இயல்பாய் இரு எல்லாம் தானாய் நடக்கும்

By Mayura Akilan

ஞானி ஜுன்னாயிது தனது சீடர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் எந்த கிராமமும் தென்படவில்லை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெட்ட வெளிதான்.

தலைக்கு மேலே வெயில் சுட்டெரித்தது. எங்காவது சென்று இளைப்பாரலாம் என்றால் மரம் செடி, கொடிகள் எதையுமே அந்த வெளியில் காணமுடியவில்லை. தாகம் அவர்களுடைய தொண்டையை வறட்டியது. பசியோ அவர்களை தள்ளாட வைத்தது. மயக்கம் போட்டு விழாத குறையாக அவர்கள் மெதுவாக நடந்து கொண்டிருந்தனர்.

குடிக்க தண்ணீரும் கிடைக்காமல் உண்ண உணவும் கிடைக்காமல் வீடுகளற்ற குட்டி பாலைவனம் போன்ற பகுதியில் நாள் முழுவதும் அவர்கள் பயணம் செய்தனர்.

மெல்ல இருட்டத் தொடங்கியிருந்தது. வழியில் ஒரு விசாலமான மரம் தென்பட்டது. சீடர்களின் மனநிலை அறிந்த குரு அவர்களை இளைப்பாறச் சொன்னார். உடனே சீடர்கள் அடித்துப் போட்டதுபோல் சுருண்டு படுத்தனர்.

எப்போதும் உறங்குவதற்கு முன்பாக பிரார்தனை செய்வது குரு ஜுன்னாசியின் வழக்கம். அன்றைய நல்ல செயல்களுக்கு நன்மையும், கெட்ட செய்திகளுக்கு மன்னிப்பும் வேண்டுவது அந்த பிரார்த்தனையின் போது நடைபெறும்.

அன்றும் வழக்கம் போல மண்டியிட்டு பிரார்த்தனை செய்த குரு, " இறைவா, இன்று தாங்கள் அளித்த அனைத்திற்கும் மனப்பூர்வமான நன்றி என்றார்.

இதனைக் கேட்டதும் அருகில் படுத்திருந்த ஒரு சீடன், குருவே இறைவன் இன்று நமக்கு ஒன்றும் தரவில்லையே? என்றான் கவலையுடன்.

யாரப்பா சொன்னது? என்றார் குரு புன்னகையுடன்?. இறைவன் இன்று நமக்கு அருமையான பசியை அளித்தார். தாகத்தை உணரவைத்தார் அதற்காகத்தான் நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன் என்று கூறினார்.

நீதி : வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு இயல்பாய் இரு.

Story first published: Monday, June 18, 2012, 11:40 [IST]
Desktop Bottom Promotion