Aadi Perukku 2025: ஆடிப்பெருக்கின் வரலாறு என்ன? எந்த நேரத்தில் தாலிக்கயிறு மாற்றி கட்ட வேண்டும் தெரியுமா?

Aadi Perukku 2025: பொதுவாகவே ஆடி மாதம் வழிபாடுகளுக்கு உகந்த சிறப்பான மாதமாக கருதப்படுகிறது. இந்த ஆன்மீக மாதத்தில் முழு கவனமும் ஆன்மீகத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என எந்த விதமான விசேஷங்களும் இருக்காது. ஆனால் ஆடிப்பூரம், ஆடி அம்மாவாசை, ஆடி கிருத்திகை, மற்றும் ஆடி பெருக்கு பல்வேறு விஷேச நாட்கள் இருக்கும். இதில் ஆடி பெருக்கு எனப்படும் ஆடி 18 பற்றியும் அதன் வழிபாடுகள் பற்றியும் பார்க்கலாம்.

Aadi Perukku 2025 History Significance Celebrations amp amp Traditional Rituals

ஆடி 18 வரலாறு

பெரும்பாலும் 18 என்னும் எண் சிறப்பான ஒன்றாக இருக்கிறது. சபரி மலை படிக்கட்டுகள், பகவத்கீதை அத்தியாயங்கள், மகாபாரத போர் நாட்கள், மகாபாரத நூல் அத்தியாயங்கள், மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் மேல்கணக்கு நூல்கள் என பல வரலாறுகள் இந்த எண் பதினெட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அந்த வரிசையில் ஆடி 18 அதன் சிறப்பை பெறுகிறது.

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த மகாபாரத போர் ஆடி 1-ம் நாளில் துவங்கியதாக கூறப்படுகிறது. இதில் கௌரவர்களும் பாண்டவர்களும் அவர்களின் படைகளோடு போரிட்டார்கள். இதில் பாண்டவர்கள் அவர்களின் உறவுகளையே எதிர்க்க நேர்ந்தது. ஆனால் அதர்மத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டார்கள். கடைசியில் போரில் வெற்றி பெற்று தர்மத்தை நிலைநாட்டி வெற்றி பெற்ற நாளாக இந்த ஆடி 18 இருக்கிறது.

காவிரி வரலாறு

காவிரி தோன்றிய வரலாறு என பல கதைகள் சொல்லப்படுகிறது. அதில் ஒன்று ஒரு காலத்தில் சோழ நாட்டை ஆட்சி செய்த காந்தமன் மன்னன் அவனின் தேசம் மழையை மட்டும் நம்பி இருக்காமல், நீர்பாசனத்திற்கு மாற்று வழியாக நதி ஒன்று வேண்டும் என அகத்தியரிடம் வேண்டியதாவவும், அகத்தியர் கமண்டலத்தில் இருந்த நீரை ஊற்றி விரிந்து செல்ல சொன்னதனால் காவிரி உருவானது என்பது.

மற்றொன்று சூரபத்மன் சிவனிடம் வரம் பெற்று அனைத்து தேவர்களையும் சிறைபிடித்த போது, இந்திரன் தப்பித்து தென்னகத்தில் ஒளிந்திருந்ததிலும், அவரை பிடிக்க சூரபத்மன் வருணை வதைத்து மழை இல்லாமல் மக்களை வறட்சி மற்றும் பஞ்சத்தால் துன்புறுத்தி இந்திரனை பிடிக்க திட்டமிட்டார். அப்போது அகத்தியர் சிவபெருமானிடம் முறையிடப்போது, அவர் தலையில் இருக்கும் கங்கையின் ஒரு பகுதியை கமண்டலத்தில் கொடுத்ததாகவும், அதை அவர் பூமியில் வைத்த போது விநாயகர் காகமாக மாறி அதை தட்டி விட்டு விரிந்தோடியதால் காவிரி என பெயர் பெற்றது எனவும் கூறப்படுகிறது.

