Thaipusam 2026: Thaipusam 2026: தைப்பூசத்தின் போது ஏன் காவடி எடுத்து அலகு குத்தப்படுகிறது தெரியுமா?

Thaipusam Festival 2026: தமிழ்நாட்டின் தனித்துவமான திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசம் வரப்போகிறது. தமிழ்க் கடவுள் முருகனை கொண்டாடும் இந்த விழாவானது தமிழ்நாட்டின் அறுபடைக் கோவில்களிலும், அனைத்து முருகன் கோவில்களிலும் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் தைப்பூசம் பிப்ரவரி 1 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தைப்பூசம் கொண்டாடப்படுவதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் எதற்காக தைப்பூசம் கொண்டாடப்படுகிறது? அதன் முக்கியத்துவம் என்ன? என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

தைப்பூசம் என்பது உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய விழாவாகும். இந்த பதிவில், தைப்பூச விழா பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும், இந்த விழா பற்றிய அரிய தகவல்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

Thaipusam Festival 2026 History Significance and Sacred Murugan Temples to Visit

தமிழ்க் கடவுள் முருகன்

தமிழ்க் கடவுள் தென்னிந்தியாவிலும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் அதிகளவில் வணங்கப்படும் கடவுள்களில் ஒருவராவார். தைப்பூசம் என்பது அசுர அதிபதி சூரபத்மனை எதிர்த்து முருகன் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் ஒரு விழாவாகும். சூரபத்மனின் கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவும், அசுரர்களை அழிப்பதற்காகவும், பார்வதி தேவி முருகப்பெருமானுக்கு சக்திவாய்ந்த வேலை வழங்கிய நாள் இதுவே என்று ஒரு புராணக்கதை கூறுகிறது. தைப்பூசம் முருகப்பெருமான் பிறந்த நாள் என்று சிலர் வாதிட்டாலும், அது இன்னும் விவாதத்திற்குரியதாகவே உள்ளது. ஒவ்வொரு புராணமும் ஒவ்வொரு கதையைக் கூறினாலும், தைப்பூசம் என்பது முருகப்பெருமானுக்கான ஒரு நாள் என்பது மட்டும் உறுதி.

எந்தெந்த நாடுகளில் கொண்டாடபடுகிறது?

முருகப்பெருமானின் ஆலயம் எங்கெல்லாம் உள்ளதோ, மற்றும் தமிழ் மக்கள் எங்கெல்லாம் உள்ளார்களோ அங்கெல்லாம் உலகம் முழுவதும் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் முக்கிய இடங்கள் தமிழ்நாடு, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், மொரிஷியஸ், அமெரிக்கா, கனடா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை ஆகும்.

தைப்பூச கொண்டாட்டங்கள்

தைப்பூசத்தன்று முருகன் கோவில்களுக்குச் செல்லும்போது, ​​வழக்கத்திற்கு மாறான மற்றும் பிரமிக்க வைக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கலாம்.இந்த நாளில் முருக பக்தர்கள் முருகப்பெருமானுக்குப் பல கடுமையான நேர்த்திக் கடன்களையும், காணிக்கைகளையும் செலுத்துகின்றனர். காவடி எடுப்பது முதல் உடல் முழுவதும் அலகு குத்திக்கொள்வது வரை, பக்தர்களின் மிகவும் கடினமான நேர்த்திக் கடன்களை அனைத்து முருகன் கோவில்களிலும் செலுத்துகின்றனர்.

காவடி விழா

காவடி இல்லாமல் எந்தவொரு முருகன் விழாவும் முழுமையடையாது. காவடி என்பது, 'ஒவ்வொரு அடியிலும் தியாகம்' என்று நேரடிப் பொருள் தரும் ஒரு சடங்காகும். இது மயில் இறகுகள், கண்ணாடி வேலைப்பாடுகள் மற்றும் பல அலங்காரப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு வில் போன்ற அமைப்பாகும். பக்தர்கள் தங்கள் பாதயாத்திரையின் போது இதைத் தங்கள் தோள்களில் சுமந்து கோயிலுக்குச் செல்கிறார்கள்.

