வருடத்திற்கு 2 ரயில்கள் மட்டுமே வரும் இந்தியாவின் மிகவும் வினோதமான ரயில் நிலையம் எது தெரியுமா?

இந்திய ரயில்வே என்பது உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்குகளில் ஒன்றாகும். ரயில்வே ஸ்டேஷன் என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது கட்டுக்கடங்காத கூட்டமும், தொடர்ச்சியான மக்களின் இயக்கமும், இடைவிடாத ரயில்களின் சத்தமும்தான். ஆனால் இதுபோன்ற எந்தவொரு வரைமுறைக்குள்ளும் வராத ஒரு தனித்துவமான மற்றும் வினோதமான ஒரு ரயில் நிலையம் இந்தியாவில் உள்ளது. பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நிலையம், முற்றிலும் மாறுபட்ட ஒரு தாளத்தில் இயங்குகிறது.

இந்த ரயில் நிலையத்தின் தனித்துவம் என்னவென்றால் இது ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே திறக்கப்படும். உண்மைதான், ஹுசைனிவாலா ரயில் நிலையத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், இது இந்தியாவில் செயல்படும் மிக அரிதான ரயில் நிறுத்தங்களில் ஒன்றாக விளங்குகிறது. சமீபத்தில், அதன் தனித்துவம் பற்றிய வெளியான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்த நிலையம் இணையத்தில் பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

This Indian Railway Station Opens for Only Two Days in a Year

ரயில் நிலையத்தில் மக்கள் உறங்கும் மற்றும் ரயில்கள் இரவு பகலாக நிலப்பரப்பில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் இந்தியாவில், இந்த நிலையம் மிகவும் தனித்துவமானதாக மாறுபட்டு நிற்கிறது. அமைதியாகவும், ஆள் நடமாற்றமின்றியும், குறிப்பாக ஒரு வருடத்தில் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே இயங்குகிறது.

இந்த ரயில் நிலையம் எங்கு உள்ளது?

இந்தியாவின் எல்லையோர கிராமம் ஒன்றில் அமைந்திருக்கும், பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹுசைனிவாலா ரயில் நிலையம். இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம், ஆண்டுக்கு இரண்டு ரயில்களின் வருகையை மட்டுமே காண்கிறது. இதுவே இந்நாட்டின் மிகவும் விசித்திரமான ரயில் நிலையங்களில் ஒன்றாக இதை மாற்றுகிறது.

This Indian Railway Station Opens for Only Two Days in a Year

தேசிய முக்கியத்துவம்

ஹுசைனிவாலா என்பது வெறும் ஒரு ரயில் நிலையம் மட்டுமல்ல. அது இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு இடமாக விளங்குகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத் சிங், சுக்தேவ் தாப்பர் மற்றும் சிவராம் ராஜகுரு ஆகியோரின் உடல்கள் தகனம் செய்யப்பட்ட 'ஹுசைனிவாலா தேசிய தியாகிகள் நினைவிடம்' இங்குதான் அமைந்துள்ளது. இது இந்த பகுதிக்கு அளப்பரிய தேசிய முக்கியத்துவத்தை வழங்குகிறது.

ரயில் நிலையத்தின் கடந்த காலம்

ஹுசைனிவாலா வழியாக செல்லும் இந்த ரயில் பாதை, பிரிட்டிஷ் ஆட்சியின் போது, ​​1885-ஆம் ஆண்டிலேயே அமைக்கப்பட்டதாகும். அந்த காலகட்டத்தில், ஃபிரோஸ்பூரை தற்போது பாகிஸ்தானில் உள்ள கசூருடனும், அங்கிருந்து மேலும் லாகூர் மற்றும் பெஷாவர் உடனும் இணைக்கும் ஒரு முக்கியப் பாதையின் பகுதியாக இது விளங்கியது. ஒரு காலத்தில் லாகூருக்கான நுழைவாயிலாகத் திகழ்ந்த இந்த ரயில் நிலையம், இரு நாட்டின் மக்கள் நடமாட்டத்தாலும் பரபரப்பாகக் காணப்பட்டது. வர்த்தகம், ராணுவப் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் பயணம் ஆகியவற்றால் இதன் நடைமேடைகள் எப்போதும் நிரம்பி வழிந்தன, 'பஞ்சாப் மெயில்' போன்ற முக்கிய ரயில்கள் இப்பாதை வழியாகத் தொடர்ந்து கடந்து சென்றன.

எப்போது செயலிழந்தது?

1971-ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின்போது நிலைமை இந்த ரயில் நிலையத்தின் நிலை மோசமடைந்தது. அப்போது, ​​பாகிஸ்தான் படைகள் அப்பகுதியைக் கைப்பற்றி, சட்லஜ் ஆற்றின் மீதான கைசர்-இ-ஹிந்த் பாலத்தை அழித்தன. இந்த சேதத்தால், ஹுசைனிவாலாவிற்கு அப்பால் இருந்த இரயில் பாதை செயலிழந்தது. இதனால், அது இந்தியப் பக்கத்தின் கடைசி இரயில் நிலையமாக இது மாறியது.

எப்போது திறக்கப்படுகிறது?

தற்போது இந்த ரயில் நிலையம் இரண்டு முக்கிய நாட்களில் மட்டுமே தனது வாயில்களைத் திறக்கிறது. பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜகுரு ஆகியோரின் தியாகத்தைப் போற்றும் மார்ச் 23-ஆம் தேதியன்றும், வைசாகிப் பண்டிகையாகக் கொண்டாடப்படும் ஏப்ரல் 13-ஆம் தேதியன்றும் மட்டுமே திறக்கப்படுகிறது. இந்த சிறப்பு நாட்களில், தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தத் திரளும் பார்வையாளர்களை ஏற்றிச் செல்லும் வகையில், ஃபிரோஸ்பூரிலிருந்து ஒரு சிறப்பு DMU ரயில் இயக்கப்படுகிறது.

மற்ற நாட்களில் இந்த ரயில் நிலையம் எப்படி இருக்கும்?

ஆண்டின் மற்ற நாட்களில், இந்த ரயில் நிலையத்தில் மயான அமைதி நிலவுகிறது. அந்த நிலையம் கைவிடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. வரலாற்று சின்னமாகவும், கடந்த கால சம்பவங்களின் ஆதாரமாக இந்த ரயில் நிலையம் இன்றும் விளங்குகிறது.

Story first published: Friday, April 3, 2026, 13:08 [IST]
Desktop Bottom Promotion