துண்டு பேப்பரில் வந்த திமுக சப்போர்ட்.. தேமுதிகவுக்கு 18+1 பச்சை கொடி? திறக்கப்படுகிறது கூட்டணி கதவு

By Hema Vandhana

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேமுதிக அரசியல் களத்தில் தனது பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, தன் டிமாண்ட்டை உயர்த்தும் உத்தியை தேமுதிக பின்பற்றுகிறது என்பதே தற்போதைய அரசியல் வட்டாரங்களின் மதிப்பீடாக உள்ளது.. எனினும் இன்றைய தினம் என்ன முடிவை அறிவிக்க போகிறது? என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த முறை தேமுதிகவை கடைசிவரை கண்டுகொள்ளாமல் விட்ட எடப்பாடி பழனிசாமி, இந்த எப்படியாவது தன்னுடைய கூட்டணிக்குள் கொண்டுவந்து விட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறார்..
கடந்த ஜனவரி 9ம் தேதி தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டை உரிமை மீட்பு மாநாட்டில் அறிவிப்பேன் என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லி சஸ்பென்ஸ் வைத்திருந்தார்..


DMDK DMK alliance AIADMK

திமுக கூட்டணி

மேல்சபை எம்பி பதவி மற்றும் இரட்டை இலக்கத்தில் சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே கட்சியின் நிபந்தனையாக மாறியதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து, திமுக கூட்டணி சார்பில், தேமுதிகவுக்கு 8 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் என்ற கணக்கில் ஒரு ஆஃபர் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இணையாக, அதிமுகவிடம் தேமுதிக 18 சட்டமன்றத் தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா சீட்டையும் கோரி வருகிறது.

மேலும், பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை விட ஒரு தொகுதி கூடுதலாக தேமுதிகவுக்கு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளன..

லோக்சபா தேர்தல் பின்னணி

இந்த டிமாண்ட்டுகளுக்குப் பின்னணியாக, கடந்த லோக்சபா தேர்தல் அரசியல் கணக்கும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அப்போது பாஜக கூட்டணிக்கு சென்ற பாமகவைப் போல் இல்லாமல், தேமுதிக உறுதியுடன் அதிமுக கூட்டணியில் தொடர்ந்தது. அந்த அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே, இப்போது தேமுதிக தனது கோரிக்கைகளை நியாயப்படுத்துகிறது.

இதன் காரணமாக, தேமுதிக டிமாண்ட்டை ஏற்கலாமா, மறுக்கலாமா என்ற குழப்பத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும், அதிமுக வட்டாரங்களில் அதிருப்தி நிலவுகிறதாம்...

கடந்த அனுபவமும் தற்போதைய உத்தியும்

சில மாதங்களிலேயே அதிமுகவுடன் ஏற்பட்ட பஞ்சாயத்தால், ஒப்புக்கொண்ட ராஜ்யசபா சீட் வழங்கப்படவில்லை என்று சொல்லி தேமுதிக கூட்டணியிலிருந்து வெளியேறிய அனுபவமும் இன்னும் அரசியல் நினைவில் உள்ளது.

2026 தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும் கட்சியை அளவோடு விமர்சிப்பதும், எதிர்க்கட்சியுடன் இணக்கமான அணுகுமுறையையும், விஜய்யுடன் நட்புறவையும் வெளிப்படுத்துவதன் மூலம், தேமுதிக தனது அனைத்து அரசியல் ஆப்ஷன்களையும் திறந்தே வைத்துள்ளது. எந்தப் பக்கம் சென்றாலும், பேச்சுவார்த்தையில் கை மேல் கிடைக்க வேண்டும் என்பதே இந்த உத்தியின் மையம்.

தமிழ்நாட்டில் தேமுதிகவின் பூத் கமிட்டி அமைப்பு இன்னும் கரையாமல் செயல்பாட்டில் இருப்பதும், பேச்சுவார்த்தையில் முக்கிய ஆயுதமாக முன்வைக்கப்படுகிறது. திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுக்குப் பிறகு, சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமான பூத் கமிட்டிகள் தேமுதிகவிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கட்டமைப்பு, பாமகவை விடவும் தேமுதிகவுக்கு வலுவானதாக உள்ளது என்ற வாதத்தை முன்வைத்து, பிரேமலதா விஜயகாந்த் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தேமுதிக - அமைப்புச்சக்தி

சட்டமன்ற பதிவேட்டில் தேமுதிக உறுப்பினர்கள் கையெழுத்திட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. 'கேப்டன் கட்சி' என்ற அடையாளத்தை காப்பாற்ற, குறைந்தபட்சம் ஒருவரையாவது அல்லது இருவரையாவது சட்டமன்றத்துக்குள் அனுப்ப வேண்டும் என்பதே தேமுதிக தொண்டர்களின் பிரதான விருப்பமாக உள்ளது. திமுகவுடன் கூட்டணி வைத்தால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தியதும் இதனை முன்னிறுத்தி தானாம்..!!

இங்கு இன்னொரு முக்கிய அம்சத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தல் தேமுதிகவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. 60 தொகுதிகளில் போட்டியிட்டும், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது. வாக்கு வங்கி 0.43 சதவீதமாக மட்டுமே சுருங்கியது. அரசியல் ரீதியாக இது பெரிய சரிவாக இருந்தாலும், ஒரு முக்கிய விஷயம் இன்னும் தேமுதிகவுக்கு சாதகமாகவே உள்ளது. ஆம், அந்தக் கட்சியின் அங்கீகாரம் தேர்தல் ஆணையத்தில் இன்னும் தொடர்கிறது.

பாமக, மதிமுக போன்ற கள அரசியலில் தொடர்ந்து செயல்பட்டு வரும் கட்சிகளே இன்று அங்கீகாரத்தை இழந்த நிலையில் உள்ளன. ஆனால் தேமுதிக அந்த நிலைக்கு தள்ளப்படவில்லை. இதன் காரணமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் தேமுதிகவுக்கு வெற்றி-தோல்வியைத் தாண்டி இன்னொரு முக்கியப் போராட்டமாக மாறியுள்ளது. அது, கட்சியின் அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்வதே.

டிக் அடிக்கப் போகும் பிரேமலதா?

அங்கீகாரத்தை இழக்காமல் இருக்க, சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 6 சதவீத வாக்குகளைப் பெறுவதோடு, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அது சாத்தியமாகவில்லை என்றால், குறைந்தது 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த இலக்குகளை அடைவதே தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய அரசியல் சவாலாக பார்க்கப்படுகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

Credit: Oneindia

Desktop Bottom Promotion