வாதநோய்களை குணமாக்கும் வாதநாராயண இலை

By Mayura Akilan

மனித உடலில் வாய்வு அதிகமானால் ஆர்த்தரைடீஸ் நோய் ஏற்படும் என்கிறது ஆயுர்வேதம். அளவுக்கு மீறி உடற்பயிற்சி செய்வது, இரத்தப் போக்கு, அதிக பாலியல் உறவினால் ஏற்படும் இழப்பு, இரவு அதிக நேரம் கண் விழித்தல், இயற்கை வேகங்களை தடை செய்தல், கவலை, எலும்பு முறிவு, மழைக்கால குளிர்காற்று போன்ற காரணங்களால் வாயு அதிகமாகி ஆர்த்தரைடீஸ் ஏற்படும் வாய்ப்புள்ளது.

அஜீரணமும் மலச்சிக்கலும் இணைந்து கழிவுப்பொருளை உடலை விட்டு நீக்க முடியாமல் போனால், உடலில் மூட்டு வலியை ஏற்படுத்தும். இதனை ஆமவாதம்' என்கிறது ஆயுர்வேதம். 'ஆமவாதம் என்பது ருமாடிஸத்தை குறிக்கும்.

முடக்குவாதம் குணமடையும்

வறண்ட நிலப்பகுதிகளில் வளரும் வாதநாரயண மரம் வலிமை குன்றிய மரமாகும். இதன் கிளைகளை வெட்டி நட்டுவைத்தாலே நன்கு வளரும்.

வாதாநாராயண மரம் சிறந்த மருத்துவ குணம் கொண்டது. இதனால் வாதவலி, கைகால் குடைச்சல், கணுச்சூலை எல்லாம் குணமடையும்.

வாத நாராயணன் இலைகள் வாதத்தை அடக்கும் குணமுடையவை. இலைகளை சிற்றாமணக்கு நெய் விட்டு வதக்கி வீக்கங்கள், கட்டிகள் இவற்றுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். இந்த இலைகளின் சாறு, வாதநோய்களுக்கான தைலங்களில் சேர்க்கப்பட்டால், வாதநோய் எளிதில் போகும் என்பது சித்த, ஆயுர்வேத வைத்தியர்களின் அபிப்பிராயமாகும்.

வாயுத் தொல்லை நீங்கும்

வாயுத் தொல்லையினால் சிலருக்கு கை, கால் குடைச்சல் அதிகமாக இருக்கும். மூட்டு, கை, கால், கணுக்களில் வாயு உட்கார்ந்து கொண்டு தொல்லை தரும்.

இந்த நோய் உள்ளவர்களுக்கு வாதநாராயண எண்ணெய் சிறந்த மருந்தாகும்.

காலை எழுந்த உடன் 30 மில்லி வாதநாராயணன் எண்ணெயை வெந்நீரில் கலந்து குடித்து வர ஒரு மணி நேரத்தில் பேதி போகும். ஐந்து, ஆறுமுறை பேதி போனால் நல்லது. சோர்வை மறைக்க கஞ்சி சாப்பிடலாம். பின்னர் ஒரு டம்ளர் மோர் சாப்பிட பேதி நின்றுவிடும்.

இந்த எண்ணெய் சாப்பிடும் நாளில் புளி, நல்லெண்ணெய், கடுகு, மீன், கருவாடு கோழிக்கறி சாப்பிடக் கூடாது. பரங்கிக்காய் , பூசணிக்காய், அகத்திக்கீரை, பாகற்காய் சாப்பிடாமல் தவிர்க்கவும். இந்த எண்ணெயை மூன்று முதல் ஆறு நாட்கள் தினமும் காலையில் சாப்பிட நன்கு பலன் கிடைக்கும்.

எலும்புத் தேய்மானம் குணமடையும்

சிறுநீர்ப்பாதையில் தோன்றும் அரிப்பு, புண் உடலில் உஷ்ணம் தொடர்பான நோய்களை குணமாக்கும் கை,கால் எரிச்சல் குணமடையும். பெண்களுக்குத் தோன்றும் வெட்டை நோய் குணமடையும்.

இம்மருந்து சாப்பிடும் நாளில் கத்தரிப்பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு. அவரைக்காய், பீர்க்கங்காய், போன்றவைகளைக் சேர்த்துக்கொள்ளலாம். மூன்று நாட்கள் இந்த மருந்தை சாப்பிட்டு வர மூட்டு வீக்கம் குணமடையும். எலும்பு தேய்மானம் குணமடையும்.

மூட்டு வீக்கத்தை குணமாக்க வாதநாராயண மரத்தின் இலைகளை பறித்து கஷாயமாக்கி அதனை வீக்கம் உள்ள இடத்தில் சூடாக ஊற்றி கழுவ வேண்டும். பிறகு கசாயத்தில் உள்ள இலைகளை மூட்டையாக கட்டி கசாயத்தில் போட்டு ஒத்தடம் தரவேண்டும். இதனால் மூட்டுவலி குணமடையும்

உடைந்த எலும்பு சரியாகும்

முடக்கற்றான் இலையில் அடை தட்டி சாப்பிடுவது போல வாதநாராயண மரத்தின் இலைகளையும் அரியில் போட்டு அரைத்து சூடாக அடை தட்டி சாப்பிடலாம். இந்த இலையில் ரசம் வைத்தும் அருந்தலாம்.

இந்த மரத்தின் பிசினை எடுத்து தண்ணீரில் கரைத்துக் குழைத்து வலி உள்ள இடத்தில் பத்து போட வேண்டும். சில நாளில் வலி குறையும். எலும்பு முறிந்த இடத்தில் இந்த பிசினைத் தடவிக் கட்டினால் மிக விரைவில் எலும்பு கூடும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, August 11, 2011, 10:03 [IST]
Desktop Bottom Promotion