முடக்கு வாதத்தை குணமாக்கும் விஷ்ணநாபி !

By Mayura Akilan

Aconite Flower
நச்சுச் செடியாக இருந்தாலும் அதனை மருந்தாக பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர் நம்முன்னோர்கள். நாபி மற்றும் விஷ்ணுநாபி போன்ற தாவரங்கள் விஷத்தன்மை வாய்ந்தவையாக இருந்தாலும், குறைந்த அளவில் பயன்படுத்தினால் அது மருந்தாக செயல்படுகிறது.

நாபி தாவரம் இமயமலையின் உச்சிப் பகுதியில் காணப்படுகிறது. ஐரோப்பாவின் தெற்கு மற்றும் மையப்பகுதிகளில் இயற்கையாக வளர்கின்றது. ஐந்து அடி உயரம் வரை வளரும் பல பருவ குறுஞ்செடி. தண்டு தரை மீது படரும். கைவடிவிலான இலை மடல் பிளவுற்றவை. மலர்கள் வயலட் அல்லது நீல வண்ணமுடையவை. இதழ்கள் தொப்பி அமைப்பு கொண்டிருப்பதால் கிறிஸ்துவ துறவியர் தொப்பி என்று அழைக்கப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

தாவரத்தில் 0.4 சதவிகிதம் அகோனிடைன் எனும் ஆல்கலாய்டு உள்ளது. இத்துடன் நேபல்லைன், நீயூலைன்,மெஸ்அகோனிடைன் ஆகியவையும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

இதயநோய் குணமடையும்

பசுமை இலைகளும், வேரும் மருத்துவகுணங்கள் கொண்டவை. பெரும்பாலும் வேரிலிருந்தே மருந்து தயாரிக்கப்படுகிறது. பசுமை இலைகள் மற்றும் மஞ்சரிகளில் இருந்து கசாயம் தயாரிக்கப்படுகிறது. உலர்ந்த வேர் இந்திய மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இது உடல் வலுவேற்றி, காய்ச்சல் மற்றும் நரம்பு வலுவேற்றி. முடக்கு வாதம், இதய நோய்களுக்கும் சிறந்த மருந்தாகும். ஓமியோபதியில் வலி போக்குவியாகவும், தூக்கமருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இது அதிக அளவில் உட்கொண்டால் நஞ்சாகிவிடும். பண்டைய காலத்தில் அம்புகளின் நுனியை நச்சுப்படுத்த பயன்படுத்தப்பட்டது.

முடக்குவாதத்தை குணமாக்கும்

விஷ்ணநாபியின் தரையடித்தண்டும், வேரும் கடும் விஷத்தன்மை வாய்ந்தவை. உரிய முறையில் பாடம் செய்யப்பட்டால் நச்சு குறைந்துவிடும். மிகச்சிறிய அளவில் 0.018 கிராம் உட்கொண்டால் தொண்டை கரகரப்பு, பக்கவாதம், தொடர்காய்ச்சல் ஆகியவற்றிர்கும் மருந்தாக பயன்படும். இதை விட கூடுதலாக உட்கொண்டால் போதை நச்சாகவும், தூக்க மருந்தாகவும் பயன்படும்.வேரின் கரைசலை 5 துளி எடுத்து பிற மருந்துகளுடன் சேர்த்து காய்ச்சல் மற்றும் முடக்குவாதத்திற்கு மருந்தாக பயன்படுகிறது.

இதன் வேர் இதயநோயை குணப்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். வியர்வை தூண்டுவியாகவும், அகோனிடம் வீக்கம் குறைப்பானாகவும் செயல்படுகிறது.

இதன் வேரில் பல நச்சு ஆல்கலாய்டுகள் உள்ளன. அகோனிடைன், இண்ட் அகோனிடைன்,சேசம் அகோனிடைன் ஆகிய டெரிபினாய்டு ஆல்கலாய்டுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. வேரின் பொடி சொறி, சிரங்கு மற்றும் மூட்டுவலியில் மேல்பூச்சாக பயன்படுகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, September 5, 2011, 17:37 [IST]
Desktop Bottom Promotion