Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
இந்தியாவின் மிக இளம் வயது உளவாளி ஒரு தமிழ்ப்பெண்!
இந்தியாவின் மிக இளம்வயது உளவாளியாக நேதாஜியின் படையில் சேர்ந்து பின்னர்இந்திய இராணுவத்தின் முக்கிய பொறுப்பினை ஏற்று இறுதியில் சரியான அங்கீகாரம் கிடைக்காமலே இறந்தவர்தான் வீரத்தமிழச்சி சரஸ்வதி ராஜாமணி.
சுதந்திரம் அடைந்து 72 வருடம் ஆகிவிட்டது. அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருவதாக நாமே நம்பி ஏமாந்துகொண்டிருக்கிறோம். சுதந்திர இந்தியாவில் உண்மையான சுதந்திரத்துடன் வாழ்வது என்னவோ வெகுசிலர் மட்டும்தான். வருடம் முழுவதும் சினிமா நட்சத்திரங்களை கொண்டாடும் நமக்கு சுதந்திர தினம், குடியரசு தினம் வந்தால் மட்டும் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவு வந்துவிடுகிறது. ஆனால் அதுபோன்ற சமயத்தில்கூட நம் நினைவுக்கு வராத எண்ணற்ற தியாகிகள் உள்ளனர். அதில் ஒருவர்தான் சரஸ்வதி ராஜாமணி

நம்மில் பலருக்கும் இந்த பெயரை முதல் முறை கேட்பது போல இருக்கலாம். உண்மையும் அதுதான், நாட்டை காட்டிக்கொடுத்தவர்களெல்லாம் தியாகி பட்டத்துடன் சுற்றிக்கொண்டிருக்கும் நாட்டில் உண்மையாக விடுதலைக்கு போராடியவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுவது சகஜம்தானே. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப்படையில் முக்கிய பொறுப்பில் இருந்து பின்னர் அவர் மர்மமான இறப்பிற்கு நியாயம் கேட்டு போராடி இறுதிவரை அவரின் தியாகத்திற்கு அங்கீகாரம் கிடைக்காமல் மறைந்தவர்தான் சரஸ்வதி ராஜாமணி.

குடும்பம்
சரஸ்வதி ராஜாமணி அவர்கள் 1927 ல் ரங்கூனில் பிறந்த தமிழ்வழி இந்தியர் ஆவார். இவரின் தந்தை திருச்சியில் இருந்து பர்மா சென்று மிகப்பெரிய செல்வந்தராய் மாறியவர். இவர்களின் குடும்பமே இந்திய சுதந்திர போராட்டத்திற்கு அவர்களால் இயன்ற உதவிகளை செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் இந்திய தேசிய இராணுவப்படையை கட்டமைப்பதில் தீவிரமாய் இருந்தார்.

காந்தியுடன் வாக்குவாதம்
மகாத்மா காந்தி ரங்கூன் சென்றபோது சரஸ்வதி ராஜாமணி அவர்களின் இல்லத்திற்கு சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடைய வைத்தது, ஒரு பத்து வயது சிறுமி துப்பாக்கி சுடும் பயிற்சி கொண்டிருந்தார். அந்த பத்து வயது சிறுமிதான் நமது வீரத்தமிழச்சி சரஸ்வதி ராஜாமணி. சிறுவயது முதலே நாட்டுப்பற்றுடன் வளர்ந்த அவரது ஒரே குறிக்கோள் ஒரே வெள்ளையானையாவது சுட்டுக்கொல்ல வேண்டும் என்பதுதான். அகிம்சயை விரும்பும் காந்தி வன்முறை கூடாதென அந்த சிறுமியிடம் கூறினார். அதற்கு அந்த சிறுமி வீட்டை கொள்ளையடிப்பவர்களை கொல்வதுதானே நல்லது, அப்படி என்றால் என் நாட்டை கொள்ளையடிக்கும் வெள்ளையனை கொல்வதுதான் அவர்களுக்கான சரியான தண்டனை என்று கூறினாள். சிறுமியின் பதிலை கேட்டு வாயடைத்து போனார் மகாத்மா.

சுதந்திர போராட்ட ஆர்வம்
ஒருமுறை ரங்கூனில் நேதாஜி இந்திய சுதந்திரம் தொடர்பான ஒரு மாநாட்டில் கலந்துகொண்டார். அங்கே அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்ட 16 வயது சிறுமி ஒருத்தி தான் அணிந்திருந்த தங்க, வைர நகைகளை போராட்ட நிதியாக கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். கூட்டம் முடிந்தவுடன் சிறுமி ஒருத்தி தன் நகைகளை கொடுத்து சென்றதை கேள்விப்பட்டு அந்த நகைகளை திரும்ப கொடுக்க நேதாஜி அவர்களின் வீடுதேடி சென்றார்.

