உட்கார்ந்த இடத்திலிருந்தே இரத்த சர்க்கரையை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற வழியை ட்ரை பண்ணுங்க...

Diabetes: உலகில் சர்க்கரை நோயானது மில்லியன் கணக்கான மக்கள் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பொதுவான பிரச்சனையாக உள்ளது. அதுவும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக இந்தியாவில் சுமார் 77 மில்லியன் பெரியவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் சுமார் 136 மில்லியனுக்கும் அதிகமானோர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளனர். சில சுகாதார அறிக்கைகள் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 101 மில்லியனாக இருக்கும் என்று மதிப்பிடுகின்றன. அதற்கேற்ப தற்போது இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Diabetes Easy Blood Sugar Fix While Sitting Doctor Arun Kumar Shares Simple Health Tip

சர்க்கரை நோய் என்பது ஒரு நாள்பட்ட ஆரோக்கிய நிலையாகும். இந்நிலையில் உடல் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாது அல்லது இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாது. இதன் விளைவாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக உண்ணும் உணவில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரத்த சர்க்கரை கன்னாபின்னாவென்று அதிகரித்துவிடும். இப்படிப்பட்ட சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தினமும் மாத்திரையை எடுக்க வேண்டியிருக்கும். அதோடு தினமும் லேசான உடற்பயிற்சியில் ஈடுபடவும் வேண்டும்.

இந்நிலையில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே இரத்த சர்க்கரையை குறைக்க உதவும் ஒரு அற்புதமான எளிய வழி குறித்து டாக்டர் அருண்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதில் அவர் கூறியதாவது, "உட்கார்ந்த இடத்தில் இருந்தே இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பைக் குறைக்க வேண்டுமா? அப்படியானால் அதற்கு ஒரு அருமையான வழி உள்ளது. அது தான் சோலியஸ் புஷ்-அப் (Soleus push-up). அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைகழத்தில் உள்ள பேராசிரியர் ஹாமில்டன் அவர்களின் குழு இரத்த சர்க்கரையைக் குறைக்க ஒரு அற்புதமான வழியை கண்டுபிடித்தனர். அதுவே சோலியஸ் புஷ்-அப்.

இந்த பயிற்சியானது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே நமது பாதத்தின் பின்புறம், அதாவது குதிகால்களை மட்டும் தூக்கி இறக்குவது ஆகும். இப்படி செய்யும் போது, கால்களின் பின்புறத்தில் உள்ள தசைகள் ஆற்றலுக்காக நமது தசைகளில் உள்ள கிளைகோஜனை பயன்படுத்தாமல், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸையும், விஎல்டிஎல் கொழுப்பில் உள்ள ட்ரைகிளிசரைடு கொழுப்பையும் பயன்படுத்துகிறது.

எனவே இந்த பயிற்சியை உணவு உட்கொண்ட பின் உட்கார்ந்தவாறே செய்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது 50 சதவீதம் குறையும் என்றும், இரத்தத்தில் உள்ள விஎல்டிஎல் கொழுப்பில் உள்ள ட்ரைகிளிசரைடு கொழுப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்பு தன்மை குறைவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்றும் டாக்டர் அருண்குமார் கூறினார்.

எனவே நண்பர்களே! உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கும் போது கண்டதை சாப்பிட்டு, இரத்த சர்க்கரையை மேலும் அதிரிக்காமல், குதிகால்களை மேலும் கீழும் அசைத்தவாறு உட்காருங்கள். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு மட்டுமின்றி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பையும் திறம்பட குறைக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion