அடுக்குமாடி குடியிருப்பையும் அழகாக்கும் செடி, கொடிகள்

By Mayura Akilan

Garden Appartment
இல்லம் என்பது நம் அனைத்து உணர்வுகளையும் தாங்கி ஆறுதலைத் தரும் இடமாகும். நெருக்கடியான இன்றைய சூழ்நிலையில் பலரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு வெளியேயும், கொல்லைப்புறத்திலும் தோட்டம் வைத்து செடி கொடிகளை வளர்க்க வசதியில்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ளது அழகு செடிகள்.

புத்துணர்வு தரும் செடிகள்

வீட்டைச்சுற்றி அலங்கார செடிகள் மற்றும் இயற்கைப் பொருட்களான கற்கள், நீர்ச் செடிகள் முதலியவற்றை உபயோகித்து அழகுபடுத்துவதன் மூலம் வீட்டின் அமைப்புக்கு ஒரு இயற்கையோடு இணைந்த சூழலை ஏற்படுத்த முடியும். இது போன்றே வீட்டில் உட்பகுதியிலும் பலதரப்பட்ட செடிகளை வளர்ப்பதன் மூலம் வீட்டின் உட்பகுதியை நன்கு அழகுறச் செய்யலாம். இவை இயற்கையோடு இணைந்த சுற்றுப்புற சூழலையும், மன அமைதி மற்றும் புத்துணர்வை நமக்கு தருகிறது.

அழகு செடிகள்

வரவேற்பறை , குடும்ப அங்கத்தினர் மற்றும் நண்பர்கள், விருந்தினருடன் கலந்துரையாடும் பகுதி, கலைப் பொருட்கள் பாதுகாத்து வைக்கும் அலங்கார மேடை மற்றும் அடுக்குகள் சுற்றிலும் ஜன்னல் ஓரங்கள் போன்றவை வீட்டினுள் அலங்காரம் செய்வதற்கு மிக ஏற்ற இடங்கள்.

அலமாண்டா, ஆண்டிகோனான், அரிஸ்டோலோகியா, மனோரஞ்சிதம், ஆஸ்பராகஸ், பிக்னோனியா, காகிதப்பூ, பெரண்டை, கிளி மாட்டிஸ் சங்கு புஷ்பம், பைகஸ் ஐவி போன்ற செடிகள் வீட்டிற்குள் வளர்க்க ஏற்ற செடிகளாகும்.

அலங்கார இலைகள்

நம் வீட்டில் வரவேற்பரை மற்றும் கலை மற்றும் பரிசுப் பொருட்கள் பாதுகாத்து பார்வைக்கு வைக்கும் கண்ணாடி சுவர் அலமாரிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் , டைனிங்டேபிள் போன்ற பகுதிகளில் நன்கு வளர்ந்த அலங்கார இலைகள் கொண்ட செடிகளை வைத்து அழகுபடுத்தலாம். இவ்வாறு வைக்கப்படும் செடிகளின் எண்ணிக்கை நாம் வைக்கும் நாம் வைக்கும் அறையில் நீள அகல மற்றும் செடிகளின் அமைப்பை பொருத்து மாறுபடும்.

இங்கு வைக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது கசியும் நீர் தரையில் வழிந்து தரையை சேதம் செய்யா வண்ணம் இருக்க தனித்தனி தட்டுகள் வைக்க வேண்டும். இவை அறையினுள்ளே இருப்பதால் இவற்றில் இலைகளின் தூசி படிய வாய்ப்புள்ளமையால் சிறு தெளிப்பான் கொண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்துவதன் மூலம் செடிகள் நன்கு இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும்.

போர்டிகோ அழகு செடிகள்

போர்டிகோ வீட்டு மற்றும் வீட்டு நுழைவாயில் போன்ற இடங்களில் நல்ல சூரிய ஒளி படும்படி இருப்பதால் நாம் வெளித்தோட்டத்தில் வைக்கும் செடிகளையே தொட்டிகளில் வளர்த்து அவற்றை அவை தாம் கொண்டுள்ள அழகு இலைத் தன்மை, பூத்தன்மை மற்றும் பல நிற வேறுபாடு கொண்ட இலைகள் ஆகியவற்றிற்கு தக்கபடி தொட்டியை முன்னும் பின்னும் மாற்றி அமைப்பதன் மூலம் நன்கு அழகுபடுத்தலாம்.

போர்டிகோ பகுதியில் தொங்கும் தொட்டிகள் பொருத்திக் கொள்ள ஏதுவாக இரும்பு வளையங்கள் பல வரிசையாக கட்டிடம் கட்டும்போதே பொருத்தி இருக்கும் இவற்றில் தொங்கும் தொட்டிளில் பல அழகுச் செடிகளை வைத்து தொங்கிவிடுவதன் மூலம் அழகுறச் செய்யலாம். இவ்வாறு வீட்டின் முகப்பில் செடிகளைக் கொண்டு மிகவும் அழகுறச் செய்யலாம்.

ஜன்னல் பகுதியில் வெளியே சன்சேடு போன்ற பகுதி வரை வளர்ந்து அவற்றின் மேலிருந்து சன்னலை சார்ந்து தொங்கும் வண்ணம் கொடிகளை தரையில் நட்டு வளரச் செய்யலாம். சில தாவர வகைகள் சுவற்றில் ஒட்டி வளரும் தன்மை கொண்டது. சுவரொட்டி என்ற செடி தன்னுடைய தண்டுகளிலிருந்து வரும் சிறிய வேர்களைக் கொண்டு சுவற்றில் ஒட்டிக் கொள்ளும். இவற்றில் சிறுசிறு இலைகள் இருப்பதால் இது சுவற்றில் ஒட்டி படர்ந்து சுவரே வெளியில் தெரியா வண்ணம் அழகிய இலை கொண்டு மூடி எடுப்பான தோற்றத்தைத் தந்திடும்.

இது தவிர வீட்டின் முன் வாயில் போர்டிகோவின் முன்பகுதி , போர்டிகோ பகுதி போன்ற இடங்கள் தொட்டிகளில் வளர்க்கப்பட்டு பெரிய, சிறிய செடிகளை தனித் தொட்டிச் செடியாகவோ அல்லது கூட்டாகவோ வைத்து நல்ல எடுப்பான தோற்றத்தை ஏற்படுத்தலாம்.

Story first published: Saturday, January 14, 2012, 14:08 [IST]
Desktop Bottom Promotion