முகக்கறுப்பு, முகப்பரு போகவில்லையா?

By Maha

Skin Care
கோடைக்காலம் ஆரம்பித்த நிலையில் அக்னி வெயிலின் தாக்கமும் ஆரம்பிக்கப் போகிறது. இதனால் நாம் நம் முகத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பாதுகாக்காவிடில் சருமம் வறண்டு கறுப்பாக மாற ஆரம்பித்துவிடும். ஏனெனில் வெயிலின் தாக்கத்தால் நம் முகத்திலுள்ள செல்கள் இறந்து படிந்து விடுகின்றன. இவற்றை அகற்ற நாம் சிலவற்றை செய்ய வேண்டியுள்ளது.

என்ன செய்யலாம் என்று பார்ப்போமா....?

வேப்பிலை, புதினா, மருதாணி, குப்பைமேனி ஆகியவற்றைத் தனித்தனியாக காயவைத்துப் பொடியாக்கி, அவற்றைச் சமஅளவு எடுத்து பாலில் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற விடவும். பின்னர் முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகக்கறுப்பு , முகப்பரு மாறுவதுடன் முகம் பளபளப்பாக மாறும்.

பாதாம் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

நன்கு பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து அத்துடன் சிறிதளவு மைதா மாவு கலந்து முகத்தில் பூசி , சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகக்கருமை மாறி பளபளப்பாக இருக்கும்.

பப்பாளி பழச்சாறு எடுத்து அதில் காய்ச்சாத பசும் பால் விட்டு அல்லது தயிர் விட்டு குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து முகத்தை கழுவவும். இதனால் முகத்தில் உள்ள முகச்சுருக்கம், முகக்கருமை நீங்கும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் சிவப்பு சந்தனக் கட்டையை நீரில் உரைத்து முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் முகப்பரு, பருவினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மறையும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் புதினா சாறு எடுத்து அதில் சம அளவு எலுமிச்சம் பழச்சாறு கலந்து அதில் பயற்றம் மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கட்டி வைத்து ஒற்றடம் கொடுத்தால் முகம் பொலிவுடன் பளபளப்பாக காணப்படும்.

Story first published: Friday, May 4, 2012, 16:27 [IST]
Desktop Bottom Promotion