தேவையா இந்த மாத்திரைகள்? செலவுகளை அதிகரிக்கச் செய்யும் மருத்துவர்கள்!

By Mayura Akilan

Drugs
சாதாரண காய்ச்சல், தலைவலி என்று சின்ன கிளினிக்கிற்கு போனால் கூட ஐநூறு ரூபாய் வரை மருத்துவர்கள் செலவு வைத்து விடுகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது. பன்னாட்டு, உள்நாடு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் ஆசை வார்த்தைகளுக்கும், பரிசுப் பொருட்களுக்கும் இணங்கி மருத்துவர்களில் பலர் நோயாளிகளுக்கு தேவையில்லாத மருந்துகளை பரிந்துரை செய்கின்றனர் என்ற குற்றசாட்டு சமீபகாலமாக உருவாகியுள்ளது. .

கையில் காசே இல்லாத ஏழைகள் என்றால் அரசு மருத்துவமனைக்கு செல்வார்கள். அதிக அளவில் பணம் வைத்திருக்கு வசதி படைத்தவர்கள் கார்ப்பரேட் மருத்துவமனைகளை நாடுவார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே சின்ன மருத்துவமனைகளையும், கிளினிக் வைத்திருக்கும் டாக்டர்களிடமும் செல்கின்றனர்.

கார்ப்பரேட் மருத்துவர்களைப் போல இந்த மருத்துவர்களும் தற்போது பொது மக்களை ஏமாற்றத்தொடங்கிவிட்டனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. 50 ரூபாய் கன்சல்ட்டிங் பீஸ் டோக்கனுக்கு வாங்கும் மருத்துவர்கள் சின்னதாய் ஒரு சோதனை செய்துவிட்டு 200 ரூபாய்க்கு மாத்திரை எழுதிக்கொடுக்கின்றனர். இதனால் சாதாரண காய்ச்சல் முதல் உக்கிரமான நோய்கள் வரை நோயாளிக்கு ஆகும் செலவு பன்மடங்கு அதிகரிக்கிறது. அதுவும் நிலையாக சில மாத்திரைகளையும் மருந்துகளையும் வாழ்நாள் முழுதும் எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.

தேவையில்லாத முக்கியமற்ற வைட்டமின்கள், டானிக்குகள், இருமல் மருந்துகள் ஆகியவையே இந்தியச் சந்தைகளில் அதிகம் விற்கும் மருந்து மாத்திரைகளாக உள்ளன. பெரிய நிறுவனங்களின் லாபத்தை இவையே தீர்மானிக்கின்றன.

இந்தியச் சந்தையில் அதிகமாக விற்பனையாகும் ஒரு மருந்து எது தெரியுமா? பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் இருமல் மருந்துதான் அது! சுமார் ரூ.200 கோடிக்கு ஆண்டொன்றுக்கு இந்த இருமல் மருந்து விற்றுத் தீர்க்கப்படுகிறது. மருத்துவர்கள் இதுபோன்ற தேவையற்ற மருந்துகளை மேலதிகமாக பரிந்துரை செய்வதால் எந்த வித சிகிச்சை மதிப்பும் இல்லாத சொத்தை மருந்துகள் கூட இந்தியாவில் அதிகம் விற்று கொழுக்கின்றன!

அதேபோல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளின் கலவை அடங்கிய மருந்துகளை பரிந்துரை செய்வது அதிகமாகியுள்ளது. பொறுப்பற்ற முறையில் கூட இந்த மருந்துப் பரிந்துரைகள் செய்யப்படுகின்றன என்பது 2010ஆம் ஆண்டே டெல்லியில் ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது.

மருத்துவர்களின் இத்தகைய பொறுப்பற்ற மருந்துப் பரிந்துரைச் சீட்டுகளை தணிக்கை செய்ய தற்போது மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மூன்று நபர்கள் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் விற்பனைக்கு கொண்டு வரும் மருந்துகள் தேவையானதா? எந்த அளவிற்கு இவை மக்களின் நோய்களை தீர்க்கும் என்று ஆய்வு செய்து இரண்டு மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின்னர் அரசின் அனுமதிக்குப் பின்பே இது சந்தையில் விற்பனைக்கு வரும். காலங்கடந்த முடிவுதான் எனினும் மிகவிரைவில் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

அதேபோல் 5 ரூபாய் மதிப்புள்ள மாத்திரைகள் கூட தனியார் மருந்துக் கடைகளில் 50 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. நடுத்தர மக்களின் நிலையை கருத்தில் கொண்டு வடமாநிலங்களில் உள்ளதுபோல கிராமங்களிலும், நகரங்களிலும் அரசு மருத்துவமனைகளை நிறுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, June 14, 2012, 16:34 [IST]
Desktop Bottom Promotion