முக அழகோடு மனதையும் அழகாக்க பேஷியல் செய்யுங்க…

By Mayura Akilan

Facial
அழகு நிலையங்களுக்கு சென்று முகத்தை அழகு படுத்த செய்து கொள்ளும் பேஷியல் மனதிற்கும் அமைதி தரக்கூடியது என்கின்றனர் அழகியல் வல்லுநர்கள். பேஷியல் செய்யப்படும் போது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்பட்டு புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. மேலும் முகத்தில் உள்ள மெல்லிய நரம்புகள் தூண்டப்படுவதால் மனம் அமைதியடைகிறது.

பழங்கள் காய்கறிகள்

காய்கறிகள், பழங்களில் உயிர்ச்சத்துக்களும், ஆண்டிஆக்ஸிடென்ட்கள் இருப்பதால் அவற்றைக் கொண்டு செய்யப்படும் பேஷியல் நன்மை தருகிறது. அதேபோல் இயற்கை மூலிகைகளினால் கொண்டு செய்யப்படும் பேஷியல் சத்துக்களோடு, மருத்துவகுணம் கொண்டதாகவும் உள்ளது.

நம்முடைய சருமத்திற்கு எந்த வகையான பேஷியல் பொருந்துமே அதைத்தான் நாம் தேர்வு செய்ய வேண்டும். இல்லை என்றால், நமது சருமத்திற்கு உள்ள பிரச்சினைகளை அழகியல் நிபுணர்களிடம் தெரிவித்தால் அவர்கள் சரியானதைத் தேர்வு செய்து பேஷியல் செய்வார்கள்.

ஷாம்பெய்ன் பேஷியல்

காய்கறிகள், பழங்கள் தவிர, நத்தையின் வழுவழுப்பு, மீன்முட்டை உள்ளிட்டவைகள் கொண்டும் பேஷியல் செய்யப்படுவது பிரபலமடைந்து வருகிறது. அதோடு ஷாம்பெய்ன் எனப்படும் உயர்ரக ஒயின் மூலமும் பேஷியல் செய்யப்படுகிறது. உயர்ரக திராட்சைப் பழத்தைக் கொண்டு ஷாம்பெய்ன் தயார் செய்யப்படுவதால் அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பொலிவாக்குகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

முதுமையை தள்ளிப்போடும்

ஷாம்பெய்ன் பேஷியல் செய்வதனால் சருமத்தில் உள்ள மேடு பள்ளங்களும் சரியாகும். இது முதுமையை தள்ளிப் போடும், வறண்டு, தடித்துப் போன சருமத்தையும் மிருதுவாக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும், பருக்களை விரட்டும், கை, கால்,கழுத்து என்று கருத்துப் போன இடங்களில் உபயோகித்தால் சருமம் சாதாரண நிறத்துக்குத் திரும்பும் என்கின்றனர் நிபுணர்கள். எல்லா வகையான சருமத்துக்கும் ஏற்றது இந்த ஷாம் பெயின் ஃபேஷியல் என்பது இன்னொரு சிறப்பம்சம் என்கின்றனர் அவர்கள்.

மன அமைதி தரும்

பேஷியலின் போது கைகளினால் முகத்தில் உள்ள முக்கிய இடங்களில் அழுத்தம் கொடுப்பதால் முகத்திற்கு ரத்த ஓட்டம் முழுமையாகக் கிடைக்கிறது. இதனால் முகம் பொலிவடைகிறது. அதோடு மனஅமைதியும், சாந்தமும் ஏற்படும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். பேஷியல் செய்யும் போது மனதை நாம் அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டியதும் மிகவும் முக்கியம். பேஷியல் செய்து கொள்ள வந்துவிட்டு, மனதை கண்டபடி எதையாவது நினைத்து வறுத்திக் கொண்டிருந்தால் அந்த பேஷியலால் எந்த பலனும் இருக்காது என்கின்றனர் அவர்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, December 28, 2011, 14:38 [IST]
Desktop Bottom Promotion