மகர ராசிக்காரர்களுக்கு விளம்பி வருடம் எப்படி இருக்கப்போகிறது?...

2018 ஆம் ஆண்டு சித்திரை முதல் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் விளம்பி வருடமாகப் பிறக்கிறது. அதில் மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என்று பார்ப்போம்.

உத்திராடம் 2, 3, 4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம், 1, 2ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த மகர ராசிக்காரர்களுக்கு இந்த விளம்பி ஆண்டு என்னென்ன நன்மைகளை செய்யப்போகிறது என்று பார்க்கலாமா?

மகரராசிக்கு பிறக்க இருக்கின்ற விளம்பி தமிழ்ப் புத்தாண்டு எதிர்காலத்திற்கான மாற்றங்களை தருகின்ற ஒரு ஆண்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மகரத்திற்கு தற்போது ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது. சென்ற வருடம் அக்டோபர் மாதம் நடந்த சனிப் பெயர்ச்சியின் போது சனிபகவான் உங்களின் ராசிக்கு பனிரெண்டில் அமர்ந்து விரயச்சனி எனும் அமைப்பில் இருக்கிறார். ஏழரைச்சனி நடக்கும்போது வேலை, தொழில் விஷயங்களில் சாதகமான பலன்கள் நடக்காது என்பது ஜோதிட விதி.

tamil new year 2018

ஒன்பது கிரகங்களிலும் சனிபகவான் மட்டுமே ஒருவருக்கு அஷ்டம, ஏழரைச் சனி நேரங்களில் பொருளாதாரச் சிக்கல்களை கொடுத்து பணத்தின் அருமையைப் புரிய வைக்கின்ற கிரகம் என்பதால் இந்த வருடம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் உங்களுக்கு விருப்பமற்ற, சாதகமற்ற நிலைகள் இருக்கும். எனவே தொழில் விஷயங்களில் நீங்கள் ரிஸ்க் எடுக்காமல் இருப்பது நல்லது.

தற்போது உங்களுக்கு நடப்பது விரயச்சனி தான் என்பதால் சனியின் பாதிப்புகள் இந்த ஆண்டு பெரிய அளவில் இருக்காது. ஆனாலும் கவனமாக இருப்பதில் தவறு ஒன்றுமில்லையே...

நாற்பது வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மட்டுமே சனியினால் பாதிப்புகள் இருக்கும். நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு இது பொங்கு சனி என்று சொல்லப்படும் நன்மைகளைத் தரும் என்பதால் ஐம்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு வேலை தொழில் அமைப்புகளில் நன்மைகள் மட்டுமே நடக்கும். இளைஞர்கள் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களுடைய தெளிவான சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு உங்களுடைய மனதை மாற்றி இருக்கும் வேலையை பறிக்க சனி முயற்சிப்பார் என்பதால் எதிர்காலத் திட்டமிடுதல்களில் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டியது அவசியம். புது வருடத்தின் கடைசி மாதங்களிலும் அடுத்த வருட ஆரம்பத்திலும் சனியின் தாக்கம் மகரத்திற்கு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த வருடமே நீங்கள் புதிய முயற்சிகள் எதையும் தொடங்காமல் விழிப்புடன் இருப்பது நல்லது.

அஷ்டமச்சனி, ஏழரைச்சனி காலங்களில் சனிபகவான் புதிய தொழிலையோ, அல்லது வியாபாரத்தையோ தொடங்க வைத்து அதை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் அதன் போக்கில் ஓட வைப்பார் என்பதால் மகரராசி இளைஞர்கள் இந்த வருடம் தொழில், வியாபாரம் போன்றவைகளில் கவனமாக இருப்பது நல்லது.

முப்பது வயதுகளில் இருப்பவர்கள் இந்த வருடமும் அடுத்த வருடமும் செட்டிலாக விடாமல் அலைக்கழிக்க வைக்கப்படுவீர்கள். குறிப்பாக பொருளாதார சிக்கல்கள், பணவரவில் திருப்தியின்மை, பாக்கெட்டில் பணம் தங்காது போன்ற சங்கடங்கள் உண்டாகும்.

பிறந்த ஜாதகத்தில் யோகம் தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு வேண்டுமானால் சாதகமற்ற பலன்கள் சற்றுக் குறைவாக இருக்கும். ஆயினும் சனி என்பது உங்களுக்கு துன்பங்கள் என்ற பெயரில் அடுத்தவர்களிடம் எப்படி ஏமாறாமல் இருப்பது மற்றும் எப்படித் தொழில் நடத்துவது போன்ற வாழ்க்கை அனுபவங்களை கற்றுத்தரும் என்பதால் இளைய பருவத்தினரைப் பொருத்தவரை இந்த வருடம் அனுபவங்களைக் கற்றுக் கொள்ளும் வருடமாக இருக்கும்.

தொழில் விரிவாக்கங்கள் மற்றும் புதிய தொழில் ஆரம்பிப்பதை நன்கு யோசித்து செய்யுங்கள். புதிதாக எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் அனைவரையும் கலந்து ஆலோசித்து செய்யவும். புதிய வீடு வாங்குவது அல்லது இருக்கும் வீட்டை விரிவாக்குவது அல்லது புதிதாக சொத்து வாங்குவது போன்றவைகளில் மிகுந்த கவனம் தேவைப்படும். நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம் போன்றவைகளும் இப்போது கை கொடுப்பது கடினம்.

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் போன்ற முறைகேடான வருமானங்கள் இப்போது வருவது கடினம். எனவே மேல் வரும்படி இல்லாததால் செலவுகளை சமாளிக்க திண்டாடுவீர்கள்.

சில தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு சிக்கல்கள் உண்டாகும் என்பதால் ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது.
எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்து முடிக்க முடியும் என்பதால் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும். குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது நன்மையைத் தரும்.

எதிர்மறையான பலன்களைக் கொடுத்தாலும் நல்ல மாற்றங்களை இந்த புது வருடம் கொடுக்கும் என்பதால் கவலைப் பட தேவையில்லாத வருடமாகவே இருக்கும். பயப்படத் தேவையில்லை.

Story first published: Sunday, April 15, 2018, 8:30 [IST]
Desktop Bottom Promotion