அமைதியாக பெண்களைக் கொல்லும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி தெரியுமா?

இங்கு அமைதியாக பெண்களைத் தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பெண்கள் தாயான பின், தங்களது உடல்நலத்தின் மீது அதிக அக்கறை கொள்ளமாட்டார்கள். ஆனால் தன் கணவன் மற்றும் குழந்தைகளுக்கு ஏதேனும் சிறு பிரச்சனை என்றாலும், அவர்கள் பதறிப் போவார்கள். ஒவ்வொருவருக்கும் தாயின் அருமையும் அருகில் இருக்கும் போது தெரியாது. ஒவ்வொரு தாயும் தன் கணவன் மற்றும் குழந்தையின் அன்பையும், அக்கறையும் பெறவே அதிகம் விரும்புவார்கள்.

இந்த வருட அன்னையர் தினத்தன்று, தாயாக இருக்கும் உங்கள் மனைவி மற்றும் உங்கள் அன்னையின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்ட நினைத்தால், பல பெண்களையும் அமைதியாக தாக்கி உயிரைப் பறிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பரிசோதனையை ஒவ்வொரு வருடமும் தவறாமல் மேற்கொள்ள வையுங்கள்.

பொதுவாக கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், முழுமையாக குணப்படுத்திவிடலாம். ஆகவே சற்றும் தாமதிக்காமல், இந்த அன்னையர் தினத்தில் இப்பழக்கத்தை மேற்கொள்ள வையுங்கள். இங்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனித பாபில்லோமா வைரஸ்

மனித பாபில்லோமா வைரஸ்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான பொதுவான காரணங்களுள் ஒன்று மனித பாபில்லோமா வைரஸ் ஆகும். பல ஆய்வுகளும் இதையே காரணமாக கூறுகின்றன. தற்போது, பதின் பருவத்தில் இருந்து பெண்களுக்கு மனித பாபில்லோமா வைரஸ் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே இந்த தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ளுங்கள்.

பாதுகாப்பில்லாத பாலியல் உறவு

பாதுகாப்பில்லாத பாலியல் உறவு

மனித பாபில்லோமா வைரஸ் பரவுவதற்கு பாதுகாப்பற்ற பாலியல் உறவு முக்கிய காரணமாகும். எனவே பாதுகாப்பான முறையில் உறவில் ஈடுபடுங்கள்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

புகைப்பிடிக்கும் பழக்கம், பல வகையான புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். அதிலும் ஒரு பெண் மனித பாபில்லோமா வைரஸால் தாக்கப்பட்டு, புகைப்பிடிக்கும் பழக்கமும் இருந்தால், அப்பெண்ணுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

கருத்தடை மாத்திரைகள்

கருத்தடை மாத்திரைகள்

கருத்தடை மாத்திரைகளை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், அது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இதற்கு காரணம் அம்மாத்திரைகளால் ஏற்படும் திடீர் ஹார்மோன் மாற்றங்கள் தான்.

ஹார்மோன் தெரபி

ஹார்மோன் தெரபி

சில பெண்கள் மாதவிடாய் நின்ற பின் ஹார்மோன் தெரபியை மேற்கொள்வார்கள். இந்த ஹார்மோன் தெரபியை மேற்கொள்ளும் போது, எக்காரணம் கொண்டும் உட்கொள்ளும் மருந்தின் அளவில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்திவிடாதீர்கள். மேலும் மருத்துவரின் மேற்பார்வையில் தான் இந்த முழு சிகிச்சையும் இருக்க வேண்டும்.

பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்

பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்

பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலமும் மனித பாபில்லோமா வைரஸ் தாக்கத்தை அதிகரிக்கும். எனவே நல்ல ஆரோக்கியமான உணவு மற்றும் டயட்டை மேற்கொண்டு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

பல உடல் நல பிரச்சனைகளுக்கு மன அழுத்தமும் ஓர் முக்கிய காரணம். ஏனெனில் மன அழுத்தத்தின் போது ஹார்மோன்கள் மாற்றமடைந்து, கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும் போது, அது புகை, மது போன்றவற்றை எடுக்கத் தூண்டி அபாயத்தை இன்னும் அதிகரிக்கும்.

PAP சோதனை

PAP சோதனை

இந்த சோதனையின் போது கர்ப்பப்பையில் இருந்து சில செல்கள் எடுக்கப்பட்டு, புற்றுநோய் செல்கள் உள்ளதா என சோதனை செய்யப்படும். இந்த சோதனையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளதா என்பதை நன்கு தெரிந்து கொள்ளலாம். எனவே பெண்கள் வருடம் ஒருமுறை தவறாமல் இந்த சோதனையை மேற்கொள்வது மிகவும் நல்லது. முக்கியமாக இந்த சோதனைக்கான நேரம் வெறும் 5 நிமிடம் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion