இந்த முகலாய அரசர்தான் உலகின் பணக்கார அரசராக இருந்தாராம்... உலகின் 25% செல்வம் இவருகிட்டதான் இருந்துச்சாம்...!

இந்தியாவின் வரலாறு என்பது நாம் நினைத்து பார்ப்பதை விட சுவாரஸ்யமானது மற்றும் விசித்திரமானது. ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியும், பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளும் நம் நாட்டை ஆக்கிரமித்து அனைத்து செல்வங்களையும் கொள்ளையடிப்பதற்கு முன், இடைக்கால இந்தியா அந்த நேரத்தில் உலகின் பணக்கார நாடாக இருந்தது.

ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் இருந்த ராஜ்ஜியங்கள் மற்றும் பேரரசுகளை விட அதிக செல்வம் கொண்ட நாடாக இருந்தது என்பது ஆவணப்படுத்தப்பட்ட உண்மையாகும். வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, ஆங்கிலேயர்களால் இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தின் அளவு அமெரிக்காவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட ஒன்றரை மடங்கு அதிகமாகும்.

Richest King of Indian History in Tamil

இந்திய வரலாற்றில் பல பணக்கார அரசர்கள் இருந்துள்ளனர். இடைக்கால இந்தியப் பேரரசர்கள் தங்கள் இராணுவ வெற்றிகளுக்கும், அளவில்லாத செல்வத்திற்கும் பெயர் பெற்றவர்கள். இந்தியாவை பல பேரரசுகள் ஆண்டிருந்தாலும் முகலாயர்கள் அதில் மிகவும் முக்கியமானவர்கள். கிட்டதட்ட 300 ஆண்டுகள் முகலாயர்கள் இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டார்கள். அவர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தியா கலாச்சாரத்திலும், செல்வத்திலும் உச்ச நிலையை அடைந்தது. முகலாயர்களின் தாக்கம் இன்றும் உணவு கலாச்சாரத்திலும், கட்டிடக்கலையிலும் பிரதிபலிக்கிறது.

முகலாய வம்சத்தில் பல சக்திவாய்ந்த அரசர்கள் இருந்தனர். அவர்களில், மகா அக்பர் என்று பிரபலமாக அழைக்கப்படும் முகலாயப் பேரரசரான அக்பர், முகலாய வம்சத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் பணக்கார அரசர் என்று கருதப்படுகிறார்.

இந்தியாவின் பணக்காரப் பேரரசர்

வரலாற்றுப் பதிவுகளின்படி, மூன்றாவது முகலாயப் பேரரசரான அபுல்-ஃபத் ஜலால்-உத்-தின் முகமது அக்பர் ஒரு காலத்தில் நம்ப முடியாத அளவிற்கு மொத்த உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கான 25 சதவீதத்தை கட்டுப்படுத்தினார்.

பேரரசர் அக்பர் வரி முறையை வலுப்படுத்துவதில் பெயர் பெற்றவர், மேலும் வர்த்தகத்தில் சிறப்பு கவனம் செலுத்தினார், இதன் காரணமாக அவரது வளமான ஆட்சிக் காலத்தில் முகலாய கருவூலம் பலமடைந்தது. இளம் வயதிலேயே தனது தந்தை ஹுமாயனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அக்பர், புதிய வர்த்தக வழிகளைத் திறந்ததன் மூலம் ஐரோப்பாவுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்தினார், மேலும் வரி முறையை சீர்திருத்தினார், இதன் விளைவாக முகலாயப் பேரரசின் வருவாயில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது.

Richest King of Indian History in Tamil

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, 1595 ஆம் ஆண்டு, அக்பரின் ஆட்சிக் காலத்தில், முகலாய கருவூலம் ரூ.9 கோடி மதிப்புடையதாக இருந்தது, இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 25 சதவீதமாகும், அப்போது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு ரூ. 36 கோடியாக மதிப்பிடப்பட்டது. தற்போதைய நிலையில், பேரரசர் அக்பரின் செல்வம் 21 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமாக இருக்கும்.

பிரிட்டிஷ் கருவூலத்தை விட ஆண்டு வருவாய் அதிகமாக இருந்தது

16 ஆம் நூற்றாண்டில் அக்பரின் ஆண்டு வருவாய் பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தின் முழு கருவூலத்தையும் விட அதிகமாக இருந்தது. முகலாயப் பேரரசின் ஆண்டு வருவாய் 1.75 கோடி பவுண்டுகள் (ரூ. 193.15 கோடி) இருந்தது, அதே நேரத்தில் முழு பிரிட்டிஷ் கருவூலத்தின் மதிப்பு அந்த நேரத்தில் 1.60 கோடி பவுண்டுகள் மட்டுமே இருந்தது.

முகலாயப் பேரரசரின் கருவூலத்தில் தெற்காசியாவின் செல்வத்தில் 90 சதவீதம் இருந்தது, தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த ரத்தினக் கற்கள் அனைத்தும் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டிருந்தன. முகாலய ஆட்சி முடிவுக்கு வந்ததும் வர்த்தகமும், வரி வசூலிக்கும் உரிமையும் ஆங்கிலேயர்கள் வசம் சென்றது. அதன்பின் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் செல்வத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடிக்கத் தொடங்கினர்.

Story first published: Friday, February 28, 2025, 13:31 [IST]
Desktop Bottom Promotion