அக்குள் ரொம்ப நாற்றமடிக்குதா? அப்ப தினமும் குளிச்சதும் இதுல ஒன்ன அக்குளில் தேயுங்க போதும்...!

Smelly Armpits In Tamil: வியர்வை என்பது ஒரு இயற்கையான நிகழ்வு. உடல் அதிகமாக வெப்பமடைந்தால், உடலை குளிர்ச்சியடையச் செய்ய வியர்வை உற்பத்தி செய்யப்படும். எனவே ஒருவருக்கு ஏற்படும் வியர்வையை தவிர்க்க முடியாது. வியர்வையானது வாசனையற்றது மற்றும் உடலுக்கு நல்லது என்றாலும், சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களுடன் வியர்வை சேரும் போது, துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன.

பெரும்பாலும் ஒருவர் அதிக வெப்பமான சூழலில் இருந்தால், உடற்பயிற்சி செய்தால், அதிகமாக பதற்றமடைந்தால் வியர்க்கும். மேலும் வியர்வையானது உடலின் காற்றோட்டம் குறைவாக உள்ள பகுதியில் இன்னும் அதிகமாக இருக்கும். அதுவும் அக்குள் பகுதியில் தான் அதிகமான வியர்வையான கடுமையான துர்நாற்றம் வீசும். இப்படி அக்குளில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க கடைகளில் ஏராளமான டியோடரண்ட்டுகள் விற்கப்படுகின்றன.

Smelly Armpits: Tricks To Get Rid Of Underarm Odor Naturally In Tamil

ஆனால் டியோடரண்ட்டுகளில் கெமிக்கல்கள் இருப்பதால், அனைவருக்குமே இது செட் ஆகாது. ஆனால் அக்குளில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க ஒருசில இயற்கை பொருட்கள் பெரிதும் உதவி புரியும். அதுவும் நமது சமையலறையில் உள்ள சில பொருட்களே அக்குளில் வீசும் துர்நாற்றத்தை போக்கும். கீழே அந்த இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் உங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலனைப் பெறுவீர்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது அக்குளில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். அதற்கு ஒரு பஞ்சுருண்டையை எடுத்து, ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து, அக்குளில் தடவ வேண்டும். இப்படி தினமும் காலையில் குளித்து முடித்த பின் மற்றும் இரவு தூங்கும் முன் அக்குளில் தடவி வந்தால், அக்குள் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.

லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெய் நல்ல நறுமணத்தைக் கொண்டிருப்பதோடு, அதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இருப்பதால், அக்குளில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும். அதற்கு ஒரு டம்ளர் நீரில் 4-5 துளிகள் லாவெண்டர் எண்ணெயை சேர்த்து கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அதை அக்குளில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இப்படி தினமும் இரண்டு வேளை பயன்படுத்தினால், அக்குள் துர்நாற்றம் தடுக்கப்படும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை அக்குளில் கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்காளை அழிக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை அக்குளில் தடவி 2-3 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும்.

அதுவும் வாரத்திற்கு ஒருமுறை தான் இதை செய்ய வேண்டும். சிலருக்கு இந்த வழி அரிப்பு அல்லது எரிச்சலை உண்டாக்லாம். அத்தகையவர்கள் இந்த வழியை தவிர்க்கவும். சென்சிடிவ் சருமத்தைக் கொண்டவர்கள் எலுமிச்சை சாற்றிற்கு பதிலாக நீரை கலந்து பயன்படுத்தலாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன மற்றும் இது சருமத்தின் pH அளவைக் குறைக்கும். அதற்கு பாதி எலுமிச்சையை எடுத்து, அதை நேரடியாக அக்குளில் தேய்த்து, உலர வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். ஒருவேளை சென்சிடிவ் சருமத்தைக் கொண்டிருந்தால், எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதை அக்குளில் தடவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை மேற்கொண்டால், அக்குள் துர்நாற்றம் தடுக்கப்படும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் சக்தி வாய்ந்த ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இவை துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதோ, சருமத்தின் pH அளவை சமநிலையில் பராமரிக்க உதவும். அதற்கு தேங்காய் எண்ணெயை அக்குளில் தேய்க்க வேண்டும். இப்படி தினமும் குளித்த பின் தடவ வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. எனவே இது அக்குள் துர்நாற்றத்தைப் போக்க பெரிதும் உதவி புரியும். அதற்கு கற்றாழை ஜெல்லை இரவு தூங்கும் முன் அக்குளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, பின் மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால் அக்குள் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு உடலில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, உடல் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும். அதற்கு 1 கப் எப்சம் உப்பை குளிக்கும் நீரில் போட்டு, அந்நீரில் குளிக்க வேண்டும். இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளித்தால், உடல் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு அக்குளில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான pH அளவைக் குறைக்கும். அதற்கு ஒரு உருளைக்கிழங்கை எடுத்து, அதை வெட்டி, அக்குளில் தேய்த்து, உலர வைக்க வேண்டும். அதன் பின், மேலே டியோடரண்ட்டைப் பயன்படுத்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை பயன்படுத்தினால் அக்குள் துர்நாற்றம் தடுக்கப்படும்.

Story first published: Saturday, May 20, 2023, 14:20 [IST]
Desktop Bottom Promotion