கொடூரமான வெயிலை சமாளிக்க செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை... விளக்குகிறார் சரும மருத்துவர் கவிதா...!

வெயில்காலம் வந்தாலே இலவச இணைப்பாக ஆரோக்கிய பிரச்சினைகளும், சருமப் பிரச்சினைகளும் நம்மை தேடி வந்துவிடும். அதிலும் இந்த வருடம் வெயில் எதிர்பார்த்ததை விட அதிகமாகி இருப்பதால் வெயிலால் ஏற்படும் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது, அதை நாமே உணர்ந்திருப்போம்.

இந்த கடுமையான கோடைகாலத்தை பாதுகாப்பாக கடக்க வேண்டிய பொறுப்பும், தேவையும் நம்மிடம்தான் உள்ளது. அக்னி நட்சத்திரம் வரப்போகிற சூழ்நிலையில் பாதுகாப்பாக இருக்க சில விஷயங்களை செய்ய வேண்டும், சில விஷயங்களை செய்யக்கூடாது. அவை என்னென்ன என்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சரும மருத்துவர் கவிதா.

Summer Safety Tips Everyone Should Follow Explained By Dermatologist Kavitha

தண்ணீர்

வெயில் காலம் என்றாலே வெப்பம் அதிகமாக தான் இருக்கும். இந்த வெப்பம் அதிகமாகும் போது நமது உடல் வெப்பநிலையை குறைக்க வியர்வையை சுரக்க செய்யும். இது இயல்பான ஒன்று தான் என்றாலும், இதனால் நம் உடலில் இருக்கும் நீர் சத்துக்கள் குறைய துவங்கும்.

இப்படி நீர்சத்துகள் குறையாமல் இருக்க, தினசரி உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். வெறும் தண்ணீர் மட்டும் தான் குடிக்க வேண்டுமா என்றால், இல்லை. இளநீர், மோர், பழங்கள், பழசாறுகள், மற்றும் நுங்கு போன்றவற்றையும் எடுத்து கொள்ளலாம். இவை வெப்பத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள உதவ கூடியவை.

சன்ஸ்கிரீன்

வெயிலின் தாக்கத்தால் நம் உடலில் அதிகமாக பாதிக்கப்பட கூடியது நமது தோல் பகுதி தான். நாம் பொதுவாக வெளியில் செல்லும் போது நமது தோலின் மேற்பரப்பில் தான் சூரிய கதிர்கள் நேரடியாக விழும். நமக்கு காலை மற்றும் மாலை வேளையில்தான் சூரியனில் இருந்து வைட்டமின் டி கிடைக்கிறது என்றாலும், வெயில் அதிகமாக இருக்கும் போது யூவி-ரேஸ் எனப்படும் புறஊதா கதிர்களால் அதிக அளவில் பாதிக்கப்படும்.

இதில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள நல்ல தரமான சன்ஸ்க்ரீன்களை பயன்படுத்துவது நன்மை தரும். நீங்கள் வெளியே செல்வதற்கு 15-30 நிமிடங்களுக்கு முன்னால் சன்ஸ்க்ரீனை தடவ வேண்டும். உடலில் வெயில் படும் அனைத்து இடங்களிலும், குறிப்பாக கால் பகுதி மற்றும் காது பகுதியிலும் பயன்படுத்த வேண்டும்.

Summer Safety Tips Everyone Should Follow Explained By Dermatologist Kavitha

சௌகர்யமான உடை

பொதுவாக உடை என்பது நமது தோற்றத்தை மேம்படுத்துவதோடு நம்முடைய தன்னம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்யும். இதனால் பெரும்பாலும் நாம் கச்சிதமான உடைகளை மட்டுமே அணிவோம், ஆனால் வெயில்காலத்தில் இந்த தவறை செய்யக்கூடாது. ஏனெனில் இறுக்கமான ஆடைகள் வியர்வையை அதிகரித்து பல்வேறு சரும பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

முடிந்தவரை இறுக்கம் இல்லாத சற்று தளர்வான ஆடைகளை பயன்படுத்துவது சிறந்தது. லினான் மற்றும் காட்டன் ஆடைகள் வெயில் காலத்திற்கு ஏற்றவையாக இருக்கும். காட்டன் ஆடைகள் மிருதுவானதாகவும், எடை குறைந்ததாகவும் இருக்கும். மேலும் இது வியர்வையை உறிஞ்சும் தன்மையை கொண்டிருப்பதால் சரும பிரச்சனைகளை குறைகிறது.

வெயிலில் வெளியே செல்லாமல் இருப்பது

முடிந்தவரை வெயில் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. எப்படி வெளியே செல்லாமல் இருக்க முடியும் என நீங்கள் கேட்பது புரிகிறது. முடித்த வரை காலை 11 முதல் மாலை 4 மணி வரை இருக்கும் வெயிலில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. உங்கள் வேலைகளை இந்த நேரத்திற்கு முன் அல்லது பின் செய்து முடித்து கொள்ளவும்.

உடற்பயிற்சி

வெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்தால் எளிதாக எடை இழப்பு ஏற்படும் என்கிற நம்பிக்கை பரவலாக காணப்படுகிறது. இதனால் பலர் அதிக அளவில் உடற்பயிற்சி செய்கிறார்கள். இவ்வாறு செய்யும் போது அதிக அளவில் வியர்வை வெளியேறி நீர்சத்து இழப்பு ஏற்படும். கூடுமான வரை அதிகாலை அல்லது மாலை நேரத்திற்கு பின் உடற்பயிற்சி செய்வது நல்லது.

பூச்சி விரட்டிகள்

வெயில் காலத்தில் கொசு அல்லது வேறு வகையான பூச்சிகளால் தொல்லைகள் ஏற்படும். பெரும்பாலும் கொசுக்களால் ஏற்படும் டெங்கு, மலேரியா போன்ற நோய்களில் இருந்தும், சரும அழற்சியை ஏற்படுத்தும் மற்ற பூச்சி தொல்லைகளில் இருந்தும் நம்மை தற்காத்து கொள்ள இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்துவது நல்லது.

ஆரோக்கியமான உணவு

கோடைகாலத்தில் எளிதில் செரிக்க கூடிய நார்சத்து மற்றும் நீர்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்து கொள்வது சிறந்தது. குறிப்பாக நீர்பூசணி, சௌசௌ, முள்ளங்கி, முட்டைகோஸ், கீரை வகைகள், வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி போன்றவற்றை சேர்த்து கொள்ளவது நல்லது. காரமான உணவுகள் மற்றும் அதிக எண்ணெய் சேர்த்த அல்லது எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

குளிப்பது

இது நாம் எல்லாரும் செய்ய கூடிய ஒன்று தானே என நீங்கள் நினைக்கலாம். வெயில் காலத்தில் உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியடைய செய்ய குளியல் அவசியம். உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றத்தை குறைக்க இரண்டு முறை குளிப்பது நல்லது.

சிலர் இரண்டு தடவைக்கு மேலும் குளிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். அவ்வாறு குளிப்பது தவறில்லை. ஆனால், இரண்டு முறைக்கு மேல் சோப்பு பயன்படுத்தி குளிப்பது உடலில் இருக்கும் நல்ல பாக்ட்டீரியாக்களை அழிப்பதோடு சரும வறட்சியை ஏற்படுத்தும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Sunday, April 27, 2025, 21:04 [IST]
Desktop Bottom Promotion