உலகத் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட சமீபத்திய கொலை முயற்சிகள்...அடேங்கப்பா இத்தனை தலைவரை கொல்ல பாத்திருக்காங்களா?

தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் நிகழ்வு என்றால் அது அமெரிக்க முன்னால் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடுதான். அமெரிக்க அதிபர்கள் கொலை செய்யப்படுவது இது முதல் முறை அல்ல, ஏனெனில் ஆபிரஹாம் லிங்கன் முதல் ஜான் F. கென்னடி வரை பல அதிபர்கள் அமெரிக்க வரலாற்றில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

உலகத் தலைவர்கள் மீதான படுகொலை முயற்சிகள், உலக நாடுகளையும், சமூகத்தையும் உலுக்கக் கூடிய கொடூரமான நிகழ்வுகளாகும். இந்த சம்பவங்கள் அரசியல் பிரமுகர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் தீவிரவத்திற்கான எதிரான நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. சமீபத்திய காலங்களில் உலகத் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சிகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Recent Famous Assassination Attempts on World Leaders

டொனால்டு டிரம்ப்

ஜூலை 2024 இல் பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சார பேரணியின் போது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். 20 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார், காதில் தோட்டா பட்ட நிலையில் டிரம்ப் உயிர் தப்பியுள்ளார்.

இந்த தாக்குதலில், அருகில் இருந்த ஒருவர் உயிரிழந்தார் மேலும் இருவர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர் சீக்ரட் சர்வீஸ் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அரசியல் வன்முறைகள் ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உலகத் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஷின்சோ அபே

ஜப்பானின் முன்னாள் பிரதம மந்திரி ஷின்சோ அபே 2022 ஜூலையில் ஜப்பானின் நாராவில் பிரச்சார உரை ஆற்றியபோது பரிதாபமாக படுகொலை செய்யப்பட்டார். தாக்குதல் நடத்தியவர் அவர் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தினார், மேலும் சுடப்பட்ட சிறிது நேரத்திலேயே அபே மரணமடைந்தார். இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வு உலகளவில் துக்கம் மற்றும் கண்டனத்தின் வெளிப்பாட்டிற்கு வழிவகுத்தது. ஜப்பான் போன்ற கடுமையான துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங்களைக் கொண்ட நாடுகளில் கூட இப்படி நடப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இம்ரான் கான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதம மந்திரி இம்ரான் கான், நவம்பர் 2022 இல் ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார். அரசியல் பேரணியின் போது, ​​ஒரு மர்ம ஆசாமியால் அவர் காலில் சுடப்பட்டார். இம்ரான் கான் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். பாகிஸ்தானின் கொந்தளிப்பான அரசியல் சூழலையும் அதன் தலைவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய அபாயங்களையும் இந்தத் தாக்குதல் உலகத்திற்கே வெளிச்சம் போட்டு காட்டியது.

வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

2022 இல் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பல படுகொலை முயற்சிகளை எதிர்கொண்டார். அவரது பாதுகாப்பு அமைப்பு அத்தனை முயற்சிகளையும் வெற்றிகரமாக முறியடித்து, அவரது பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. இந்த சம்பவங்கள், மோதல் சூழலில் தலைவர்களுக்கு அதிக ஆபத்துகள் இருப்பதையும், அவர்களைப் பாதுகாப்பதில் பாதுகாப்புப் படைகளின் முக்கியப் பங்கையும் காட்டுகிறது.

நிக்கோலஸ் மதுரோ

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, ஆகஸ்ட் 2018 இல் ராணுவ அணிவகுப்பின் போது ட்ரோன் தாக்குதலில் இருந்து தப்பினார். மதுரோ பேசிக் கொண்டிருந்த மேடைக்கு அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்கள் வெடித்தன. அவர் காயமின்றி தப்பித்தாலும், தாக்குதலில் பல ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் கொலை முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றி உலகை எச்சரிக்கிறது.

ராபர்ட் ஃபிகோ

மே 15, 2024 அன்று ஸ்லோவாக்கியாவின் பிரதம மந்திரி ராபர்ட் ஃபிகோ ஒரு படுகொலை முயற்சியில் படுகாயமடைந்தார். அரசாங்கக் கூட்டத்திற்குப் பிறகு ஃபிகோ கூட்டத்தை வாழ்த்திக் கொண்டிருந்த ஹேண்ட்லோவாவில் இந்தத் தாக்குதல் நடந்தது. ஃபிகோவின் கொள்கைகளை எதிர்த்த 71 வயது முதியவர் அவரை பலமுறை சுட்டார். ஃபிகோவுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் குணமடைந்து வருகிறார்.

ஃபுமியோ கிஷிடா

ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஏப்ரல் 15, 2023 அன்று ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார். வகாயாமாவில் உள்ள சைகாசாகி மீன்பிடித் துறைமுகத்தில் ஒரு பிரச்சார நிகழ்வின் போது, ​​கிஷிடா அருகே பைப் குண்டை ஒருவர் வீசினார்.

அவர் விரைவாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் மற்றும் காயமின்றி இருந்தார், ஆனால் வெடிப்பில் மேலும் இருவர் காயமடைந்தனர். ரியூஜி கிமுரா என்ற சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.

Story first published: Tuesday, July 16, 2024, 17:03 [IST]
Desktop Bottom Promotion