பதிவு தான் இந்த முறை அதிகமாக இருந்தது . மொத்த பெண் வாக்காளர்களில் 71.78 சதவீதம் பேர் திரளாக வந்து இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். அதே வேளையில் ஆண்கள் வாக்களித்த சதவீதம் 62.98 % ஆக தான் இருந்தது.

இந்த முறை வழக்கத்தை விட வாக்குப்பதிவு அதிகரித்தது மட்டும் இல்லாமல் பெண்களின் வாக்குப்பதிவும் அதிகமாக இருந்தது. பல்வேறு மாவட்டங்களிலும் ஆண்களை விட 10 முதல் 20 சதவீதம் வரை கூடுதலாக பெண்களின் வாக்குகள் பதிவாகியிருந்தன. பெண்களின் வாக்குகள் இந்த தேர்தல் நிதிஷ் குமாருக்கு உதவி இருக்கிறது. குறிப்பாக 2 திட்டங்கள் தான் நிதிஷ் குமாரை மீண்டும் முதலமைச்சராக்கி இருக்கிறது.

பீகார் தேர்தல் முடிவுகள்: தேர்தல் களத்தில் புயலை கிளப்பிய 25 வயது மைதிலி தாக்கூர்..!!

பெண்களுக்கு ரூ.10,000 நிதி உதவி: பீகாரில் தேர்தலுக்கு முன்னதாகவே ஆளும் கூட்டணி முதலமைச்சர் மகிளா ரோஸ்கர் யோஜனா என்ற திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. பெண்கள் சுய தொழில் தொடங்குவதற்கு 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கும் இந்த திட்டம் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி பீகாரை சேர்ந்த 34 சதவீத குடும்பங்கள் மாதத்திற்கு வெறும் 6000 ரூபாயில் தான் குடும்பத்தை நடத்துகின்றன என தெரிய வந்தது. அந்த வகையில் பெண்களுக்கு சுயதொழில் செய்ய நிதி உதவி அளிக்கும் இந்த திட்டம் ஏராளமான பெண்களுக்கு தொழில் ரீதியாகவும் வருமானம் ஈட்டவும் வாய்ப்பு தந்துள்ளது.


75 லட்சம் பெண்களுக்கு தேர்தலுக்கு முன்னதாகவே இந்த பத்தாயிரம் ரூபாய் பணம் என்பது அவர்களின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டது. பெண்கள் விவசாயம் ,கால்நடை வளர்ப்பு ,கைவினைப் பொருட்கள் உற்பத்தி, தையல் , நெசவு மற்றும் பிற சிறு தொழில்களை இதன் மூலம் மேற்கொள்ளலாம். இதற்கான அனைத்து உதவிகளையும் இந்த திட்டம் வழங்குகிறது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணிக்கு பெருமளவில் வாக்கு தேடி தந்தது இந்த திட்டம் தான்.

பீகார் தேர்தல் முடிவுகள்: முக்கிய கவனம் பெறும் நிறுவனங்கள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களே நோட் பண்ணுங்க..!!

மதுவிலக்கு: பீகார் மாநிலத்தில் அமலில் இருக்கும் மதுவிலக்கு பெரும்பாலான பெண்கள் வாக்குகளை நிதிஷ்குமார் கட்சியை நோக்கி திருப்பி விட செய்திருக்கிறது. இந்த மதுவிலக்கு என்பது பீகார் மாநிலத்தில் வீடுகளில் நடக்கக்கூடிய பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது . அது மட்டும் இல்லாமல் பீகார் மாநில குடும்பங்களால் பணத்தை சேமிக்கவும், தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவி இருக்கிறது. எனவே பெரும்பாலான பெண்கள் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.

Credit: Goodreturns

Story first published: Friday, November 14, 2025, 12:49 [IST]
Desktop Bottom Promotion