உங்க வீட்டு சமையலறையில கண்டிப்பா இருக்க வேண்டிய செடிகள் என்னென்னனு உங்களுக்கு தெரியுமா? இதை படிங்க..

சமையலை ஸ்பெஷலாக்க, வீட்டு சமையலறை தோட்டத்தில் வைக்க வேண்டிய 3 மூலிகை செடிகள் என்னென்ன என்று இங்கு படித்தறியுங்கள்..!

By Soundarya S

சமையல் செய்தல் என்பது ஓர் அருமையான கலை. அந்தக் கலையை பொழுதுபோக்காக அல்லது முழுநேர வலையாக, குடும்பத்திற்காக செய்யும் பொழுது மனது கொள்ளும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சமைத்த உணவால், பசித்திருப்போரின் பசியை போக்குகையில், உள்ளம் அடையும் திருப்திக்கு இணையே இல்லை எனலாம்.

பொதுவாக சமைக்க தேவையான பொருள்களை கடைகளில் இருந்து வாங்கி வந்து உபயோகிப்பீர்; ஆனால், அப்படி கடைகளில் இருந்து வாங்கும் காய்களின் லிஸ்டில் முக்கியமாக இடம்பெறுவது கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்ற சமையலுக்கு தேவைப்படும் மூலிகைகளே! அவற்றை அதிகமாக வாங்கி வந்தால் வாடிவிடும்; ஆனால், அதன் தேவையின்றி சமையல் நிறைவடையாது. எப்பொழுதும் தேவைப்படும் பொருளாக இந்த சமையல் மூலிகைகள் விளங்குகின்றன.

Kitchen garden india

சமையலறை தோட்டத்தை ஆரம்பிக்க உதவும் மூலிகைகள் பற்றி இங்கே காணலாம்!

1. கொத்தமல்லி

கொத்தமல்லி அல்லது தனியா என்று அறியப்பட்ட இந்த மூலிகை சமையலின் சுவையை கூட்ட தேவைப்படும் மிக முக்கியமான ஒன்று. இது சமையல் தவிர பிற தேவைகளுக்கும் பயன்படுகிறது; அதாவது அழகைக் கூட்ட, உடலுக்கு குளிர்ச்சியை தர என பல விதங்களில் பயன்படுகிறது. இது வேகமாக வளரக்கூடிய ஒரு மூலிகை தாவரம் ஆகும்.

வளர்க்கும் முறை!

  1. கொத்தமல்லியை பானையில் அல்லது தொட்டியில் வளர்க்காமல், இட வசதியுள்ள ட்ரேயில் வளர்க்க வேண்டும். இந்த ட்ரேயை 80% மண்ணால் நிரப்ப வேண்டும்.
  2. தனியாவை 10-12 உடைந்த விதைகளை கொண்டு வளர்க்கலாம்; இந்த விதைகளை அரை அங்குல ஆழத்தில் புதைத்து, 3 அங்குல இடைவெளி விட்டு விதைக்க வேண்டும்.
  3. இவ்விதைகளின் மீது தண்ணீரை தொடர்ந்து தெளித்து வர வேண்டும்; 15 நாட்களில் இலைகள் துளிர் விடுவதை காண முடியும். இலைகள் முளைத்த பின்னும் நீர் தெளிப்பினை நிறுத்தாது தொடர்ந்து வரவும்.
  4. ட்ரேயில் அதிகப்படியான நீரை வெளியேற்றும் வகையில் துளைகள் அமைத்துள்ளீரா என்று உறுதி செய்து கொள்ளவும்.
  5. ட்ரேயை சூரிய ஒளி படும்படி வைக்கவும்.
  6. திரவ நைட்ரஜன் உரத்தை இதற்கு பயன்படுத்தலாம்; இது செடியின் வளர்ச்சிக்கு உதவும்.
  7. தனியா செடிகள் அதிக வெப்பம் மற்றும் அதிக குளிர் இல்லாத காலங்களில் நன்கு வளரும். அதிக வெப்பம் இச்செடியின் வளர்ச்சியை பாதிக்கும்.
  8. தனியா செடிகளை அதிக உயரமாக வளர்த்தால், அது சரியான சுவையை தராது. எனவே, 6 அங்குல உயரம் இருக்கும் போது, பயன்படுத்தும் பதத்திற்கு வருகிறது.
  9. தனியா செடியில் முளைத்த விதைகளை சேகரித்து, அடுத்த சுழற்சிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
  10. இந்த செடிகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து பயன்படுத்த வேண்டும்; அதாவது, ⅓ -மூன்றில் ஒரு பாகத்தை மட்டுமே பறித்து பயன்படுத்த வேண்டும்.