காவிரி வழிபாடு

ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். ஆடி மாதம் கோடைகாலம் முடிந்து பயிரிடுவதற்கு ஏற்ற மழைக்காலமாகவும் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து வரும் காலமாகவும் இருக்கும். இதனால் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்து பயிர்கள் செழிப்பாக வளரும். இதனால் பொங்கி வரும் காவேரியை மக்கள் மலர் சூடம் பழங்கள் என அனைத்தும் வைத்து வழிபடுவார்கள்.

ஆடி 18-டிற்கு பத்து நாட்களுக்கு முன்பே நவதானியத்தால் முளைப்பாரி வளர்த்து, ஆடி பெருக்கு அன்று பொது இடத்தில் வைத்து பெண்கள் கும்மியடித்து ஆற்றிற்கு கொண்டுவந்து விநாயகரை வணங்கி ஆற்றில் விடுவார்கள். இதனால் அந்த வருட விளைச்சல் நன்றாக இருக்கும் என நம்பப்படுகிறது.

காவிரிக்கு சீர்

ஸ்ரீ ரங்கநாதர் அவரின் தங்கையான காவிரி கருவுற்றிப்பதற்காக சீர் கொடுக்கும் வழக்கம் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. மக்களும் காதோலை கருகமணி என்பதும் பணவோலை மற்றும் கருகமணியால் செய்யப்பட்ட வளையலை தண்ணீரில் விட்டு காவிரி அன்னையை வணங்குவார்கள்.

ஆடி பெருக்கு

ஆடி பதினெட்டு அன்று என்ன செய்தாலும் பெருகும் என்பது ஐதீகம். இந்த நாளில் புதுமண தம்பதிகளுக்கு தாலி பிரித்து போடும் வழக்கமும், திருமணம் ஆகி பல வருடங்கள் கடந்த பெண்கள் தாலி கயிற்றை மாற்றி கொள்ளும் பழக்கமும் பரவலாக காணப்படுகிறது. இந்த நாளில் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணைகாக வேண்டி கொள்வார்கள்.

அதே போல் வாழ்வில், தொழில், கல்வியில் என எடுத்த அனைத்திலும் வெற்றி பெற துவங்க வேண்டிய சிறப்பான நாளாக இது கருதப்படுகிறது. இந்த நாளில் தங்கம் அல்லது மற்ற பொருட்களை வாங்குவது பல்கி பெருகும் என்பது ஐதீகம். தங்கம் விற்கும் விலையில் வாங்க முடியாதவர்கள் வீட்டில் மஞ்சள் மற்றும் உப்பு போன்ற மங்கள பொருட்களை வாங்குவது நல்லது.

வழிபாடு

ஆடி பெருக்கு வழிபாடு முடிந்தவர்கள் நீர்நிலைகளுக்கு சென்றும், முடியாதவர்கள் வீட்டிலேயும் படையலிட்டு வழிபடுவார்கள். இது அவர்களின் வழக்கங்களை பொருத்தும், அவர்களின் வாழ்விடத்தை பொருத்தும் மாறுபடும்.

வழிபாடு செய்ய வேண்டிய நேரம் மற்றும் படையல் பொருட்களை பற்றி பார்க்கலாம்.

தேதி: ஆகஸ்ட் 3 (03/08/2025)

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 9 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் 12 மணி வரை

தாலி கயிறு மாற்றும் நேரம்: காலை 11 மணி முதல் 12 மணி வரை (நவமி முடிந்து தசமி துவங்கிவிடும்)

படையல் - காப்பரிசி, பழங்கள், வெற்றிலை பாக்கு, நெய்வேத்திய பொருட்கள் உங்கள் வழக்கப்படி உணவு பொருட்கள் மற்றும் இனிப்புகள் வாங்கி வைத்தோ செய்து வைத்தோ வழிபடலாம்.

Story first published: Saturday, August 2, 2025, 11:59 [IST]
Desktop Bottom Promotion