மா சீசன் வந்திருச்சு ! மாமரத்தை கவனிங்க !!

By Mayura Akilan

How to care mango tree
முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். இதன் சுவையே அலாதியானது. வீட்டுத் தோட்டத்தில் மா மரம் வைத்து பராமரிப்பது சாதாரண விசயமில்லை. நல்ல வடிகால் வசதியும், சற்றே அமிலத்தன்மையும் உள்ள எந்த மண்ணிலும் மாமரங்கள் நன்கு வளரும். உறைபனியற்ற எந்த பகுதிகளிலும் மா மரங்களை வளர்க்கலாம்.

மரம் நடுதல்

தோட்டம் அமைக்கும் போது கன்றுகள் 40 - 50 அடி இடைவெளியில் நடவு செய்யவேண்டும். சாதாரணமாக, மாமரத்தோட்டங்களில் கழித்து விடுதல் தேவையற்றது. எனினும், முதல் சில ஆண்டுகள் அடிப்பாகத்தில் 3 அடி உயரம் வரை கிளைகள் வளராமல் கழித்து விடுவது நல்லது. ஒட்டு மாங்கன்றுகளில் வேர் பாகத்திலிருந்து வளரும் தளிர்களை நீக்கிவிடவேண்டும். 5 ஆண்டு வரை பூக்கும் பூக்களை கிள்ளிவிடவேண்டும். பின்னர் நல்ல காய்கள் பிடிக்கும் வகையில் உள்நோக்கி வளரும் கிளைகளையும், பலவீனமான கிளைகளையும் நெருக்கமான நுனிக் கிளைகளையும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுக்கு ஒருமுறை பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு மடக்கி உழுதல் வேண்டும்.

பூத்துக் குலுங்கும் மாம்பூக்கள்

மாமரத்தில் ஒவ்வொரு பூங்கொத்திலும் 4 ஆயிரம் பூங்கொத்துகள் வரை இருக்கும். இதில் பெரும்பகுதி ஆண் பூக்களாகவும், மற்றவை இருபால் பூக்களாகவும் காணப்படுகின்றன. உலர்ந்த அல்லது குளிர் தட்பவெப்பம், மாமரம் பூப்பதை தூண்டுகிறது. ஜனவரி – பிப்ரவரியில் மா மரங்கள் பூக்கத் தொடங்குகின்றன.

புதிய தொழில் நுட்பம்

மா மரத்தில் அதிக பூ வைத்து விளைச்சலை அதிகரிக்க மட் கா காட் என்ற தொழில் நுட்பம் உள்ளது. எருமை மாட்டிலிருந்து பெற பட்ட பாலிலிருந்து தயாரிக்க பட்ட மோர் 15 லிட்டர் எடுத்து கொண்டு அதனுடன் 15 லிட்டர் தண்ணீரை நன்கு கலக்க வேண்டும்.அதை மண் பானையில் ஊற்றி பானையின் மேல் பகுதியை துணியால் மூடி நிழல் பகுதியில் வைக்க வேண்டும் அல்லது மண்ணுக்கு அடியில் புதைத்து 21 நாட்கள் வைக்க வேண்டும்.அவ்வாறு வைப்பதால் நுண்ணுயிர் நொதித்தலால் பல நல்ல நுண்ணியிர்கள் உருவாகும்.1 லிட்டர் இந்த கலவையுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிப்பதனால் மா மரத்தில் பூக்கள் அதிகரித்து விளைச்சளும் அதிகரிக்கிறது. மேலும், எதிபான், பொட்டாசியம் நைட்ரேட் அல்லது நாப்தலீன் அசிடிக் ஆசிட் ஆகிய வேதிப்பொருட்களும் பூப்பதை தூண்டப் பயன்படுத்தப்படுகின்றன.

பூச்சி தாக்குதலுக்கு மருந்து

இது மா மரம் பூ பூக்கும் சீசன். இப்போது மாம்பூவைச் சரியாகப் பராமரித்தால் சித்திரையில் பழம் கிடைக்கும் மகசூல் அதிகரிக்கும். பூ பூக்கும் நேரத்தில் பூ பிணைக்கும் புழு தாக்குதல் காணப்படும். இதனால் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்படும். எனவே பூ பிணைக்கும் புழுவைக் கட்டுப்படுத்த கியூரா கிரான் பூச்சி மருந்தை 1 லிட்டர் நீரில் 2 மி.லி. என்ற அளவில் கலந்து பூ மீது தெளிக்க வேண்டும். தெளிக்கும்போது மெதுவாகச் செய்ய வேண்டும்.வேகமாக தெளிப்பானைப் பயன்படுத்தினால் பூ உதிர்ந்துவிடும்.மா பூத்திருந்தால் நாப்தலின் அசிட்டிக் அமிலம் 20 பிபிஎம் என்ற அளவில் தெளிப்பதால் பூ உதிராமல் தடுக்கப்படும். அதனால் ஒவ்வொரு பூவிலிருந்தும் மா பிஞ்சு உருவாகும் என்கின்றனர் வேளாண்மைத்துறை அதிகாரிகள்.

Story first published: Monday, March 19, 2012, 15:28 [IST]
Desktop Bottom Promotion