இந்திய உளவாளி
சிறுமியின் வீட்டிற்கு சென்ற நேதாஜி நடந்தவற்றை கூறி நகைகளை அந்த சிறுமியின் பெற்றோரிடம் கொடுக்க முனைந்தார். அப்போது அந்த சிறுமி அது என் நகை அதை நான் என் நாட்டின் விடுதலைக்காக கொடுத்தேன் அதனை திரும்ப பெற்றுக்கொள்ள மாட்டேன் என அடம்பிடித்தாள். சிறுமியின் உறுதியையும், நாட்டுப்பற்றையும் கண்டு வியந்த நேதாஜி அவரை இந்திய இராணுவத்தின் உளவு பிரிவில் சேர்த்துக்கொள்ள அழைப்புவிடுத்தார். தன் 16 வயதில் இந்தியாவின் இளம் உளவாளியாக தன் சுதந்திர போராட்டத்தை தொடங்கினார் சரஸ்வதி ராஜாமணி.

இராணுவத்தில் முக்கிய பொறுப்பு
மணி என்ற ஆணின் பெயரில் ஆண் என்ற அடையாளத்துடனேயே தன் உளவு பணியை தொடர்ந்தார். ஒருமுறை உளவு பணிக்கு சென்றிருக்கும் போது ஆங்கிலேயர்களிடம் சிக்கி காலில் குண்டடி பட்டதுடன் தப்பித்து இந்திய இராணுவ படையை வந்து அடைந்தார். அதன்பின் அவர் இந்திய தேசிய இராணுவத்தின் முக்கிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

சுதந்திரத்திற்கு பிறகும் போராட்டம்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இவர் பத்தோடு பதினொன்றாவது தியாகியாக அறிவிக்கப்பட்டார். நேதாஜி மீது இவர் கொண்டிருந்த பற்றுக்கு அளவேயில்லை. அவரின் மர்ம மரணம் பற்றி பல ஆண்டுகள் போராட்டம் நடத்தினார். மிகப்பெரிய செல்வந்தரின் மகளான இவருக்கு இறுதியில் கிடைத்தது தியாகிகளின் பென்ஷன் மட்டும்தான். தான் சேர்த்து வைத்திருந்த பென்ஷன் பணத்தையும் சென்னையில் சுனாமி தாக்கியபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாய் கொடுத்திவிட்டார்.

அரசு உதவி
2005 ஆம் ஆண்டு செய்தித்தாள் ஒன்று இவர் சென்னையில் வாழ்ந்து வருவதாகவும் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் இவருக்கு ருபாய் 5 இலட்சமும் ஒரு வீடும் அளித்தார். அந்த வீட்டில்தான் சரஸ்வதி ராஜாமணி அவர்கள் தன் இறுதிகாலங்களை கழித்தார்.

மறைவு
தன் உயிர்பிரியும் காலம் வரையிலும் மக்கள் போராட்டங்களில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். தன் வாழ்க்கையின் இறுதிநாள் வரை மக்களுக்கான போராட்டங்களிலியே கழித்த அம்மா ஜனவரி 13, 2018 அன்று உயிர்நீத்தார். அவரின் மறைவிற்கு 50 பேர் கூட வராததுதான் மிகப்பெரிய கொடுமை. உண்மையான தியாகிகள் பலரும் வரலாற்று படிக்கட்டில் ஏறாமலே சென்றுவிட்டார்கள். வீரத்தாய் சரஸ்வதி ராஜாமணி போல எண்ணற்ற தியாக சுடர்கள் வழங்கிய வெளிச்சம்தான் இப்போது நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம். சுடர்கள் அணையலாம் ஆனால் அவர்கள் அந்த ஒளி அணையாது. இவரை போன்ற தியாகிகளை முடிந்தளவு அடையாளம் காண முயலுங்கள் நம்மை சுற்றி இன்னும் எத்தனையோ சுடர்கள் ஒளிமங்கி இருக்கின்றன அவற்றை பாதுகாப்பது நமது கடமை மட்டுமல்ல அது நாம் அவர்களுக்கு செலுத்தவேண்டிய நன்றிக்கடன்.



Click it and Unblock the Notifications











