எச்சரிக்கை! இருமல் மருந்தை இந்த அளவுக்கு மேல எடுக்காதீங்க.. இல்லன்னா கோமாவுக்கே போயிடுவீங்க..

Cough Syrup Side Effects In Tamil: குளிர்காலம் என்பதால் நிறைய பேர் சளி, இருமல் பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவார்கள். சளி, இருமல் பிரச்சனைக்கு சிலர் எடுத்தவுடனேயே கை வைத்தியங்களைப் பார்ப்பார்கள். இன்னும் சிலர் மருத்துவர் ஏற்கனவே பரிந்துரைத்த இருமல் மருந்துகளை வாங்கி அவற்றைக் குடிப்பார்கள்.

மேலும் தற்போது கடைகளிலும் ஏராளமான இருமல் மருந்துகள் விற்கப்பட்டும் வருகின்றன. இருமல் மருந்துகளானது சுவாசப் பாதையில் உள்ள சளியை இளகச் செய்து, தசைகளை தளர்த்தி, சிரமமின்றி சுவாசிப்பதற்கு உதவுகிறது.

Cough Syrup Side Effects: What Happens When You Overdose On A Cough Syrup In Tamil

பொதுவாக இருமல் பிரச்சனையின் போது, சளி வெளியேறும். அப்படி சளி வெளிவரும் போது சுவாசப்பாதை மற்றும் நுரையீரல்கள் சுத்தமாகும். நுரையீரலில் சளி அதிகம் தேங்கியிருந்தால், அதன் விளைவாக நெஞ்சு நெரிசல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அதுவும் தொடர்ச்சியாக இருமலை சந்திக்கும் போது அது மிகுதியாக சோர்வடையச் செய்து, தொண்டையில் புண்ணை ஏற்படுத்திவிடும். நாள்பட்ட இருமல் பிரச்சனை நுரையீரல் மற்றும் நெஞ்சு தசைகளில் அழுத்தத்தை அதிகரித்து, ஒருவித வலியை உண்டாக்கிவிடும்.

ஆகவே தொண்டைப் பகுதியை ரிலாக்ஸ் அடைய செய்யவும், இருமல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறவும் இருமல் மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இருமல் மருந்துகளில் டெக்ஸ்ட்ரோமெத்தோர்ஃபன் அல்லது DXM என்னும் கலவை இருக்கும். இது மூளையின் மையப் பகுதியை பாதித்து, இருமல் வருவதைக் கட்டுப்படுத்தும். மேலும் இந்த கலவை அழற்சியை ஏற்படுத்தும் ஹிஸ்டமின்களின் விளைவுகளைத் தடுக்கவும் உதவுகிறது.

CDC-யின் கூற்றுப்படி, ஒருவரது உடல் எடைக்கு ஏற்ப DXM அளவு தேவைப்படும். அதில் பெரியவர்களை எடுத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு இரண்டு முறை 15-20 மிகி எடுக்க பரிந்ததுரைக்கப்படுகிறது. ஆனால் கட்டுப்பாடு இல்லாமல், ஒருவர் அதிகளவில் DXM அளவை எடுத்தால், அது மாயத்தோற்றம் மற்றும் பரவச உணர்வுகளை ஏற்படுத்தும். இன்னும் தீவிர நிலையில், இது ஒருவரது உயிருக்கே ஆபத்தை கூட ஏற்படுத்தலாம்.

பயங்கர பக்கவிளைவுகள்

ஒருவர் அளவுக்கு அதிகமாக DXM உள்ள இருமல் மருந்துகளை எடுத்தால், அது ஒருவரது மனநிலையை கணிக்க முடியாத அளவில் ஆபத்தான நடத்தைக்கு வழிவகுத்துவிடும். அதுவும் இருமல் மருந்தை ஒருவர் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தால், ஒரு கட்டத்தில் அது அடிமையாக்கி, ஒட்டுமொத்த நல்வாழ்வையே பாதித்துவிடும். இது தவிர சிலருக்கு இருமல் மருந்து ஓவர்டோஸ் ஆகும் போது வலிப்புகளை ஏற்படுத்தி, நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். இருமல் மிருந்துகளை அதிகமாக குடிப்பதால் சந்திக்கும் பிற மோசமான விளைவுகள் பின்வருமாறு:

* ஒரு நிமிடத்திற்கு 100-க்கும் அதிகமாக இதயம் வேகமாக துடிக்கும்.
* மன நோயால் பாதிக்கப்பட நேரிடும்.
* கண்கள் பிதுங்கும்
* மூச்சுத்திணறல் ஏற்படும்
* தசைத் திசுக்கள் உடைத்தெறியப்பட்டு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக்கூடும்.

அதோடு அந்த இருமல் மருந்தில் உள்ள சில பொருட்கள் இதயத் துடிப்பை அதிகரித்து, படபடப்பை அதிகரித்து, நரம்புகளை மோசமாக பாதிக்கும் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும். அதுமட்டுமின்றி வயிற்று வலி, பெருங்குடல் பாதிப்பு, தோலில் சிவப்பு நிற தடிப்புகள் ஏற்படுவது போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். முக்கியமாக 600 மிகி அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் DXM எடுக்கும் போது, அது ஒரு கட்டத்தில் கோமாவிற்கே கொண்டு சென்று, மரணத்தை கூட ஏற்படுத்தக்கூடும்.

எனவே உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைகளுக்கு சளி இருமல் பிடித்திருந்தால், நீங்களாகவே இருமல் மருந்துகளைக் கொடுக்காமல், மருத்துவரிடம் சென்று, அவரின் பரிந்துரையின் பேரில், அவர் கூறும் அளவில் மட்டும் இருமல் மருந்துகளை எடுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, January 11, 2024, 13:40 [IST]
Desktop Bottom Promotion