International Tea Day 2024: உங்க நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமா இருக்கா? அப்ப இந்த டீயை அடிக்கடி குடிங்க..

International Tea Day 2024: உலகளவில் காபிக்கு அடுத்தப்படியாக ஏராளமானோர் விரும்பி பருகக்கூடிய ஒரு பானம் தான் டீ. சொல்லப்போனால் நிறைய பேருக்கு காலையில் எழுந்ததும் ஒரு கப் டீ குடிக்காமல் அந்நாளே சிறப்பாக இருக்காது. அப்படிப்பட்ட டீயை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 21 ஆம் தேதி சர்வதேச டீ தினம் கொண்டாடப்படுகிறது.

டீ ஒருவரது மனநிலையை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவுவதோடு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளையும் வழங்குகின்றன. இப்படிப்பட்ட டீயில் பல வெரைட்டிகள் உள்ளன. ஒவ்வொரு டீயும் ஒவ்வொருவிதமான நன்மைகளை உடலுக்கு வழங்குகின்றன.

International Tea Day 2024 Top 5 Best Tea Types For Better Digestion And Immunity

முக்கியமாக டீயைக் குடிப்பதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது மற்றும் செரிமானம் மேம்படுகிறது. இப்போது சர்வதேச டீ தினத்தை முன்னிட்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமான பிரச்சனைகளைப் போக்க உதவும் டீ வகைளைக் காண்போம்.

1. துளசி மற்றும் அஸ்வகந்தா டீ

துளசி மற்றும் அஸ்வகந்தா ஆகிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் டீயை ஒருவர் அடிக்கடி குடிக்கும் போது, அது மன அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. அதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இந்த டீ தயாரிப்பதற்கு கொதிக்கும் நீரில் துளசி இலைகள் மற்றும் அஸ்வகந்தா பொடியை சேர்த்து 2 நிமிடம் மூடி ஊற வைத்து, பின் வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

2. புதினா மற்றும் இஞ்சி டீ

புதினா மற்றும் இஞ்சி டீ ஒருவருக்கு புத்துணர்ச்சியை அளிப்பதோடு, செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும். இந்த டீயில் உள்ள புதினா வாயு, வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு போன்ற செரிமான பிரச்சனைகளில் விடுவிக்கும். அதே சமயம் இஞ்சியில் உள்ள ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். இந்த டீயை தயாரிப்பதற்கு, ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சியைத் தட்டிப் போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி, அதில் புதினா இலைகளை சிறிது சேர்த்து மூடி வைத்து, 3-4 நிமிடம் கழித்து வடிகட்டி, தேன் கலந்து குடிக்க வேண்டும்.

3. மஞ்சள் டீ

மஞ்சள் டீ உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. அதுவும் இந்த டீயை தயாரிக்கும் போது, அத்துடன் இஞ்சி, மிளகு ஆகியவற்றை தட்டிப் போட்டு டீ தயாரித்து குடித்தால், அது உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும்.

4. எலுமிச்சை மற்றும் இஞ்சி டீ

எலுமிச்சை, இஞ்சி மற்றும் தேன் கொண்டு டீ தயாரித்து குடிக்கும் போது, நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும். ஏனெனில் இவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த தேவையான முக்கியமான சத்தாகும். கூடுதலாக இந்த டீயைக் குடிக்கும் போது உடலினுள் உள்ள வீக்கம் குறையும், தொண்டை மற்றும் சுவாசப்பாதை சுத்தமாகும். முக்கியமாக இந்த டீயை ஒருவர் சளி, இருமல் பிடித்திருக்கும் போது குடித்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

5. இஞ்சி மற்றும் அதிமதுர டீ

இஞ்சி மற்றும் அதிமதுரம் ஆகிய இரண்டையும் கொண்டு டீ தயாரிக்கும் போது, சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முக்கியமாக இதில் உள்ள அதிமதுரம் நுரையீரல், தொண்டை ஆகியவற்றை ஆற்றும். அதே சமயம் இஞ்சி இருமல் மற்றும் சளி பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். முக்கியமாக இவ்விரு பொருட்களிலுமே நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் பண்புகள் உள்ளன. எனவே இந்த பொருட்களைக் கொண்டு டீ தயாரித்து குடிக்கும் போது சுவாச மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, May 21, 2024, 14:20 [IST]
Desktop Bottom Promotion