ரத்தத்தை சுத்தமாக்கும் கொத்தமல்லி கீரைகள்

By Mayura Akilan

Coriander
இந்திய சமையலில் தனியா எனப்படும் கொத்தமல்லிக்கு சிறப்பு மிக்க இடமுண்டு. சமையலில் மசாலா பொருளாக வாசனைக்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கொத்தமல்லியில் இருந்து வளரும் சிறுதாவரமான கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாக்கும் அத்தனை சத்துக்களும் இந்த சிறிய வகை தாவரத்தில் உள்ளது என்றால் மிகையில்லை. இது உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உரைவதை தடுக்கிறது. இதனால் ஹார்ட் அட்டாக் பாதிப்பு ஏற்படும் ஆபத்து குறைகிறது.

கண்பார்வை தெளிவடையும்

சிறுவயது முதலே கொத்தமல்லி கீரையைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலைக்கண்நோய் ஏற்பட்டவர்கள் கொத்தமல்லிக்கீரையை உணவில் சேர்த்து வர மாலைக்கண்நோய் குணமடையும்.

மக்கட் பேறு ஏற்படும்

உடலில் புதிய ரத்தம் உண்டாகி நல்ல பலம் பெற வேண்டுமானால் கொத்தமல்லிக்கீரையை நெய்யில் வதக்கி துவையல் போல சாப்பிட்டு வரவேண்டும். இதன் மூலம் விலை உயர்ந்த டானிக்கில் கிடைக்கும் சத்துக்களை விட அதிக சத்துக்கள் கிடைக்கும். தினசரி மல்லிக்கீரையைச் சாப்பிட்டு வர எந்த நோயினாலும் பாதிக்கப்படாமல் பலசாலியாக வாழலாம்.

கொத்தமல்லிக்கீரையை தினசரி சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமடையும், புதிய ரத்தம் உற்பத்தியாகும். இதனால் தாது விருத்தி அடையும். மக்கட் பேறுக்கு வழிகிடைக்கும்.

கர்ப்பிணிகள் கர்ப்பம் தரிக்கத் தொடங்கிய மாதத்தில் இருந்து கொத்தமல்லி கீரையை உணவில் சேர்த்து வர வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளரும். குழந்தையில் எலும்புகளும், பற்களும் உறுதியடையும். சொறி, சிரங்கு உள்ளிட்ட நோய்கள் தாக்காது.

வயிற்றுப்புண் குணமடையும்

வயிற்றில் புண் இருந்து அதன் மூலம் அடிக்கடி வலி ஏற்படுபவர்கள் கொத்தமல்லிக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் இதனால் புண் ஆறி வயிற்று வலி குணமடையும்.

வாய், உதடு போன்றவற்றில் சிறு புண் ஏற்பட்டிருந்தாலும் கொத்தமல்லியை துவையல் செய்து உட்கொண்டு வர விரைவில் நிவாரணம் கிடைக்கும்

மூக்கு தொடர்புடைய நோய்கள்

பீனிசம்,மூக்கடைப்பு,மூக்கில்புண்,மூக்கில் சதை வளர்தல் போன்ற நோயினால் சிரமப்படுபவர்கள் கொத்தமல்லித் துவையலை உணவில் சேர்த்து உட்கொள்ளவேண்டும். இதனால் மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும்.

தோல் நோய்கள் குணமாக்குவதில் கொத்தமல்லி முக்கிய பங்கு வகிக்கிறது. சொறி, சிரங்கு, புண் போன்றவைகளுக்கு மருந்து போட்டுக்கொண்டு வந்தாலும் தினசரி கொத்து மல்லிக்கீரையை உணவில் சேர்த்து வர அவை சீக்கிரம் குணமடையும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Saturday, November 26, 2011, 12:06 [IST]
Desktop Bottom Promotion