சொன்னா நம்பமாட்டீங்க.. ஆணின் மூக்கில் குடியிருந்த சுமார் 150 லார்வாக்கள்.. அதுவும் உயிரோடு இருந்துச்சாம்..

ஒவ்வொரு நாளும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஆச்சரியப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் புளோரிடாவைச் சேர்ந்த ஒரு ஆணின் மூக்கில் இருந்து சுமார் 150-க்கும் அதிகமான உயிருள்ள லார்வாக்கள் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர்களால் அகற்றப்பட்டுள்ளன என்பது தெரியுமா?

ஆம், புளோரிடாவைச் சேர்ந்த ஒரு ஆண் பல மாதங்களாக தனது மூக்கில் ஏதோ ஒன்று தொந்தரவு செய்வதை உணர்ந்து வந்துள்ளார். திடீரென்று ஒருநாள் அவரது முகம் மற்றும் உதடுகள் வீங்கி வித்தியாசமாக மாறியதோடு, மூக்கில் இருந்து இரத்தம் கசிவதை கண்டு அஞ்சி, ஜாக்சன்வில்லில் உள்ள HCA புளோரிடா நினைவு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரிடம் சென்றுள்ளார்.

Florida Man Has 150 Live Bugs Removed From His Nose

அப்போது ஜாக்சன்வில்லில் உள்ள மருத்துவர்கள் அவரது மூக்கை பரிசோதித்த போது, அதிர்ச்சியூட்டும் வகையில் ஒன்றை கண்டறிந்துள்ளனர். அது என்னவெனில், அவரது மூக்கு மற்றும் சைனஸ் சுரப்பிகளில் சுமார் 150-க்கும் அதிகமான லார்வாக்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். முக்கியமாக இவர் ஏற்கனவே நாசல் புற்றுநோயில் இருந்து தப்பித்த நோயாளி.

இதுக்குறித்து அந்நபர் ஃபர்ஸ்ட் கோஸ்ட் நியூஸிடம் கூறியதாவது, "நான் 2023 அக்டோபர் மாதத்தில் இருந்து மூக்கடைப்பு மற்றும் மூக்குப் பகுதியில் மிகுந்த அசௌரிகரியங்களை சந்தித்து வந்தேன். திடீரென்று பிப்ரவரி 09 ஆம் தேதி என் மூக்கில் இருந்து இரத்தம் வழிய என்னால் குளியலறைக்கு கூட எழுந்து செல்ல முடியவில்லை. பின் என் மூக்கு மற்றும் உதடு வீங்கி, முகம் வித்தியாசமாக மாறத் தொடங்கியது. அவ்வளவு மோசமாக நான் உணர்ந்தேன். உடனே மருத்துவமனைக்கு விரைந்து வந்தேன்." என்றார்.

இந்த வழக்கு குறித்து HCA புளோரிடா நினைவு மருத்துவமனையில் உள்ள டாக்டர் டேவிட் கார்ல்சன் கூறுகையில், மூக்கில் இருந்து இரத்தக்கசிவுடன் வந்த அந்நபரின் மூக்கை பரிசோதனை செய்ய, மூக்கின் வழியாக ஒரு கேமராவை உட்செலுத்தி பார்த்தேன். அப்போது அவரது மூக்கு மற்றும் சைனஸ் சுரப்பியில் டஜன் கணக்கான லார்வாக்கள் உயிருடன் இருப்பதை கண்டேன். இந்த லார்வாக்கள் மூக்கில் உள்ள திசுக்களை உண்பது, கழிவுகளை வெளியேற்றுவது போன்றவற்றை கண்டேன். மேலும் இந்த லார்வாக்கள் பல அளவுகளில் இருந்தன. அதில் சில சிறியதாகவும், பல பெரிய அளவிலும் இருந்தன. ஆனால் அவை அனைத்தும் உயிருடன் இருந்தன என்று கூறினார்.

இந்த லார்வாக்களை அகற்ற பல்வேறு விதமான கருவிகள் பயன்படுத்தப்பட்டன. ஏனெனில் சில லார்வாக்கள் ஆபத்தான முறையில் மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் அருகில் இருந்தன. இதனால் நிலைமை சற்று மோசமாக இருந்தது. ஏனெனில் அதை உடைத்தால், அந்நபர் உயிரிழக்க நேரிடும். இந்த லார்வாக்களை எந்த மாதிரியானவை என்பதை கண்டறிய ஒரு தொற்றுநோயியல் நிபுணரை தொடர்பு கொண்டதில், அந்த லார்வாக்கள் இறந்த மீன்களில் இருக்கக்கூடியவை என்பது தெரிய வந்தது.

அதற்கேற்ப அந்த நோயாளியும் இந்த காரணத்தை ஒப்புக் கொண்டார். ஏனெனில் இவர் இறந்த மீன்களை கையாண்ட பின் ஆற்றில் கைகளை கழுவி விட்டு அப்படியே விட்டுவிடுவாராம். கைகளை அவ்வளவு சுத்தமாக கழுவமாட்டாராம். இது தான் இப்படியான தொற்றை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

தற்போது அந்நோயாளிக்கு மூக்கை சுத்தம் செய்யும் சிறப்பான ஆன்டிபாராசிடிக் வழங்கப்பட்டுள்ளது மற்றும் இவர் விரைவில் முழுமையாக குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக, டாக்டர் கார்ல்சன் ஒருவருக்கு கை சுகாதாரம் மிகவும் முக்கியம். குறிப்பாக அசுத்தமான சூழலில் வேலை செய்பவர்கள் மற்றும் அசுத்தமான பகுதிகளில் இருப்பவர்கள் தங்கள் கைகளை இன்னும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Story first published: Saturday, February 24, 2024, 13:59 [IST]
Desktop Bottom Promotion