ஆனி அமாவாசை 2024: இன்று இதை மட்டும் மறக்காமல் செய்துவிடுங்கள்..!

சூரியன் மிதுன ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது. அந்த வகையில் இன்று வெள்ளிக்கிழமை ஆனி மாத அமாவாசை பிறக்கிறது. இன்றைய தினத்தில் நாம் தானம் செய்தால் நம் குடும்பம் ஏழேழு தலைமுறைக்கும் செல்வ செழிப்புடன் வாழும் என்பது ஐதீகம்..

ஆனி மாத அமாவாசையின் சிறப்புகள்

திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் ஆனி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் 12 ஆண்டுகள் தர்ப்பணம் கொடுத்த பலன் நமக்கு கிடைப்பதுடன், நம்முடைய முன்னோர்களுக்கு மனநிறைவை தரும். 12 வருடங்கள் பிதுர் தர்ப்பணம் கொடுத்த திருப்தியை முன்னோர்களுக்கு ஏற்படுத்தும். இதனால் பித்ரு சாபம், பித்ரு தோஷம் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் இந்த நாளில் புனித நீராடுவது, மந்திர ஜபம் செய்வது, தானம் செய்வது உள்ளிட்ட அனைத்துமே பல மடங்கு அதிக பலனை தரக் கூடியதாகும்.

aani amavasai 2024 significance ancestors worship and donate these things is good for life

ஆனி மாத அமாவாசையில் திதி கொடுக்கும் நேரம்

ஆனி மாத அமாவாசை ஜூலை 05ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று வருகிறது.இன்று காலை 04.56 மணி துவங்கி, நாளை ஜூலை 06ம் தேதி காலை 5 மணி வரை அமாவாசை திதி உள்ளது. நாள் முழுவதும் அமாவாசை திதி உள்ளதால் இது சர்வ அமாவாசையாக கருதப்படுகிறது. அதுவும் சிவ பெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்துடன் இணைந்து அமாவாசை என்பதால் இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு மற்றும் தானங்கள் இரண்டு மடங்கு பலனை தரக் கூடியதாகும்.

வழிபடும் முறை

ஆனி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து விட்டு, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரையில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் வைத்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

ஆனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் அல்லது எலுமிச்சை பழம் வாங்கி , அதன் மீது கற்பூரம் கொளுத்தி உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய பூசணிக்காயை உடைத்தும், எலுமிச்சம் பழத்தை நசுக்கியும் திருஷ்டியை கழித்திட வேண்டும்.

ஆனி அமாவாசையில் தானம் கொடுக்க வேண்டியவை

நம் ஜாதகத்தில் கிரக கோளாறுகள், பித்ரு சாபங்கள் ஆகியவை நீங்க, சில குறிப்பிட்ட பொருட்களை தானம் வழங்குவது மிகவும் முக்கியமானதாகும். ஆஷாட அமாவாசை என்கிற இந்த ஆனி மாத அமாவாசையில் ஏழைகளுக்கு உணவு மற்றும் பணத்தை தானமாக வழங்குவது மிகவும் சிறப்பானதாகும். மேலும் இன்று கோதுமை மற்றும் அரிசியை தானமாக வழங்குவது சூரியன் மற்றும் சந்திரனின் ஆசிகளை பெறுவதுடன், ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களின் பலத்தையும் அதிகரிக்கச் செய்யும். ஆயுள், ஆரோக்கியம், அழகு, உயர் பதவி, உடல் வலிமை, தலைமை பதவி, அதிகாரம், செல்வம், மனநிறைவு ஆகியவற்றை தருவது இந்த இரண்டு கிரகங்களும் தான்.

பலன்கள்

ஆனி மாதம் இறை வழிபாடு மேற்கொள்ளதக்க ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த ஆனி மாதத்தில் வருகிற அமாவாசை தினத்தில் தர்ப்பணம் தந்து நமது முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் சுபிட்சங்கள் பெருகும். திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எகாரிய தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

Story first published: Friday, July 5, 2024, 10:13 [IST]
Desktop Bottom Promotion