ஆதார் அட்டையில் மொபைல் எண் மாற்ற இப்படியொரு வசதியா? இனிமேல் எங்கும் அலைய வேண்டாம்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

By Prakash S

ஆதார் அட்டை (Aadhaar card) ஆனது இந்தியர்களின் முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். அதுவும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல சேவைகளைப் பெறுவதற்கு இந்த ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து முக்கிய தேவைகளுக்கும் பயன்படும் ஆதாரில் மொபைல் எண்ணை மாற்ற ஒரு புதிய வசதி வர உள்ளது.

அதாவது ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை வீட்டில் இருந்தபடியே ஆதார் மொபைல் செயலி மூலம் மாற்றிக்கொள்ளும் வசதி விரைவில் கொண்டு வர உள்ளதாக தற்போது ஆதார் ஆணையம் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வழியே தெரிவித்துள்ளது.


aadhaar-update

குறிப்பாக முகவரி, மொபைல் எண் என ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் பெரும்பாலும் ஆதார் மையங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள் போன்ற இடங்களுக்குத் தான் உரிய ஆவணங்களுடன் மக்கள் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் இந்த இடங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆகவே தான் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சிக்கல்களைத் தீர்க்க ஆதார் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை, ஆதார் செயலி வாயிலாக மாற்றிக் கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

OTP மற்றும் முக அங்கீகாரம்

அதுவும் ஆதார் செயலி மூலம் ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை வீட்டில் இருந்தபடியே இருந்தபடியே OTP மற்றும் முக அங்கீகாரம் மூலம் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. எனவே இனி ஆதார் மையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்க அவசியம் இருக்காது.

அதேபோல் ஆதார் கார்டில் மொபைல் எண்ணை இணைக்கவோ அல்லது மாற்றவோ வேண்டுமெனில், ஆதார் மையங்களுக்கு சென்று அதற்குரிய விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து ரூ.50 கட்டணம் செலுத்தி விணக்கப்பிக்க வேண்டும். இந்த நிலையில் ஆதார் ஆணையம் கொண்டுவர உள்ள புதிய வசதியின் மூலம் பொதுமக்கள் எங்கும் அலைய வேண்டிய அவசியம் இருக்காது.

மேலும் ஆதார் சேவையை விரிவுபடுத்தவும், பொது மக்களுக்கு எளிதாக கிடைக்கவும் ஆதார் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஆதார் கார்டின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் ஆதார் ஆணையம் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த சில ஆண்டுகளிலும் மட்டும் இறந்தவர்களின் 2 கோடி நபர்களின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.


குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் இறந்து விட்டால், அவர்களின் விவரங்களை மை ஆதார் (My Aadhaar ) எனும் இணையதளத்திலும் பதிவு செய்யலாம். தற்போது வரை இந்த வசதி 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குக் கிடைக்கிறது. மேலும் இதனை மற்ற மாநிலங்களுக்கும் ஆதார் ஆணையம் விரைவில் விரிவுபடுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சில நாட்களுக்கு முன்பு வெளியான தகவலின்படி, ஆதார் அட்டையில் நமது புகைப்படம், பெயர், முகவரி, ஆதார் எண் போன்ற முக்கிய தகவல்கள் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் இனிமேல் ஆதாரின் அடையாளமே முற்றிலும் மாற இருக்கிறது. இனி ஆதார் அட்டையில் குறிப்பிட்ட நபரின் புகைப்படம் மற்றும் கியூ ஆர் கோடு மட்டுமே இடம்பெறும் வகையில் மாற்றம் கொண்டுவர உள்ளதாக இந்திய தனித்துவ அடையாள அமைப்பான யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.

Credit: Gizbot

Story first published: Monday, December 1, 2025, 10:35 [IST]
Desktop Bottom Promotion