தயிர் Vs மோர் - இவற்றில் உடல் சூட்டைக் குறைக்க எது சிறந்தது?

Curd Vs Buttermilk: கோடைக்காலம் என்பதால் பெரும்பாலானோரின் தினசரி உணவில் தயிர் அல்லது மோர் இடம் பிடித்திருக்கும். ஏனெனில் இவை கொளுத்தும் கோடையில் உடலுக்கு ஒருவித இதத்தை, குளிர்ச்சியை அளிக்கும். ஆனால் தயிர், மோர் இவற்றில் உடல் சூட்டைக் குறைப்பதில் எது சிறந்தது என்ற ஒரு கேள்வி பலருக்கும் இருக்கும்.

ஏனென்றால், கோடையில் தயிர், மோர் என இரண்டையுமே நாம் அதிகளவில் உட்கொள்கிறோம். இதனால் எது சிறந்தது என்பது பலருக்கு சரியாக தெரியவில்லை. உங்களுக்கும் இந்த கேள்வி மனதில் உள்ளதா? அப்படியானால் இக்கட்டுரையில் அதற்கான விடையை நீங்கள் பெறலாம்.

Curd Vs Buttermilk: Which Is Better To Beat Heat In Tamil

கோடைக்காலம் என்று வரும் போது யாருக்குமே காரசாரமான உணவுகளை சாப்பிட பிடிக்காது. ஏற்கனவே அதிகமாக வியர்க்கும் சூழ்நிலையில் காரமான உணவுகளை உட்கொண்டால், அது உடல் சூட்டை இன்னும் அதிகரித்து, வியர்வையை அதிகம் வெளியிடச் செய்யும். இதனால் நிறைய பேர் கோடையில் தயிர், மோரை தங்கள் உணவில் அதிகம் சேர்க்கிறார்கள். தயிர், மோர் என இரண்டுமே உடலுக்கு நன்மைகளை விளைவிக்கும் சத்துக்களைக் கொண்டவை தான்.

தயிர் மற்றும் மோர்

தயிர், மோர் ஆகிய இரண்டுமே பாலில் இருந்து பெறப்பட்டவை தான். இவை இரண்டிலுமே குடலுக்கு நன்மை விளைவிக்கும் புரோபயோடிக்குகள் உள்ளன. ஆனால் ஒன்றில் இருந்து மற்றொன்றாக மாறும் போது, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தன்மைகளில் லேசான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அவற்றில் தயிர், மோர் என இரண்டிலும் உள்ள சத்துக்களைக் குறித்து கூற வேண்டுமானால், மோரில் கால்சியம், வைட்டமின் பி12, ஜிங்க், ரிபோஃப்ளேவின் மற்றும் புரோட்டீன்கள் போன்றவை உள்ளன. இதனால் மோர் குடிப்பது எலும்புகளை ஆரோக்கியமாக பராமரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், புற்றுநோயைத் தடுக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் பெரிதும் உதவுகின்றன.

அதே சமயம் தயிரில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி12, வைட்டமின் பி5, வைட்டமின் பி2. பொட்டாசியம் மற்றும் புரோட்டீன்கள் போன்றவை அதிகம் உள்ளன. இதனால் இதை உட்கொள்ளும் போது, அது ஹைப்பர் டென்சன் மற்றும் இதய நோய்களைத் தடுக்கின்றன, பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, முக்கியமாக பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.

எப்போது குடிக்கலாம்?

என்ன தான் தயிர், மோர் ஆரோக்கியமான உணவுப் பொருட்களாக இருந்தாலும், அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும். அதில் தயிரை இரவு நேரத்தில் உட்கொள்ளக்கூடாது என ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளை. ஏனெனில் இந்த நேரத்தில் செரிமான மண்டலம் வலுவாக இருக்கும்.

அதேப் போல் மோர் நீர் வடிவில் இருப்பதால், இதை ஒரு நாளின் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் மோரைக் குடிக்க சிறந்த நேரம் காலை உணவிற்கு 15 நிமிடங்களுக்கு முன் குடிப்பது தான். உங்களுக்கு ஏற்கனவே வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், மோரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

எது குளிர்ச்சியானது?

மோர், தயிர் என இரண்டுமே உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். ஆனால் தயிரை விட மோர் நீண்ட நேரம் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். ஏனெனில் மோரானது நீர் வடிவில் உள்ளது. மேலும் ஆயுர்வேத மருத்துவ முறைப்படி, தயிர் என்பது தினசரி உணவில் சேர்க்கக்கூடாத உணவுப் பொருள். தினமும் தயிரை உட்கொண்டால், அது உடலில் கொழுப்புக்களை அதிகரிக்கும், சரும பிரச்சனைகள், சுவாச பிரச்சனைகள், இருமல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

அதுவே மோரை தினமும் உட்கொண்டால், அது உடலில் பல்வேறு நோய்களை சரிசெய் உதவுகிறது. குறிப்பாக இது கால்சியம் குறைபாட்டை போக்குவதோடு, நீரிழப்பு பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. மேலும் மோர் உடலில் உள்ள தேவையற்ற தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்குகிறது, செரிமான செயல்முறைக்கு உதவுகிறது. வாய் மற்றும் வயிற்று அல்சரை குணப்படுத்துகிறது.

ஆயுர்வேதத்தின் படி, பைல்ஸ் இருப்பவர்கள் தயிர் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக மோரை மட்டுமே குடிக்க வேண்டும். என்ன தான் மோர் தயிரில் இருந்து வந்தாலும், கோடையில் குடிக்க சிறந்தது என்றால் அது மோர் தான். எனவே கோடையில் மோரைக் குடித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, April 25, 2023, 17:22 [IST]
Desktop Bottom Promotion