மதுரை சித்திரை திருவிழா 2023: இன்று மீனாட்சி திக்விஜயம், இந்திர விமானத்தில் வலம் வரும் நாள்!

Madurai Chithirai Thiruvizha 2023: மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் அம்மன் வித விதமான பல்லக்கில் பவனி வந்து மக்களுக்கு அருள் புரிகிறார். அந்த வகையில் ஒன்பதாம் நாளான இன்று மதுரை மீனாட்சி அம்மன் இந்திர விமானத்தில் வந்து திக்விஜயம் செய்கிறாள் என்பது ஐதீகம்.

திக்விஜயம் என்பது போர் புரிவதல்ல. எட்டுத் திசையில் உள்ளோரையும் அன்னை மீனாட்சி தன் அன்பினால் ஆட்கொள்ளும் நிகழ்வாகும். இந்த திக்விஜய விழாவின் போது குலசேகரப்பாண்டியர், உக்கிரப்பாண்டியர் வழி வந்த ஆண் வாரிசுகள் தான் மீனாட்சி சுந்தரேசுவரரின் பிரநிதிகளாக வேடம்பூண்டு, தெய்வங்களோடு வாகனங்களில் வலம் வருவார்கள்.

Madurai Chithirai Thiruvizha 2023: Ninth Day Celebration

திருவிழாக்கள் முழுக்க இந்த இரண்டு குலத்தின் குழந்தைகளையும் தெய்வங்களாக பாவித்து மதுரை மக்கள் அவர்களுக்கு ஏகபோக மரியாதைகளை செய்வார்கள். திக்விஜயம் நடைபெறும் நாளான இன்றைக்கு மூன்றுலோக அரசர்கள் எல்லோரையும் வென்ற மீனாட்சி பின்பு சிவபெருமானுடன் கடும் போர் புரிந்த போது தன் மூன்று தனங்களில் ஒன்று மறையவே தன் கணவன் இறைவனே என அறிந்து வெட்கித் தலைகுனிந்தாள் என கூறுகிறது புராணம்.

மதுரை மீனாட்சி அம்மன் திக்விஜயம் வரலாறு

சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று மதுரை மீனாட்சி அம்மன் இந்திர விமானத்தில் திக்விஜயம் செய்கிறாள். மதுரை மீனாட்சி அம்மன் தன்னுடைய வீரத்தை நிலைநாட்ட எல்லா தேசங்களுக்கும் படையெடுத்துச் செல்கிறாள். மூன்றுலோக அரசர்களையும் வென்று வெற்றி வாகை சூடுகிறாள். அதன் பிறகு மீனாட்சி அம்மன் கைலாய நாதரான எம்பெருமானுடன் போர் புரிய செல்கிறாள்.

ஆனால் என்னவோ அவள் சிவனைக் கண்டதும் நாணத்தால் முகம் சிவத்தலாயிற்று. அப்பொழுது தான் சிவபெருமான் தன் மணாளன் என்பதை அவள் புரிந்து கொள்கிறாள். இந்த திக்விஜயம் திருமண மண்டபத்தில் நடைபெறும். இந்த திக்விஜயம் நடைபெறும் நாளில் மீனாட்சி அம்மன் இந்திர விமானத்தில் மதுரை மக்களுக்கு காட்சி தருவார். இன்றைக்கு அம்மனை வேண்டி வணங்கினால் மதுரை மீனாட்சி அம்மன் போல் தைரியத்தை பெறுவீர்கள். வாழ்க்கையில் வெற்றி பெற மதுரை மீனாட்சி அம்மனின் அருள் கிடைக்கும்.

ஒன்பதாம் நாள் திருவிழாவின் தத்துவமும் பலனும்

ஒன்பதாம் நாள் திருவிழா இரவு அருள்மிகு மீனாட்சியம்மை தடாதகைப் பிராட்டியாக மதுரையம்பதியில் அவதரித்து ஆட்சி புரிகையில் மேற்கொண்ட திக்கு விஜய புராண வரலாற்று நிகழ்வினைக் குறிக்கும் வகையில் அம்மனின் திக்கு விஜயம் நடைபெறும்.

