பசுமைக்குடில் மூலம் பலன் தரும் காய்கறிகள்

By Mayura Akilan

Homemade Greenhouse
கோடைகாலங்களில் தோட்டத்தில் உள்ள செடிகள் வாடிப்போவதும், குளிர் காலங்களில் அதிக பனி பெய்து மலர்களும், காய்கறிச் செடிகளும் கருகிப் போவதும் வாடிக்கை. பசுமைக் குடில் அமைப்பதன் மூலம் நாம் ஒரே மாதிரியான சீதோஸ்ண நிலையில் மலர்களையும் காய்கறிகளையும் பராமரிக்கலாம் என்கின்றனர் தோட்டக்கலைத்துறையினர்.

மலை மாவட்டங்களில் பசுமைக் குடில்கள் மூலம் கொய் மலர்கள் மட்டுமே பயிரிடப்பட்டு வந்தது. தற்போது சமதளமாக உள்ள இடங்களிலும் தக்காளி, வெள்ளரி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிடத் தொடங்கியுள்ளனர். இதனால் அனைத்து பருவநிலைகளிலும் தரமான காய்கறிகளை பெறமுடியும் என்கின்றனர் வேளாண்மைத் துறையினர்.

குறைந்த இடவசதி

மாடியிலோ அல்லது தரையிலோ 20+10 அளவில் வெயில்படும்படியான இடவசதி இருக்கின்றதா? இருந்தால் இந்த பசுமைக்குடில் அமைக்கலாம். ஐந்து நபர் கொண்ட குடும்பத்தின் காய்கனி, கீரைகள் தேவைகளை இந்த பசுமைக்குடில் பூர்த்தி செய்யும்.பசுமைக்குடில்கள் மூலம் பயிர்களைப் பயிரிடும் போது அதற்கான பருவம் என்பது இல்லாமல் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்ய முடியும்.

பசுமைக்குடிலில் சீதோஷ்ணத்தைக் கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்து வைக்க முடிவதால் திறந்தவெளி விவசாயத்தைக் காட்டிலும் உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது.அதோடு 99 சதவீதம் அளவுக்கு தரம் இருக்கும்.

பயிர்களுக்குத் தேவையான உர விநியோகம்கூட சொட்டுநீர் பாசனம் மூலம் நடைபெறுவதால் ஒவ்வொரு கிராம் உரம்கூட வீணாகாமல் பயிருக்கு நேரடியாக கிடைத்து விடுகிறது.

பூச்சித்தாக்குதல் இல்லை

குறைந்த பரப்பில் அதிக மகசூல் என்பதும் திறந்த வெளி விவசாயத்தில் ஏற்படும் பூச்சிகளின் தாக்குதல் என்பது பசுமைக்குடிலில் ஏற்படுவதும் இல்லை. கடும் வெயில், கடும் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் காரணமாக திறந்தவெளி விவசாயத்தில் ஏற்படும் பயிர் பாதிப்பு பசுமைக்குடிலில் இல்லை என்பது மற்றொரு சிறப்பம்சம்.

பசுமைக்குடில் அமைப்பு

பசுமைக்குடில் அமைப்பது சிரமம் அல்ல. அவரவர் தேவைக்கு ஏற்ப சிறியதாகவோ பெரியதாகவோ அமைத்துக் கொள்ளலாம். உங்கள் நோக்கம் என்ன என்பதைப் பொறுத்து அளவைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். மரச்சட்டம் அல்லது இரும்பு (angle iron) கொண்டு செய்து சட்டமும் அடித்து கூரைக்குப் ப்ளாஸ்டிக் ஷீட் அடித்துக் கொண்டால் அழகாக இருக்கும்.

தற்காலிகமான சிறிய அமைப்புப் போதும் எனில்... ஒரு நீளக் கம்பி / பிவிசி குழாயை அரை வட்டமாக வளைத்துத் தரையில் இறுக்கி விட்டு அதன் மேல் பாலிதீன் பையை இழுத்துக் கட்டி விட்டால் போதும். தேவைக்குத் திறந்து மூடி விடக் கூடியதாக வைத்துக் கொள்ளுங்கள்.

மூலிகை வளர்ப்பு

நமது அன்றாட வாழ்விற்குத் தேவையான காய்கறிகள், கீரைகள், மூலிகைகளையும் இம்முறையில் வளர்க்கலாம்.

பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, வெந்தயக்கீரை உள்ளிட்ட கீரைகளையும், கத்தரி, வெண்டைக்காய், தக்காளி, பாகற்காய் உள்ளிட்ட பலவகையான காய்கறிகளையும் பயிரிடலாம்.

மிக முக்கியமான மூலிகைகளான கற்பூரவல்லி, துளசி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை, சிறியாநங்கை, பெரியநங்கை, இன்சுலின், தத்துரா (கருஊமத்தை), பல்வலிப்பூண்டு, பார்வதிதழை, ஆடாதொடை, தைம் ரோஸ்மேரி, மின்ட் வகைகள், அறுபத்தாம் தழை, வெட்டிவேர், லேவண்டர், லெமன்கிராஸ், கரிசலாங்கண்ணி, தூதுவளை, அப்பகோவை, முடக்கத்தான், நொச்சி, பொடுதலை வளர்க்கலாம்.

Story first published: Saturday, March 31, 2012, 15:36 [IST]
Desktop Bottom Promotion