சில காவடிகள் 35 கிலோ வரை எடை கொண்டவையாக இருக்கலாம், மேலும் சில யாத்திரைகள் சுமார் ஒரு வாரம் வரை நீடிக்கும். இந்த காணிக்கைக்கு மிகுந்த மன உறுதியும் பக்தியும் தேவை. எல்லோராலும் முருகப்பெருமானுக்குக் காவடி எடுக்க முடியாது. மனவலிமை உள்ளவர்கள் மட்டுமே காவடி எடுக்க முடியும். மற்ற எந்த காணிக்கையை விடவும், காவடி முருகப்பெருமானுக்குச் செய்யப்படும் மிகவும் மங்களகரமான காணிக்கையாகக் கருதப்படுகிறது. பூக்காவடி, வேல் காவடி, பறவைக் காவடி என பல வகையான காவடிகள் உள்ளன.

அலகு குத்துதல்

தங்களின் பிரார்த்தனைகள் நிறைவேறியதற்கு நன்றிக்கடனாக, தைப்பூச நாளில் பக்தர்கள் அலகு குத்திக்கொள்வது மற்றொரு தீவிரமான காணிக்கையாகும். பக்தர்கள் கூர்மையான வேலைத் தங்கள் உடலின் பல்வேறு பாகங்களில் குத்திக்கொள்கின்றனர். சில சமயங்களில், பக்தர்களின் முதுகில் கொக்கிகள் குத்தப்படுகின்றன, சிலர் முழு காவடியையும் தங்கள் உடலில் குத்திக்கொள்கிறார்கள், மேலும் சிலர் தங்கள் கன்னங்களில் அலகு குத்திக்கொள்கிறார்கள்.

தைப்பூச விரதம்

தைப்பூசம் விரதத்திற்கு மிகவும் பிரபலமான விழாவாகும். முருக பக்தர்கள் தைப்பூசத்திற்கு 48 நாட்களுக்கு முன்பே தங்களைத் தயார்படுத்திக்கொண்டு, சைவ உணவுகளை மட்டும் உண்டு, ஒழுக்கமான வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றனர். பால் குடம் எடுப்பது தைப்பூசத்தின் மற்றொரு சடங்காகும். மஞ்சள் நிற ஆடை அணிந்த ஆண்களும் பெண்களும் தங்கள் வீட்டிலிருந்து பால் குடங்களைச் சுமந்து நடந்து சென்று முருகப்பெருமானுக்குப் படைக்கின்றனர்.

தைப்பூசத்தின் போது செல்ல வேண்டிய இடங்கள்

தென்னிந்தியா மற்றும் அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூசம் கொண்டாடப்பட்டாலும், சில இடங்களில் கொண்டாட்டங்கள் மிகவும் பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் இருக்கும். பழனி தண்டாயுதபாணி கோவில், திருப்பரங்குன்றம், சுப்ரமணிய சுவாமி கோவில் திருத்தணி, சென்னை வடபழனி ஆண்டவர் கோவில் என பல முருகன் கோவில்களில் தைப்பூசத்தின் போது சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதுமட்டுமின்றி வயலூர் முருகன் கோவில், திருச்சி; சுவாமிமலை முருகன் கோவில், கும்பகோணம்;பழமுதிர்ச்சோலை முருகன் கோவில், மதுரை; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், சிக்கல் சிங்கார வேலர் கோவில், நாகப்பட்டினம்; ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோவில், ஹரிபாட், ஆலப்புழா; பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில், கொடைக்கானல்; குன்றத்தூர் முருகன் கோவில், காஞ்சிபுரம்; மருதமலை முருகன் கோவில், கோவை; கழுகுமலை முருகன் கோவில், தூத்துக்குடி மற்றும் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், பெருன்னா, சங்கனாச்சேரி போன்றவை தைப்பூச கொண்டாட்டங்களுக்காக புகழ்பெற்ற கோவில்களாகும்.

தைப்பூசம் என்பது மனித இனத்தின் விடாமுயற்சி, உறுதிப்பாடு மற்றும் பக்தியை வெளிப்படுத்தும் வெகுசில பண்டிகைகளில் ஒன்றாகும். பலர் இந்த நேர்த்திக்கடல்களை முட்டாள்தனமாக கருதினாலும், உடல் அழியக்கூடியது என்றும், நமது ஆன்மாவும் எங்கும் நிறைந்த சர்வவல்லமையுள்ள இறைவனுமே அழியாதவர்கள் என்றும் உலகிற்கு அறிவிப்பதற்காகவே இது செய்யப்படுகிறது. இந்த நாளில் நேர்த்திக்கடன் செலுத்தும் ஒவ்வொருவரும் மதிக்கப்படுகிறார்கள். அவர்கள் செய்யும் இந்த செயல்கள் முற்றிலும் புனிதமானது மற்றும் பக்திமயமானது.

Story first published: Friday, January 30, 2026, 19:28 [IST]
Desktop Bottom Promotion