இந்தியாவின் முதல் பெண் உளவாளி யார்? அவர் ஏன் தன்னுடைய கணவரையே கொன்றார் தெரியுமா?

இந்திய சுதந்திர போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. மகாத்மா காந்தி அகிம்சை வழியில் சுதந்திரத்திற்காக போரடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் சுபாஷ் சந்திர போஸ் படை திரட்டி இராணுவரீதியாக ஆங்கிலேயர்களை பலவீனப்படுத்திக் கொண்டிருந்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தில் பெரும்பாலும் ஆண் தலைவர்களுடன் சேர்ந்து, பெண் தலைவர்களும் துப்பாக்கியை எடுத்து போராடியதுடன், உளவாளி வேலைகளை செய்து ஆங்கிலேயர்களின் தூக்கத்தைக் கெடுத்தனர். இந்தியாவின் முதல் இராணுவத்தில் சில அதிபுத்திசாலியான பெண் உளவாளிகள் இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண் உளவாளியைப் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

India s First Female Spy Who Killed Her Husband

நீரா ஆர்யா

உத்தரபிரதேசத்தின் ஒரு புகழ்பெற்ற வணிகக் குடும்பத்தில் 1902 மார்ச் 5 ஆம் தேதி பிறந்த நீரா ஆர்யா, பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமான காவல்துறை அதிகாரியாக இருந்த ஸ்ரீகாந்த் ஜெய்ஸ்வாலை மணந்தார். ஸ்ரீகாந்த் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு எதிராகப் பணியாற்றினார், ஆனால் நீராவின் இதயத்தில் தேசபக்தி நிறைந்திருந்தது, அதனால் அவர் கணவருக்கு எதிராக செயல்பட்டு சுதந்திரத்திற்காக போராடினார்.

ஏன் கணவரைக் கொன்றார்?

சுபாஷ் சந்திர போஸை கொல்வதற்கு நீராவின் கணவருக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து உத்தரவு வந்ததை நீரா அறிந்ததும், அவர் ஒரு துணிச்சலான முடிவெடுத்து தனது கணவரைக் கொன்று பிரிட்டிஷ் அரசின் திட்டத்தை முறியடித்தார். இந்த சம்பவம் அவரது துணிச்சலை மட்டுமல்ல, நாட்டின் மீதான அவரது அசைக்க முடியாத விசுவாசத்தையும் வெளிப்படுத்தியது. இந்த துணிச்சலான முடிவுக்குப் பிறகு, நீரா ஆர்யா ஆசாத் ஹிந்த் ஃபௌஜின் பெண்கள் பிரிவான 'ஜான்சி கி ராணி ரெஜிமென்ட்டில்' சேர்ந்தார்.

ஏன் உளவாளியாக மாறினார்?

இந்திய தேசிய இராணுவத்தில் சிப்பாயாக இருப்பதற்குப் பதிலாக, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிரிட்டிஷ் இராணுவத்தின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அதைப் பற்றி ஐ.என்.ஏ-விடம் தெரிவிக்கும் ஆபத்தான உளவாளி வேலையை அவர் தேர்ந்தெடுத்தார். நேதாஜியின் அடையாளம் மற்றும் இருப்பிடத்தை ரகசியமாக வைத்திருப்பதும், அவரின் உளவு வேலையில் பெறப்பட்ட தகவல்களை ரகசிய தொடர்பு மூலம் அனுப்புவதும் அவருடைய நோக்கமாக இருந்தது.

பிரிட்டிஷ் அரசின் சித்திரவதை

ஒரு மிஷனில் ஈடுபட்டிருந்த போது, நீரா ஆர்யா பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு, அவரது கணவரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார். சிறையில் அவருக்குக் கடுமையான சித்திரவதைகள் நடத்தப்பட்டது. அவருடைய மார்பில் சூடான இரும்புக் கம்பிகள் பதிக்கப்பட்டிருந்தன, அப்போதும் அவர் ஐ.என்.ஏ அல்லது நேதாஜி பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நேதாஜியின் இருப்பிடம் குறித்து அவரிடம் விசாரித்த போது, 'எனக்கு நேதாஜி பற்றித் தெரியாது, ஆனால் என் உயிரை விட நாட்டைக் காப்பாற்றுவதே என் கடமை' என்று அவர் கூறினார்.

இந்திய சுதந்திரத்திற்கு பின் அவருக்கு என்ன நேர்ந்தது?

சுதந்திரத்திற்குப் பிறகு, நீரா ஆர்யா மக்களாலும், அரசாங்கத்தாலும் மறக்கப்பட்டார். அவருக்கு எந்தவிதமான அரசாங்க அங்கீகாரமும், மரியாதையும் கிடைக்கவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு அவர் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்ததாகவும், டெல்லியின் தெருக்களில் பூக்களை விற்று வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவருடைய தியாகத்திற்கும், வீரத்திற்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் அவர் அதைப்பற்றி விரக்தி கொள்ளாமல் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

Story first published: Wednesday, July 30, 2025, 13:50 [IST]
Desktop Bottom Promotion