போவோமா 'பீர் பஸ்'ஸில் ஊர்கோலம்... இளைஞர்கள் வயிற்றில் பீர் வார்க்க வருகிறது சென்னை-பாண்டிச்சேரி பீர் பஸ்...!

நம் நாட்டு இளைஞர்கள் பயணம் செய்யும்போது சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினையே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி போலீஸிடம் சிக்கிக்கொள்வதுதான். சென்னைவாசிகளின் மது தாகத்தை தீர்க்கும் சொர்க்கமாக இருப்பது பாண்டிச்சேரிதான். பாண்டிச்சேரிக்கு பயணம் செய்துவிட்டு திரும்புவது மிகவும் ஆபத்தானதாகவே இருக்கிறது.

இளைஞர்களின் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காகவே வந்துள்ளது பீர் பஸ். சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு நாள் பயணம் செய்து திரும்பும் வகையில் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது. இதில் உள்ள என்ன விசேஷம் என்றால், இந்த பேருந்தின் பெயர் பீர் பஸ். இந்த பஸ்ஸில் பீர் குடித்துக்கொண்டே பாண்டிச்சேரிக்கு செல்லலாமா என்றால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளது.

Beer Bus: A New Tour Package Introduced From Chennai to Pondicherry in Tamil

சென்னையில் வசிக்கும் பல 'குடி'மகன்களுக்கு ஒரு நாள் பயணமாக ஜாலியாக பாண்டிச்சேரி செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். வார இறுதி நாட்கள் என்றாலே பாண்டிசேரியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்தான் ஏராளம். இவர்களை குறிவைத்தே இந்த புதிய சேவையை வழங்க புதுச்சேரியை சேர்ந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

புதுச்சேரியில் கட்டமாறன் ப்ரூயிங் கோ-பாண்டி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு 'பீர் பஸ்' என்ற புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பீர் பஸ் சேவை வரும் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு நாள் உல்லாச பயணத்தை அனுபவிக்க ஒரு நபருக்கு ரூ.3,000 டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பீர் பஸ்ஸில் விதவிதமான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டே புதுச்சேரியின் அழகை ரசிக்கலாம். அதே சமயம், பீர் பஸ் என்பதால், பஸ்சில் நினைத்தபடி மது அருந்தலாம் என்று நினைக்காதீர்கள். அதற்கும் கட்டுப்பாடுகள் உண்டு.

இது குறித்து இந்த வித்தியாசமான பயணத்தை ஏற்பாடு செய்திருக்கும் அமைப்பாளர்கள் கூறும்போது, 'பீர் பஸ்' என்று பெயர் வைத்திருப்பதால், பேருந்தில் மது அருந்தலாம் என யாரும் நினைக்க வேண்டாம்... பேருந்தில் பீர் குடிக்க அனுமதிக்க மாட்டோம், ஆனால் புதுச்சேரி அரசு அனுமதித்த இடத்தில் பேருந்து நிறுத்தப்படும். அங்கு பீர் குடிக்க அனுமதிக்கப்படும்" என்று கூறினார்கள்.

சென்னையில் இருந்து ஒரு நாளைக்கு 35 முதல் 40 சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சந்தோஷமாக மது அருந்திவிட்டு மீண்டும் சென்னைக்கு வரலாம். இதற்கான முன்பதிவு துவங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு பீர் பஸ் அறிவிப்பு குறித்த செய்திகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தும், தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இது சென்னைக்கு புதிதாக இருக்கலாம் ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அவ்வப்போது அரசு மற்றும் தனியார் அமைப்புகள் பல்வேறு கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன.

Story first published: Monday, April 10, 2023, 16:20 [IST]
Desktop Bottom Promotion