இதய நோயாளிகள் இதமான உணவை சாப்பிடுங்க!

By Mayura Akilan

Healthy Meal Plan
நாம் உண்ணும் உணவும், நமது எண்ணமும்தான் நம்மைத் தாக்கும் நோய்களுக்கு அடிப்படை காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். நாம் எதை சாப்பிடலாம், எப்படிச் சாப்பிடலாம் என்பது நமக்கு தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் உணவு மருந்தாக செயல்படுகிறது. இன்றைய உணவுப் பழக்கத்தினால் உடல் பருமன், உயர்ரத்த அழுத்தம், இதயநோய் போன்றவை பெரும்பான்மையாரை தாக்குகின்றன. எனவே சரியான உணவு உட்கொள்வதன் மூலம் நோயை தீர்க்கலாம். ஏனெனில் உணவும், மருந்தும் இணைந்துதான் நோயைக் குணமாக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சைவ உணவு

இதய நோயாளிகள் தினசரித 1500 கலோரிகள் வரை உணவு எடுத்துக்கொள்ளலாம். உப்பு 2 லிருந்து 3 கிராம் வரை குறைந்த அளவு கொழுப்பு அதாவது 15 கிராம் வரை கொழுப்பு உணவுகள் எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சைவ உணவு உட்கொள்பவர்கள் அதிகாலை ஆடை எடுக்கப்பட்ட பால் அல்லது தேநீர் ஒரு கப் அருந்தலாம்.

காலை உணவாக இரண்டு இட்லிகள் சாம்பாருடன் அல்லது இடியாப்பம் இரண்டு, அல்லது கார்ன் ஃபிளேக்ஸ் அல்லது ஓட்ஸ் கஞ்சி எடுத்துக்கொள்ளவேண்டும். இடைப்பட்ட நேரத்தில் பசிக்கும் போது மோர் அல்லது காய்கறி சூப் அல்லது ஜூஸ் அருந்தலாம். மதிய நேரத்தில் சாதம், சாம்பார் அல்லது பருப்புடன் இரண்டு வகை காய்கறிகள் சாப்பிடலாம். தயிர் அல்லது மோர், ஜெல்லி கலந்த பழ சாலட் அல்லது ஏதாவது ஒரு பழம் இவற்றை சாப்பிடுவது நல்லது.

மாலை நேரத்தில் அதிக நீர் கலந்த தேநீர் அல்லது ஆடை எடுக்கப்பட்ட பால் ஒரு கப், பிஸ்கட், சுண்டல் அல்லது காய்கறி கலந்த சாண்ட்விச் இரண்டு சாப்பிடவேண்டும். இரவு நேரத்தில் எண்ணெய் விடாத சப்பாத்தி இரண்டு, காய்கறிக் கூட்டு, பருப்பு, மோர் சாப்பிடலாம். படுக்கச் செல்லுமுன் ஆடை எடுக்கப்பட்ட பால் அருந்துவது நல்லது.

அசைவ உணவு

அசைவ உணவு உண்பவர்கள் காலை நேரத்தில் ஆடை எடுக்கப்பட்ட பாலுடன் சிறிது சர்க்கரை சேர்த்து உட்கொள்ளலாம். அத்துடன் ஒரு அவித்த முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து உண்ணலாம். கொள்ளலாம்.

இடைப்பட்ட நேரத்தில் கொழுப்பில்லாத இறைச்சி சூப் அல்லது கோழி சூப் அருந்தலாம்.

மதிய நேரத்தில் சாதத்துடன் கோழிக்கறித் துண்டு இரண்டு அல்லது மீன்கறித் துண்டுகள் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம்.

இரவு நேரத்தில் எண்ணெய் விடாத இரண்டு சப்பாத்தி அதனுடன் ஒரு கிண்ணம் சிக்கன் குருமா மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

நோய் வருமுன் நம் ஆரோக்கியத்தைக் காக்க ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு தேவை. இருந்தாலும் நோய் வந்த பிறகும் மனம் நொந்துவிடாமல் உணவு வகைகளால் நோய் முற்றி விடாமல் நம் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கலாம். விருந்தும் வேண்டாம், விரதமும் வேண்டாம்' என்பதே மருத்துவர்களின் அறிவுரையாகும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Saturday, March 3, 2012, 12:20 [IST]
Desktop Bottom Promotion