2. கறிவேப்பிலை

கறிவேப்பிலை இல்லாது பெரும்பாலான சமையல் முடிவடையாது. இந்த இலைகள் சமையலுக்கு மட்டுமின்றி மருத்துவத்துக்கும் பயன்படுகின்றன. இந்த இலைகளை வளர்ப்பது பல வகையில் உதவியாக இருக்கும்; இவற்றை வளர்ப்பது மிகவும் எளிமையான காரியம்.

வளர்க்கும் முறை

இந்த செடிகளை வளர்க்க 2 விதமான முறைகள் உள்ளன. முதல் முறை: கறிவேப்பிலை விதைகளை விதைத்து அவற்றை செடியாக மாற்றுவது. இந்த விதைகள் செடியாக ஓரிரண்டு காலம் எடுக்கும் - இது மிக மெதுவான முறை ஆகும்.

இரண்டாம் முறை: கறிவேப்பிலையின் ஒரு கொத்தினை, வளம் கொண்ட மண் நிரப்பப்பட்ட ஆழமான ஜாடியில் நட்டு வளர்ப்பது. இந்த ஜாடியில் அதிகப்படியான நீரை வெளியேற்றும் துளைகள் இடப்பட்டுள்ளனவா என்று உறுதி செய்து கொள்ளவும்.

வளர்க்கும் முறை

  1. கறிவேப்பிலை செடியை கதிரவனின் கதிர் படும்படி வைக்க வேண்டும். குளிர்காலத்தில் இச்செடி இலைகளை உதிர்த்திடும், ஆகையால், இந்த காலத்தில் செடிக்கு நீர் விடுவதை நிறுத்தவும்.
  2. இரும்பு சத்து கொண்ட உரத்தை செடிக்கு பயன்படுத்தவும்.
  3. இந்த செடியில் தோன்றும் பழங்களை நீக்கிவிட வேண்டும்; இது மேலும் அதிக இலைகள் வளர உதவும்.
  4. செடியின் காய்ந்த இலைகளை அவ்வப்போது நீக்கிவிட வேண்டும்.
  5. செடி 6 அங்குல நீளம் அடைந்ததும் அதை பறித்து பயன்படுத்தலாம்.

3. துளசி

என்னடா துளசிய எப்போ சமையலுக்கு பயன்படுத்துனாங்கனு யோசிக்கிறீங்களா? இந்த கேள்வி மனதில் எழுவது சரிதான். காலம் காலமாக நம் முன்னோர்கள் துளசியை வீட்டில் நட்டு, காலையில் அதை தொழுது, வலம் வந்து வாழ்ந்து மறைந்தனர். அவர்களுடன் இந்த பழக்கமும் மடிந்து விட்டது.

துளசியை சமையலில் சேர்க்க முடியாது தான்; ஆனால், துளசியின் மருத்துவ குணங்கள். பயன்கள் ஏராளம் - இது அனைவரும் அறிந்ததே! துளசி செடி வீட்டில் இருப்பது மிகவும் நல்லது, வீட்டின் சூழலை சாந்தமாக வைத்திருக்க உதவும்.

இப்படிப்பட்ட துளசியை வீட்டில் எப்படி வளர்ப்பது என்று பார்த்தறியலாம் வாருங்கள்!

வளர்க்கும் முறை!

  1. துளசி செடிகள் விதைகள் மூலமாக வளரக்கூடியவை. ஒரு ஆழமான, வளமான மண் கொண்ட ஜாடியில், 2 அங்குல ஆழத்தில் இவ்விதைகளை புதைக்கவும்.
  2. கதிரவனின் ஒளி படும்படி இந்த ஜாடியை வைக்கவும்.
  3. கோடை காலத்தில் செடிக்கு தினசரி தண்ணீர் ஊற்றவும் மற்றும் குளிர் காலத்தில், வாரம் 2-3 முறை நீர் ஊற்றினால் போதுமானது.
  4. 20 டிகிரி வெப்பநிலையில், துளசி விதைகள் 2 வாரத்தில் வளர்ந்துவிடும்.
  5. மாதம் ஒருமுறை செடிக்கு உரம் வைக்கவும்.
  6. இலைகள் பெரிதானதும், அவற்றை பறித்து பயன்படுத்தலாம்.

Desktop Bottom Promotion