அப்பொழுது அம்மன் அஷ்ட திக்குபாலர்களை எதிர்த்து வெற்றி பெற்ற லீலை நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் திருவிழா சகளம், நிஷ்களம், சகளநிஷ்களம் என்னும் வடிவம் மூன்றும், சிருஷ்டி முதலிய முத்தொழில்களும், தன்மை முதலிய மூன்றிடத்து இருத்தலுமாகிய ஒன்பதும் இல்லை என்பதைக் குறிப்பதாகும்.

இந்திர விமான உலா திருவிளையாடற்புராணப் பாடல்

"மொய்த்தபுனக் காடுஎறிந்து நிலம்திருத்தி
வரும்அளவில், முளைத்த ஞான
வித்துஅனைய சிவக்கொழுந்தின் திருமுடியில்
பரிதிகரம் மெல்லத் தீண்டச்
சித்தம்நெகிழ்ந்து இந்திரன்தன் வெண்கவிகைத்
திங்கள்நிழல் செய்வான் உள்ளம்
வைத்தனன், அப்போது இரவி மண்டலம்போல்
இழந்ததுஒரு மணவி மானம்"- என பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணத்தில் பாடியுள்ளார்.

திக்குவிஜயம் திருவிளையாடற்புராணப் பாடல்

"கயபதி ஆதி ஆய வடபுலக் காவல் வேந்தர்
புயவலி அடங்க வென்று, புழைக்கைமான் புரவி மான்தேர்
பயல்மதி நுதல்வேல் உண்கண் பாவையர் ஆய மோடு
நயம்மலி திறையும் கொண்டு, திசையின்மேல் நாட்டம் வைத்தாள்.
இவ்வாறு மற்றைத் திசைகாவலர் யாரையும் போய்த்
தெவ் ஆண்மை சிந்தச் செருகச்செய்து திறமையும் கைக்கொண்டு
அவ்வாறு வெல்வாள் எனமூன்றுஅரண் அட்ட மேருக்
கைவார் சிலையான் கயிலைக்கிரி நோக்கிச் செல்வாள்" - என்று பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணத்தில் பாடியுள்ளார்

இந்திர விமான உலா அலங்காரம்

இன்றைக்கு மதுரை மீனாட்சி அம்மன் இந்திர விமானத்தில் வலம் வருவாள். மதுரை மீனாட்சி அம்மன் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ண பட்டு உடுத்தி இரண்டு பக்கமும் மேள தாளங்கள் சூழ மதுரை மாசி வீதிகளில் வலம் வருவாள். குழந்தைகளும் மற்றும் பக்தர்களும் பல்வேறு வேடம் அணிந்தும், நாட்புறப் பாடல்கள் பாடியும், சின்னஞ் சிறு குழந்தைகள் கோலாட்டாம் ஆடியும் அம்மனை வரவேற்பார்கள்.

மக்கள் தாங்கள் கொண்டு வந்த மலர்கள் மற்றும் பூ மாலைகளை அம்மனுக்கு கொடுத்து அர்ச்சனை செய்து தீபாராதனை தொட்டு கும்பிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டுவார்கள். இன்றைக்கு அம்மனை தரிசித்தால் பயங்கள் நீங்கி தைரியத்துடன் வெற்றி பெற அருள் புரிவார்.

இந்திர விமான உலா புறப்படும் நேரம்

காலை எழுந்தருளும் நேரம் : 7.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகனம் : மரவர்ணச் சப்பரம்
மாலை எழுந்தருளும் நேரம் : 6.00 மணியளவில்
எழுந்தருளும் வீதிகள் : நான்கு மாசி வீதிகள்
வாகனம் : இந்திர விமானம்
திருவீதியுலா முடிவுற்று கோயிலுக்கு வரும் நேரம் அதிகாலை 1.00 மணியளவில் இருக்கும்.
மீனாட்சி அம்மன் திக்குவிஜயமும் திருக்கண் மண்டபத்தில் நடைபெறும்.

Story first published: Monday, May 1, 2023, 13:00 [IST]
Desktop Bottom Promotion