சளி, இருமல் பாடாய் படுத்துதா? அப்ப இந்த கை வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க...

Cold Cough Remedies In Tamil: குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. அதோடு மழையும் கொட்டித் தீர்க்கிறது. இப்படி காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், சளி, இருமல் போன்ற தொல்லையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்படக்கூடும்.

இப்படி சளி, இருமல் பிடித்துவிட்டால், அதை சரிசெய்ய சிலர் எப்போதும் வீட்டில் மருந்துகளை ஸ்டாக் வைத்திருப்பார்கள். ஆனால் பலர் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடவும், நிவாரணம் பெறவும் இயற்கை வழிகளை நாடுவார்கள். அதுவும் நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக சளி, இருமலில் இருந்து விடுபட கை வைத்தியங்களைத் தான் மேற்கொண்டார்கள்.

Home Remedies To Get Rid Of Cold And Cough In Winter

ஆரம்பத்திலேயே சளி இருமலுக்கு இப்படியான கை வைத்தியங்களைப் பின்பற்றினால் நோயெதிர்ப்பு சக்தி வலுவடைந்து விரைவில் சளி இருமலில் இருந்து விடுபடலாம். கீழே சளி இருமலில் இருந்து விடுபட உதவும் சில இயற்கை வைத்தியங்களைக் காண்போம்.

1. தேன் மற்றும் இஞ்சி

நம் வீட்டு சமையலறையில் இருக்கும் மருத்துவ குணம் வாய்ந்த பொருட்கள் தான் தேன் மற்றும் இஞ்சி. இவ்விரண்டுமே நம் முன்னோர்களால் சளி, இருமலின் போது பழங்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டவைகளாகும். இதில் இஞ்சி சளியை இறுக்கமடையச் செய்கிறது மற்றும் தொண்டை எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும் தேன் தொண்டை வலியைப் போக்குகிறது. எனவே இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து குடிக்கும் போது, இருமல் மற்றும் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதுவும் இப்படி தினமும் இரண்டு வேளை உட்கொள்ள வேண்டும்.

2. ஆவி பிடிப்பது

குளிர்ச்சியான காலத்தில் கடுமையான மூக்கடைப்பு, நெஞ்சு நெரிசல் போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்ல சூடான நீரில் யூகலிப்டஸ் எண்ணெயை சில துளிகள் சேர்த்து, அந்நீரை 10 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்து வந்தால், மூக்கடைப்பில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

3. மூலிகை டீ

நல்ல குளிர்ச்சியான காலத்தில், அதுவும் மழை நேரத்தில் நல்ல சூடான மூலிகை டீயை தயாரித்து குடித்து வந்தால், அது உடலுக்கு இதமாக இருப்பதோடு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதுவும் துளசி, பட்டை, மஞ்சள் ஆகியவற்றை கொதிக்கும் நீரில் போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி, வடிகட்டி குடிக்கும் போது, நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து, சளி, இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

4. மஞ்சள் பால்

மஞ்சளில் குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த மஞ்சள் தூளை பாலுடன் சேர்த்து கலந்து தினமும் இரவு தூங்கும் முன் குடித்து வந்தால், சளி, தொண்டை கரகரப்பு, இருமல் போன்றவற்றில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

5. இருமலுக்கான கசாயம்

* இந்த கசாயம் செய்வதற்கு இடி உரலில் 2 துண்டு இஞ்சி, 1 கையளவு துளுசி, 5 மிளகு, 5 கிராம்பு, 2 துண்டு பட்டை, 5 புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு இடிக்க வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்த, அதில் இடித்து வைத்துள்ளதை சேர்த்து, 3-5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதை இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
* இந்த கசாயத்தை சளி, இருமல் பிடித்திருக்கும் போது செய்து குடித்தால், சட்டென்று நிவாரணம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, November 17, 2025, 14:52 [IST]
Desktop Bottom Promotion