நவராத்திரி இரண்டாம் நாளில் பிரம்மச்சாரிணி தேவியின் அருளைப் பெற எப்படி வழிபடணும் தெரியுமா?

Navratri 2025 Day 2 Brahmacharini: நவராத்திரியின் இரண்டாம் நாளில் பூஜிக்கப்படும் துர்கா தேவியின் வடிவம் என்றால், அது பிரம்மச்சாரிணி தேவியாகும். பிரம்மச்சாரிணி என்ற பெயரானது பிரம்மச்சாரி என்ற வார்த்தையில் இருந்து உருவானதாகும். துர்கையின் இந்த வடிவம் சுய ஒழுக்கம் மற்றும் பிரம்மச்சாரிய நிலையைக் குறிக்கிறது. துர்கையின் இந்த பெயரானது தெய்வத்தின் துறவற வாழ்க்கை மற்றும் ஆன்மீக அறிவைப் பின்தொடர்வதற்கான பக்தியைக் குறிக்கிறது.

புராணங்களின் படி, இந்த பிரம்மச்சாரிணி தேவிக்கு பின் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. அது என்னவெனில், பிரம்மச்சாரிணி தேவி சிவபெருமானின் துணையாக வேண்டுமென்று கடுமையான தவத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. சிவபெருமானைப் பிரியப்படுத்துவதற்காக கடுமையான தவங்களை பிரம்மச்சாரினி தேவி மேற்கொண்டுள்ளார்.

Navratri 2025 Day 2 Brahmacharini Puja Time Prasadam Rituals Mantra And Color Of The Day

இப்படி தவம் மேற்கொள்ளும் போது, பழங்கள் மற்றும் வேர்களை உட்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். அவருடைய தோற்றம் மாறியது. பல ஆண்டுகளாக ஒற்றைக் காலில் தவம் செய்ததோடு, ஆழ்ந்த சிந்தனையிலும் மூழ்கியிருந்துள்ளார். இதனால் அவரது கடுமையான தவத்தினால், உடல் மிகவும் மெலிந்து போனது. அவருடைய அசைக்க முடியாத பக்தியாலும், கடுமையான தவத்தினாலும் சிவபெருமான் கவரப்பட்டார். இறுதியாக அவர் முன் தோன்றி, தனது துணைவியாக மாறும் வரத்தை அருளினார். அன்று முதல் திருமணமாகாத வடிவத்தைக் குறிக்கும் விதமாக பிரம்மச்சாரிணி என்று அழைக்கப்பட்டார்.

பிரம்மச்சாரிணி தேவியின் வடிவம்

பிரம்மச்சாரிணி தேவி மிகுந்த அழகையும், கருணையையும் கொண்ட தெய்வாக அறியப்படுகிறார். இவர் வெள்ளை நிற உடையில், வலது கையில் ஜெபமாலை மற்றும் இடது கையில் கமண்டலத்தையும் ஏந்தியவாறு இருப்பார். இவரது இந்த தோற்றம் தூய்மை, அர்ப்பணிப்பு மற்றும் அறிவை பின்தொடர்வதைக் குறிக்கிறது.

பூஜை நேரம்

நவராத்திரி இரண்டாம் நாளில் பிரம்மச்சாரிணி தேவிக்கு பூஜை செய்ய சிறந்த நேரம் காலை 06.15 மணி முதல் 7.15 மணி வரை மற்றும் மாலை 4.45 மணிக்கு மேல் நவராத்திரி பூஜை செய்யலாம். மேலும் ராகு காலம், எமகண்டம் தவிர்த்து எந்த நேரத்திலும் பூஜைகளை செய்யலாம்.

பிரம்மச்சாரிணி தேவியின் நிறம்

பிரம்மச்சாரிணி தேவிக்கான நிறம் சிவப்பு. ஆர்வத்தையும் அன்பையும் குறிக்கிறது, மேலும் ஒருவரை உயிர்ச்சக்தியுடனும் வீரியத்துடனும் நிரப்புகிறது. இந்நாளில் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து, பிரம்மச்சாரிணி தேவியை வழிபடுவது சிறப்பான பலன்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது.

பிரம்மச்சாரிணி தேவிக்கான மலர்

பிரம்மச்சாரிணி தேவி எப்போதும் தவத்தில் இருக்க விரும்புகிறார். எனவே, அவளுக்கு ரோஜா பூக்களை வழங்குவது மிகவும் நல்லது. இந்த பூக்களை கொண்டு அலங்காரம் செய்து, பூஜைகளை செய்து வழிபடுவது சிறந்தது.

பிரம்மச்சாரிணி தேவிக்கான பிரசாதம்

பிரம்மச்சாரிணி தேவிக்குரிய நிறம் சிவப்பு என்பதால் கேசரி, சுண்டல் அல்லது பிற சிவப்பு நிற இனிப்புகளை படைத்து வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.

பிரம்மச்சாரிணி தேவிக்கான மந்திரம்

பீஜ் மந்திரம்

"ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரூம் பிரம்மச்சாரிணி நமஹ"

பிரம்மசாரிணி மா மந்திரம்

"ததான கர்பத்ம அப்யமக்ஷ் மாலா கமண்டலு | தேவி ப்ரஸீதது மயி ப்ரஹ்மசாரிண்ய நுத்தமா"

பிரம்மச்சாரிணி தேவியை நினைத்து பூஜைகள் செய்வதால், அவர் தன் பக்தர்களுக்கு வலிமை, ஞானம், சுயக்கட்டுப்பாடு மற்றும் ஆன்மீக உண்மைகளைப் பற்றிய ஆழமான புரிதலை அருளுவதாக நம்பப்படுகிறது. மேலும் பிரம்மச்சாரிணி தேவி தனிநபர் ஒழுக்கம், நேர்மை மற்றும் நேர்மையான வாழ்க்கையை வாழ ஊக்குவிக்கிறார்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Tuesday, September 23, 2025, 8:14 [IST]
Desktop Bottom Promotion