மீண்டும் மக்களை மாஸ்க் அணிய சொல்லியுள்ள தமிழக அரசு... பிண்ணனி என்ன?

கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்படுத்திய பாதிப்புகளை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியாது. கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் இன்றுவரை நம்மை தொடர்ந்து வருகிறது. கடந்த ஒரு வருடமாகத்தான் மாஸ்க், தடுப்பூசி, சமூக இடைவெளி, ஈ-பாஸ் போன்ற வார்த்தைகளை கேட்காமல் இருந்தோம்.

தற்போது தொடர்மழை காரணமாக மீண்டும் இந்த வார்த்தைகள் நம் காதில் கேட்க தொடங்கியுள்ளது. மழைக்காலம் வந்தாலே இலவச இணைப்பாக சில நோய்களும் அவற்றுடன் வந்துவிடும். எனவே இந்த காலக்கட்டத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

Tamil Nadu Is Experiencing an Increase in Fever Cases, People Asked to Wear Mask

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மக்கள் முகமூடி அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தமிழகத்தின் கோயம்புத்தூரில் உள்ள அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இதனை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகிறார்கள்.

உடல்வலி, மூக்கு ஒழுகுதல், தலைவலி மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும் மற்றும் காய்ச்சல் ஏழு நாட்களுக்கு நீடிக்கும். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்ற ஆரோக்கிய பிரச்சினை உள்ளவர்கள் தங்கள் மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து அதற்கேற்ப மருந்துகளை உட்கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொண்டை புண் இருந்தால், கொதிக்கும் தண்ணீரைக் குடிக்கவும், கல் உப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வீட்டை விட்டு வெளியேறும் போது முகமூடி அணியவும், வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு கை, கால்களை கழுவவும், வைட்டமின் சி நிறைந்த உணவை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவையனைத்தும் கொரோன காலக்கட்டத்தில் நமக்கு கூறப்பட்ட அறிவுரைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கிடைத்துள்ள காய்ச்சல் தரவுகளின் அடிப்படையில், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதன்கிழமை (நவம்பர் 22) கனமழை பெய்யும் என்றும், கேரளாவில் புதன் (நவம்பர் 22) மற்றும் வியாழன் (நவம்பர் 23) ஆகிய இரு தினங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது. மழைக்காலம் நோய்கள் பரவும் காலம் என்பதால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னவென்று மேற்கொண்டு பார்க்கலாம்.

சளி மற்றும் காய்ச்சல்

மழைக்காலத்தில் வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றம், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிற வைரஸ் தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கும். ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் இரண்டும் ஒரே மாதிரியான அறிகுறிகளான மூக்கு ஒழுகுதல், தும்மல், உடல்வலி, காய்ச்சல், பொதுவான சோர்வு போன்றவைகளை ஏற்படுத்தும். சளி அறிகுறிகளை விட காய்ச்சல் அறிகுறிகள் பொதுவாக மிகவும் கடுமையானவை. உங்களுக்கு அதிக காய்ச்சல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மருத்துவரை அணுகவும்.

வைரஸ் காய்ச்சல்

மழைக்காலங்களில் இது மிகவும் பொதுவானது, வைரஸ் காய்ச்சல் என்பது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் காய்ச்சலாகும். இது ஒருவருக்கு எரிச்சல், சோர்வு, வலியை ஏற்படுத்தும். மற்ற அறிகுறிகளில் மூக்கு ஒழுகுதல், இருமல், குமட்டல் போன்றவை அடங்கும். வைரஸ் காய்ச்சல் பொதுவாக காலப்போக்கில் சிறிய வைத்தியங்கள் மூலம் மறைந்துவிடும், உங்கள் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அல்லது தொடர்ந்து வாந்தி இருந்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும்.

டெங்கு காய்ச்சல்

டெங்கு வைரஸால் ஏற்படும் கொசுக்களால் பரவும் இந்த வெப்பமண்டல நோய் மிகவும் மோசமானதுமற்றும் உயிருக்கு ஆபத்தானது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் பெரும்பாலும் மருத்துவமனையில் கவனிப்பு தேவைப்படுகிறது.

இதன் அறிகுறிகள் பொதுவாக 2-7 நாட்கள் நீடிக்கும் மற்றும் அதிக காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, சொறி, தசை மற்றும் மூட்டு வலிகள் ஆகியவை அடங்கும். டெங்குவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் ஒரு வாரத்திற்குப் பிறகு குணமடைவார்கள். உங்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் மருத்துவரை அணுகவும்.

மலேரியா

இந்தியாவில் மழைக்காலத்தில் ஏற்படும் மற்றொரு முக்கிய உடல்நல பிரச்சினையாகும். பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியால் ஏற்படும் மலேரியா மற்றும் பாதிக்கப்பட்ட பெண் அனாபிலிஸ் கொசுக்களால் பரவுகிறது.

காய்ச்சல், சளி, தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தசை அல்லது மூட்டு வலி, சோர்வு, விரைவான சுவாசம், இருமல், பொதுவான அசௌகரியம் போன்றவை மலேரியாவின் அறிகுறிகளாகும். இந்த கடுமையான அறிகுறிகள் உங்களுக்கு காணப்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.

டைபாய்டு

இது அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரின் மூலம் பரவும் நோய்த்தொற்றாகும், டைபாய்டு காய்ச்சலால் உயிரிழப்பு கூட ஏற்படலாம். இந்த பாக்டீரியா தொற்று கை கழுவுதல் குறைவாக இருக்கும் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. அதிக காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், பலவீனம் போன்றவை டைபாய்டு காய்ச்சலின் அறிகுறிகளாகும். உங்களுக்கு டைபாய்டு காய்ச்சல் இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion