For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறைந்த விலையில் அதிக ஆரோக்கியம்

By Mayura Akilan
|

காய்கறிகளின் விலை தினம் தினம் உச்சிக்குச் சென்றுகொண்டிருக்கிறது. ஆரோக்கியமாக வாழ தினம் ஒரு காயாவது வாங்கி சமைத்து உண்ண வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஆனால் காய் வாங்க காசில்லாதவர்களும், தினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் எந்த நோயும் அண்டாது. அந்த அளவிற்கு எண்ணற்ற சத்துக்கள் கீரையில் அடங்கியுள்ளன.

அதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள் உங்களுக்காக:

சிறுகீரை

சிறுகீரையைப் பற்றி தெரியாதவர் யாருமில்லை. சிறுகீரை செம்புச்சத்தும், உஷ்ணவீர்யமும் உடையது. குடல், இருதயம், மூளை, ரத்தம் இவைகளுக்கு நல்ல வலிமையை தரும். சிறுகீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் இருதய வியாதிகள் போகும். விஷ மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுகீரையை வெறும் மிளகுடன் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் பாஷானத்தின் வீறு தணிந்து அதனால் வந்த வியாதியும் குணமடையும்.

முளைக்கீரை

முளைக்கீரையை உண்ணுவதால் சொறி, சிரங்கு, நரம்பு தளர்ச்சி குணமடையும். எலும்பு வளர்ச்சியடையும், மாலைக்கண் பார்வை குறைவு நீங்கும். அஜீரணக்கோளாறு,வயிற்றுப்புண் சரியாகும். வாரத்திற்கு இருமுறையாவது முளைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல், நீரடைப்பு குணமாகும். மூக்கு, தொண்டை, வாய், பல் தொடர்புடைய நோயுடையவர்கள் தினசரி சாதத்துடன் முளைக்கீரையை சாப்பிட்டு வந்தால் அவை குணமடையும், உடலுக்கும் நல்லது.

சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தினசரி முளைக்கீரை கொடுத்துவர உடல் வலிமையுடன் வளரும். இந்தக்கீரையில் வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. வைட்டமின் ஏ, பி உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகிறது. உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வேறு எந்த மாத்திரையோ, டானிக்கோ கொடுக்காமல் முளைக்கீரையை மட்டும் கொடுத்துவர அவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.

சாணாக்கீரை

இந்தக்கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். மகோதரம் என்னும் வியாதியை இது பூரணமாக குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. இது குழிப்புண், ஆறாப்புண்கள், புழுவைத்த புண்களைக் கூட அகற்றிவிடும்.நெஞ்சில் கபம் கட்டியிருக்கும் போது இந்தக்கீரையை சமைத்து சாப்பிட்டால் கபம் உடைந்து வெளியேறிவிடும்.

சிறுபசலைக்கீரை

மலத்தை இளக்கி வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு. இதைச்சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். உடல்சூட்டைத்தணிக்கும். குளிர்ச்சியைத் தரக்கூடியது. கபத்தை உண்டுபண்ணும். சிறுநீர் தொடர்புடைய அனைத்து வியாதிகளையும் குணமாக்கும். இதில் வைட்டமின் பி உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது.

அரைக்கீரை

இதை சாப்பிட்டுவர பித்தம் தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும். அதிக அளவில் சிறுநீர் இறங்குவதை, கட்டுப்படுத்தி இயற்கை அளவுடன் இறங்கச் செய்யும். இரத்த பிரமேகம் என்னும் வியாதியைக் குணப்படுத்தும்.

புளியரைக்கீரை

இதை உட்கொண்டால் மூலம் தொடர்புடைய வியாதிகள் குணமடையும், வாத நோயை தணிக்கும். பித்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கும்.

மிளகு தக்காளி கீரை

உடலில் வீக்கம் இருந்தால் அதை வாடச்செய்யும்.வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை ஆற்றும், சொறி , சிரங்குகளைக் குணப்படுத்தும். பாண்டுரோகம் குணமாகும். வெள்ளை வெட்டை குணமாகும். தேகத்தில் உள்ள புண்களை ஆற்றும். அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் குடல் தொடர்புடைய எந்த வியாதிகளும் வராது.

இலட்சக்கெட்டை கீரை

இந்தக்கீரையை சாப்பிட்டு வர வாதம் தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும், வாயு தொடர்புடைய நோய்கள் தீரும். இவை சாம்பிள்தான். காய்கறி கடைகளில் கிடைக்கும் அனைத்து வகை கீரைகளும் சத்து நிறைந்தவைதான். எந்த சீசனில் என்ன கீரை கிடைக்கிறதோ அவற்றை வாங்கி உட்கொண்டால் ஆரோக்யமாக வாழலாம்.

English summary

Medicinal benefits of Spinach | நோயை விரட்டும் கீரைகள்!

Spinach is rich in essential amino acids, iron, calcium,vitamin A, and folic acid. It is the most inexpensive source of protein,providing as much protein as meat, fish, eggs, chicken do in the same quantity.Spinach is also an excellent source of fiber. The iron in spinach makes it anexcellent vegetable for those suffering from anemia, menopause, or chronicfatigue syndrome.
Story first published: Monday, October 10, 2011, 17:42 [IST]
Desktop Bottom Promotion